நந்திதாவை பற்றி சொல்ல ப்ரியாவிற்கு தயக்கமாக இருந்தது!
ஆனால் மூளை இடித்துரைத்தது!
சில நாட்களுக்கு முன்பு வரை ப்ரியா இருந்த நிலைக்கு ரேவதியின் உதவி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகி இருப்பாளோ! இப்போது அவள் ரேவதிக்கு விசுவாசமாக இருப்பது தான் சரி! தெரிந்ததை சொல்ல போகிறாள் அவ்வளவு தானே... இதில் தவறு எதுவும் இல்லை...
முடிவு செய்து விட்டு ரேவதியின் அறை நோக்கி சென்றாள் ப்ரியா.
✽✽✽
ப்ரியா சொன்னதை கவனத்துடன் கேட்ட ரேவதியின் முகம் கோபத்தில் சிவந்து பளபளத்தது.
“எனக்கு அப்போவே சந்தேகம் இருந்துது!!!!”
“நான் சொன்னதெல்லாம் நான் பார்த்த விஷயங்கள் தான் ஆன்ட்டி... அதாவது என்னோட அனுமானங்கள் மட்டுமே,” என்றாள் ப்ரியா தயக்கத்துடன்.
“அப்படியே இருக்கட்டும்! ஆனாலும் இதை இப்படியே விட்டு வைக்க கூடாது. முளையிலேயே கிள்ளி போட்டுறனும்... இன்னைக்கே இதை முடிவுக்கு கொண்டு வரேன்,” என்றாள் ரேவதி கோபத்துடன்!
✽✽✽
நாகுவை பார்க்க தன் அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த நந்திதா, அவள் இருந்த அறையின் நேர் எதிரே இருந்த உதயின் அறை பக்கம் செல்லாமல், எதிர் திசையில் சுற்றிக் கொண்டு நடந்தாள்.
அவளுக்குள்ளே என்னவென்று சொல்ல முடியாத கலவரம் + குழப்பம் ஏற்பட்டிருந்தது...