மற்றவர் தெரிந்துக் கொள்ள முடியாததாக வைத்தாரோ என்னவோ!
நந்திதாவிடம் காதலை சொல்லிவிட்டு பரபரக்கும் இதயத்துடன் அவளின் பதிலுக்கு காத்திருந்த உதய்க்கு அவளின் குழப்பம் கலந்த முகபாவம் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது!!!
“நதி, நமக்கு நடுவே இருக்க வயசு வித்தியாசத்தை பத்தி யோசிக்குறீயா என்ன? என்னோட வயசை பத்தி யோசிக்காம மனசளவுல இருக்க மெச்சுரிட்டியை பாரேன்... என்னோட அப்பா இறந்தப்போ எனக்கு வயசு ஏழு... என்ன எதுன்னு புரிஞ்சுக்காம அம்மாவை அப்பா எங்கே எங்கேன்னு கேட்டு ரொம்பவே இம்சை செய்திருக்கேன்... என் அம்மா, அப்பா இடத்தையும் ஃபில் செய்ய ரொம்ப பிரயத்தனப் பட்டாங்க... பதினஞ்சு பதினாறு வயசிலேயே இதெல்லாம் எனக்கு புரிஞ்சது... அப்போ இருந்தே அப்பா இடத்துல இருந்து யோசிச்சு பார்த்து தான் எல்லாம் செய்வேன்... நீயே உன் அப்பாவை நான் ஞாபகப் படுத்துறேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்க...”
உண்மை தான்!
வாயை திறந்து சொல்லா விட்டாலும் அவன் சொல்வதில் இருக்கும் நிஜத்தை நந்திதாவின் மனம் ஏற்றுக் கொண்டது...
உதயை தவிர வேறு ஒருவரிடமும் அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியதில்லை...
அந்த சந்தோஷ்... அவனை பற்றி யோசிக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை... அவளின் சிந்தனையில் வருவதற்கு கூட தகுதி இல்லாதவன் அவன்...
சந்தோஷின் நினைவு தோன்றியதால் நந்திதாவின் முகத்தில் மெல்லிய மாற்றம் வந்தது...
அவளையே கவனித்துக் கொண்டிருந்த உதய்க்கு அந்த முக மாற்றத்திற்கான உண்மை காரணம் தெரியாததால், “இது ஏதோ இன்ஃபேச்சுவேஷனோ, நான் சடனா யோசிச்சதோ இல்லை நதி... பொறுமையா, அலசி ஆராய்ந்து, உன் மேல எனக்கு இருக்கிறது உண்மையான அன்புன்னு புரிஞ்சு சொல்றது... ப்ளீஸ் நதி... என்னை புரிஞ்சுக்கோ,” என்றான் மன்றாடும் குரலில்!