ஒரு சில வினாடி தயக்கத்திற்கு பின், “சுமி... இன்னைக்கு உன் ஃப்ரென்ட்... டாக்டர் ஹேமா எனக்கு ஃபோன் செய்தாங்க,” என்றான்.
“ஹேமாவா? அவ எதுக்கு உங்களுக்கு ஃபோன் செஞ்சா?”
ஹேமாவின் கிளினிக்கிற்கு மாலையில் சென்றதையும், ஹேமா அவனிடம் சொன்ன விஷயத்தையும் சுமித்ராவிடம் ஒப்பித்த கமல், அதற்கு மேல் தன்னால் பாரத்தை தாங்க இயலாது என நினைத்தவனை போல சுமித்ராவை அணைத்து அவளின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
சுமித்ரா உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தாள்!
கமலின் ஆஃபிசில் எதுவோ பிரச்சனை... அல்லது... பணப் பிரச்சனை... மேனேஜர் பிரச்சனை.. என கமலின் அலுவலகத்தில் எதுவோ என்று யோசித்திருந்தவள் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை...
ஆனால் கமல் உண்மையை அவளிடம் சொன்னதற்காக அவள் வருத்தப் படவில்லை... அவனால் அவளிடம் எதையும் மறைக்க முடியாது என்பது அவளுக்கு தெரியும்...
கேன்சர், அவளுக்கு கேன்சர்... அதிலும் முற்றிய நிலையில் இருக்கும் கேன்சர்...
சில நிமிடகளுக்கு முன் கூட படிகள் ஏறி வரும் போது வயதானால் எப்படி ஏறி வருவது என்று யோசித்தாளே...! நூறு வருடங்களுக்கு குறையாமல் வாழப் போவதாக அவ்வளவு நம்பிக்கை...!
வாய் விட்டு சிரிக்க வேண்டும்... கூடவே அழவும் வேண்டும்... என அவளுக்கு தோன்றியது...!
தோளில் உணர்ந்த நீர், கணவன் கண்ணீர் சிந்துவதை சொல்ல, தானாக அவளின் கைகள் அவனுக்கு ஆறுதல் சொல்வது போல அவனின் கேசத்தை வருடியது...