ஆனால் ரேஷ்மியின் மாற்றத்துக்கான காரணத்தையும் அவளால் ஊகிக்க முடிந்தது.
ரோஷனி அப்போது கட்டி இருந்த சேலை இரண்டு வருடங்களுக்கு முன் பொங்கல் பண்டிகைக்காக எடுத்தது. ரோஷனிக்கு அந்த வீட்டில் முதல் பொங்கல் என்பதற்காக சுமித்ரா சேலை வாங்கும் போது அவளுக்கு மட்டும் வாங்காமல் ரோஷனிக்காக என அதே சேலையை வாங்கி கொடுத்திருந்தாள்!
சுமித்ராவும் அவ்வப்போது இந்த சேலையை கட்டுவது உண்டு! அந்த சேலை தான் குழந்தைக்கு அம்மாவை நினைவுப் படுத்தி இருக்க வேண்டும்!
மனதில் மீண்டும் சோகம் பாறாங்கல்லாய் அழுத்த குழந்தையை சுற்றி கைப் போட்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் ரோஷனி. அவளின் கண்ணிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது!
“உனக்கு எதுக்கு வீண் சிரமம், குழந்தையை கொடு, நாங்க பார்த்துக்குறோம்!” பூங்கோதை கேட்கவும், மறுப்பாய் தலை அசைத்தாள் ரோஷனி.
“பரவாயில்லை, இருக்கட்டும்...” என்றவள், ரேஷ்மியை தோளிலேயே போட்டுக் கொண்டு மாடியில் இருக்கும் தங்கள் அறைக்கு சென்றாள்.
அப்படியே தூங்கி போன ரேஷ்மியை தன் மடியிலேயே வைத்திருந்தாள்.
ஒரு மணி நேரம் தூங்கி எழுந்து ரேஷ்மி மீண்டும் ‘அம்மா வேணும்’ என அழவும், கோபப் படாது அவளை தூக்கி கொண்டு சமையலறைக்கு சென்றாள்.
அழுது அடம் பிடித்தவளுக்கு ரோஷனி, கவிதா, பூங்கோதை என மூவருமாக மரம், பூ, செடி, நிலா, நடசத்திரம் என எதை எதையோ காண்பித்து ஊட்டி விட்டார்கள்!
அதற்கு பிறகும் ரோஷனியை விட்டு இறங்க மாட்டேன் என அடம் பிடித்தாள் ரேஷ்மி.