”இப்பவாவது உங்களுக்கு உங்கப்பா நினைப்பு வந்ததே சந்தோஷம், ஆனாலும் நீங்க செஞ்சதை நினைச்சி பாராட்டறதா இல்லை வருத்தப்படறதானே தெரியலை, ஒரு கெட்டவன்கிட்ட போய் நியாயத்தை எதிர்பார்த்து ஏமாந்துப் போயிருக்கீங்களே” என சொல்ல அவளோ
”என்ன செய்றது அந்த நேரம் ஏன் நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கே ஆச்சர்யம் ஆனாலும் எனக்கு நியாயம் கிடைச்சதே”
”இருந்தாலும் ரிஸ்க்தான், நீங்க இருந்த 2 நாள்லயே அவன் எத்தனை பேரை கொன்னிருக்கான்னு பார்த்தீங்களா”
“பார்த்தேன் ஆனா, அவங்க ஒண்ணும் நல்லவங்க இல்லையே”
”உங்க புருஷனும் நல்லவன் இல்லை” என்றான் கோபமாக, அடுத்த நொடியே தன்னையே திட்டிக் கொண்டு
”ஐ அம் சாரி நான் ஆவேசத்தில பேசிட்டேன், நான் என்ன சொல்ல வரேன்னா தில்லையும் ஒரு கெட்டவன்தானே” என சொல்ல அதை அவள் ஒப்புக் கொண்டாள்.
”ஆமாம் அவரும் கெட்டவர்தான் ஆனா, அவருக்கு இன்னொரு நல்ல முகமும் இருக்கு, அதை நான் பார்த்தேன்”
”எப்ப” என சிதம்பரம் ஆர்வமாக கேட்க அவளோ பின்னோக்கிச் சென்றாள்
மறுநாள் பொழுது விடிந்தது காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தில்லையை பார்க்கச் சென்றாள் சம்யுக்தா, அவனோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். உறங்குபவனின் பக்கத்தில் சென்று அமர்ந்தவள் மெல்ல அவனை எழுப்பினாள்
”தில்லை தில்லை எழுங்க பொழுது விடிஞ்சிடுச்சி” என சொல்ல அவனுக்கு உறக்கம் கலைந்ததே தவிர எழவில்லை.