ஆனால் அஜய்க்கு திருமணம் நடப்பது அத்தனை எளிதாக இல்லை...
அவனுக்கு பிடித்தது போல பெண்ணை தேடி, தேடி திக்குமுக்காடி போயிருந்தாள் சாரதா...!
அவனுக்கு பிடித்த பெண் எப்போது வருவது... எப்போது இவர்களின் திருமணம் நடப்பது???
ஒரு பெருமூச்சுடன், “அந்த பேச்சை விடுங்க அத்தை...! உங்க வீட்டுக்கு வர கெஸ்ட் மஹாராணி, உலகத்துல உள்ள அதிசய பொண்ணை தேடிட்டு இருக்க உங்க சீமந்த புத்திரன் மனசை கவரும் பொண்ணா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்,” என்றாள் நிரஞ்சனா.
நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவள் உண்மையிலேயே மஹாராணி தான் என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சாரதா! ஆனால் அதை வெளிப்படையாக எதிர்கால மருமகளிடம் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்!
✽✽✽
“ப்ச்.. என்னம்மா நீங்க.... இப்படி ஆஃபிஸ் டைம்ல ஏர்போர்ட்டுக்கு வர சொல்றீங்க???”
சாராதாவின் கைமணத்தில் சுவையும் நறுமணமுமாக இருந்த வெஜிடபிள் கிச்சடியை வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டே சிறுவனைப் போல சினுங்கியப் படி கேட்டான் அஜய்.
“அஜய், இப்படி அலுத்துக்கிட்டு நீ ஒன்னும் வர வேண்டாம். நானே உபெர்’ல போயிக்குறேன்... விஜய்க்கு மட்டும் இன்ஸ்பெக்ஷன் இல்லைனா இந்த பிரச்சனையே இல்லை... அவன் சிணுங்காம சந்தோஷமா வருவான்,” என்றாள் சாரதா அலுப்புடன்!
அம்மா பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு, “ஈவ்னிங் டைம்னா எனக்கும் பிரச்சனை இல்லம்மா,” என்றான் அஜய்!
அவனின் சுருதி குறைந்து போயிருப்பது சாரதாவின் கருத்தில் படாமல் இல்லை...