“இளவரசி, நீங்க சொல்றது சாதாரண விஷயங்களுக்கு சரி தான். உலகத்துல பெண்கள் தனியாகவே எவ்வளவோ செய்றாங்க. உங்க திறமையிலும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. ஆனால் ஆயிரகணக்கான மக்களுக்கு ராணியா இருந்து தலைமை தாங்குறது என்பது வேற விதம்! உங்களுக்கு அதில் அனுபவம் இல்லைங்குறது மட்டுமில்லாமல் உங்களுக்கு பக்கத்தில் இருந்து சரியாக வழி காட்ட நம்பகமானவர் அவசியம். அந்த நம்பகமானவர் உங்க கணவரா இருப்பது உங்களுக்கு பாதுகாப்பும் கூட! விக்ரம் ரொம்ப நல்லவர். இந்த தீவுக்காகவே எதையும் செய்பவர்,” என தன் காரியத்திலேயே கண்ணாக பேச்சை தொடர்ந்தார்.
ரோஹினிக்குள் கோபம் குமுறியது!
“அதான் தெரியுமே, என்னை கல்யாண செய்துக்குற பெரிய்ய்யய்ய்ய்யய்ய்ய தியாகத்தையும் விக்ரம் செய்வார்!!!”
“உங்க நன்மைக்காக தான் சொல்றேன்... இப்படி பிடிவாதம் பிடித்தால் எப்படி இளவரசி?”
இந்த கேள்வியை ரோஷன் கேட்டு முடித்தப் போது, “ஹ்க்கும்...” என யாரோ பக்கத்தில் தொண்டையை சரி செய்யும் ஓசைக் கேட்டது.
ரோஹினி, ரோஷன் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
அறையின் வாயிலருகே விக்ரம் நின்றிருந்தான்.
முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் விக்ரமின் தோற்றத்தில் எந்த குறையையும் ரோஹினியால் காண முடியவில்லை.
ஆறடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் தான் இருந்தான்.
நிமிர்ந்து நேராக அவளின் கண்களை பார்க்கும் அந்த கண்களில் நேர்மையும், கூர்மையும் பளிச்சிட்டது!