“கலாவால வர முடிஞ்சா வந்திருப்பா அஜய்... இவ்வளவு வருஷத்துல உன் சித்தி உதவின்னு எதுவுமே கேட்டது இல்லை. முதல் முறையா கேட்டிருக்கா...“
சாரதா பேச்சின் தோரணை மாறுவது புரியவும், “சரி, சரிம்மா... நான் டான்னு ஒரு மணிக்கு வந்திருவேன்... நீங்க ரெடியா இருங்க,” என இறங்கி வந்தான் அஜய்!
“என் செல்லம்டா கண்ணா நீ,” என சாரதா மூத்தவனை செல்லம் கொஞ்ச, விஜய்,
“அண்ணன் மட்டும் செல்லமா? அப்போ நான்?” என்றான் போலியான சிணுங்கலுடன்!
“நீ கிச்சன்ல இருக்கே அந்த வெல்லம்டா தம்பி....!!!! சரி, எனக்கு டைமாச்சு நான் கிளம்புறேன்... நீயும் நேரத்துக்கு கிளம்பு! அம்மா ஒரு மணிக்கு வந்திருவேன் ரெடியா இருங்க,” என ஒரே மூச்சில் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் அஜய்!
✽✽✽
இரண்டு மகன்களும் வேலைக்கு கிளம்பி சென்ற பின், ரோஹினிக்காக சுத்தப்படுத்தி இருந்த அறைக்கு மீண்டும் ஒரு முறை சென்று பார்வையிட்டாள் சாரதா.
விஸ்தாரமான அறை தான்... இரண்டு பெரிய ஜன்னல்கள் இருந்ததால் வெளிச்சமாகவும் இருந்தது... வீட்டை சுற்றி தென்னை மரம், வேப்ப மரம் என பல ரக மரங்கள் இருந்ததால், காற்றும் சிலு சிலுவென வீசியது...
ட்யூப் லைட் ஸ்விட்சை மீண்டும் தட்டி அது எரிவதை உறுதிப் படுத்திக் கொண்டு, ஃபேன் ஸ்விட்சை தட்டிப் பார்த்தாள் சாரதா.
சின்ன ஒலியுடன் ஓடிய அந்த மின்விசிறியில் இருந்து காற்று நன்றாக தான் வந்தது... இருந்தாலும்... வருபவள் இளவரசி ஆச்சே...!!!!
தன்னுடைய அறையில் இருந்த டேபிள் ஃபேனையும் கொண்டு வந்து அங்கே வைத்தாள் சாரதா.