ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு மைத்ரேயி பக்கம் பார்த்தாள்.
மித்ரனுக்கு இப்போதும் சரண்யா மீதிருந்த காரணமற்ற கோபம் போகவில்லை போலும்...
“மைத்தி, நீ தான் வேலை போட்டுக் கொடுத்தீயா? பாவம் உன் கம்பெனி. பத்திரமா பார்த்துக்கோ.. இழுத்து மூடுற நிலைமை வந்திட போகுது...”
சரண்யாவை பார்த்த படி நக்கலாக மித்ரன் சொல்ல, மைத்ரேயி கவலையுடன் சரண்யாவை பார்த்தாள்.
சரண்யாவின் முகத்தில் குழப்பம் இருந்தது... மற்றபடி வேறு எதையும் அவளால் யூகிக்க முடியவில்லை.
“சரண்யா... நான் டென் மினிட்ஸ் கழிச்சு உன்னை கூப்பிடுறேன்... வெண்ணிலா டெஸ்க் கிட்ட வெயிட் செய்,” என்றாள் மைத்ரேயி.
வாயே திறக்காமல், சரி என தலை அசைத்து ஏற்றுக் கொண்டு சரண்யா சென்று விட, மைத்ரேயி மித்ரனை பார்த்து முறைத்தாள்.
“என்னை பார்த்து ஏன் முறைக்குற மைத்தி... நான் உன் அண்ணன்...”
“அந்த ஒரே காரணத்துக்காக தான் உன்னை திட்டாம சரண்யாவை வெயிட் செய்ய சொன்னேன்... நீ நடந்துக்குற விதம் சரியே இல்லை... ரொம்ப கேவலமா இருக்கு... சரி... அது பத்தி வேண்டாம்... விடு... நீ வந்த விஷயம் பேசுவோம்,” என பேச்சை மீண்டும் அவர்களின் தலைப்புக்கு மாற்றிய மைத்ரேயி, மித்ரனுக்கு தேவைப்பட்ட விபரங்களை பகிர்ந்தாள்.
பின், மித்ரன் கிளம்பும் போது அவனுடனே வந்தவள்,
“வெளியே சரண்யா இருப்பாங்க... கூடவே வேற நிறைய பேரும் இருப்பாங்க... இங்கே பேசின மாதிரி அங்கே வந்து எதையும் பேசாதே,” என்றாள் கண்டிப்பான குரலில்.