Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 13 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நாட்கள் யாருக்காகவும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தன...
சரண்யா ஃபோகஸ் எலெக்ட்ரானிக்ஸில் மெல்ல மெல்ல வேலையை கற்றுக் கொள்ள தொடங்கி இருந்தாள்... மைத்ரேயி முன்பே சொல்லி இருந்தது போல இந்த வேலையில் அலைச்சல் இருக்க தான் செய்தது...
ஆனால் அப்படி செல்லும் இடங்களில் பலரை புதிதாக சந்தித்து பேசும் வாய்ப்பும் சரண்யாவிற்கு கிடைத்தது.
அதுவே அவள் மனதை திசை திருப்பும் மருந்தாக அமைந்து விட, அவளுக்கு அந்த வேலை மிகவும் பிடித்து போனது.
அவளுக்காக என யோசித்து மைத்ரேயி இந்த வேலையை கொடுத்திருப்பாளோ என்ற கேள்வி அவளுள் பலமுறை எழுந்தாலும், நேராக மைத்ரேயியிடம் அதை அவளால் கேட்க முடியவில்லை...
இத்தனைக்கும் மைத்ரேயி எந்த விதமான பந்தாவும் இல்லாமல் சரண்யா மட்டும் என்றில்லாமல் ஃபோகஸில் வேலை செய்த அனைவருடனுமே இனிமையாகவே பழகினாள்.
வேலை என்று மட்டுமல்லாமல் மைத்ரேயி அந்த கம்பெனியை வழி நடத்தும் விதத்தை கவனித்தும் சரண்யா பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டாள்.
அவளை போலவே மைத்ரேயிக்கும் பணம் ஒன்றே குறிக்கோளாக இல்லை... ஆனால் அதற்காக அவள் கம்பெனியின் நலனில் அக்கறை கொள்ளாமலும் இல்லை...
“நான் இந்த கம்பெனியை நம்பி இல்லை... ஆனால் இங்கே வேலை செய்ற இவ்வளவு பேரும் இந்த கம்பெனியை நம்பி இருக்காங்களே... அதுக்காகவாவது நான் அக்கறை எடுத்தே ஆகனும்,” என்று ஏதோ பேச்சுவாக்கில் மைத்ரேயி சொன்ன போது, சரண்யாவிற்கு தன்னுடைய தவறு புரிந்தது.