அங்கே பிஸ்கட் பெயரை சொல்லிக் கேட்டு வாங்கிய போது, கடைக்காரரின் கை எதேச்சையாக படுவது போல அவள் மீது படவும் தீ சுட்டது போல கையை உதறிக் கொண்டாள் சரண்யா!
கீழே விழுந்த பிஸ்கட் பேக்கட்டை எதுவுமே நடக்காதது போல எடுத்து நீட்டிய படி, “இப்போ தான் ஆஃபிஸ்ல இருந்து வரீயா?” என்று ரொம்ப இயல்பாக காட்டிக் கொண்டு கேட்ட கடைக்காரரிடம் லேசாக தலை அசைத்து பதில் சொல்லி விட்டு, பணத்தை வைத்து விட்டு, பிஸ்கட்டை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
முன்பு எப்போதும் ‘ங்க’ போட்டு பேசும் கடைக்காரர் இப்போது சில நாட்களாக உரிமை எடுத்து ஒருமையில் பேசுவதும், உதவி செய்கிறேன் என்று வரிந்துக் கொண்டு வருவதும் அவளுக்கு உறுத்தலாக இருந்தது.
ஒரு பெண் தனியே இருந்தால் எத்தனை விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வருகிறது!
‘ஏன் என்னை இந்த கெட்ட உலகத்துல தனியா விட்டுட்டு போனீங்க கோபி? நிஷா மட்டும் இல்லைன்னா என் வாழ்க்கையை நான் எப்போவோ முடிச்சிருப்பேன்... நிஷாவை எப்படி வளர்க்க போறேன்? செலவுக்கு என்ன செய்ய போறேன்? எனக்கு ஒண்ணுமே புரியலையே...’
கணவனுடன் மானசீகமாக பேசியபடி சுலோச்சனா வீட்டை அடைந்தவள், வெளியே நின்றபடியே, “அக்கா.... நிஷா...” என்று அழைத்தாள்.
சுலோச்சனா மற்றும் அவளின் குடும்பம் நல்ல மாதிரி தான்... ஆனாலும் இப்போதெல்லாம் அவள் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் இரண்டு முகங்களினால் யாருடனும் அதிகம் நெருங்கி பழகாமல் தள்ளியே இருந்தாள் சரண்யா...
அவள் குரல் கேட்டு வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்து, “ஹாய் சரண்யா...” என்றபடி நிஷாவை கையில் தூக்கிக் கொண்டு வந்த மைத்ரேயியை முதலில் சரண்யாவிற்கு அடையாளமே புரியவில்லை!