“குட் மார்னிங் ஆகாஷ் சார்,” என்றாள்.
வாயை திறந்து பதில் சொல்லாமல் தலை மட்டும் அசைத்த ஆகாஷ்,
“இந்த டைம்ல இந்த காரிடார்ல பொதுவா யாரும் என் கண்ணுல பட மாட்டாங்க,” என்றான்.
“அது சார்... இங்கே,” என்று ஆர்வத்துடன் விளக்கம் சொல்ல தொடங்கிய சினேகா, மனதில் ஏற்பட்ட நெருடலில் பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு ஆகாஷை கூர்மையாக பார்த்தாள்.
அவனுடைய முகத்தில் இருந்து அவளால் எதையும் கண்டுக்கொள்ள முடியவில்லை! எனவே,
“சீக்கிரம் ஆஃபிஸ் வந்தேன் சார்... அதனால இந்த பக்கம் வந்தேன்... வேற ஒண்ணுமில்லை சார்... டைம் ஆச்சு, ஷ்யாமளா மேம் வந்திருப்பாங்க... நான் போறேன்... ஹாவ் அ நைஸ் டே சார்,” என்று ‘சார் மழையுடன்’ பதில் சொல்லிவிட்டு அவனை தாண்டி நடந்தாள்.
ஆகாஷும் எதிர் பக்கம் இருந்த தன் அறைக் கதவை நோக்கி நடந்தான்...
ஆனால், மற்ற நாட்கள் போலில்லாமல் இன்று அவனுடைய கண்களுக்கு விடுப்பு கொடுத்து விட்டு, காதுகளை கூர்மையாக்கி கவனித்தான்!
ஹுஹும்.... கொலுசு சத்தம் என்ன சினேகாவின் செருப்பு சத்தம் கூட கேட்கவில்லை!
ஒரு வேளை கொலுசுகளை கழற்றி வைத்திருப்பாளோ?
ஆனால் செருப்பு சத்தம் ஏன் கேட்கவில்லை? அத்தனை மென்மையாகவா நடக்கிறாள்??!!
திரும்பி அவள் நடந்து செல்வதை பார்க்க வேண்டும் என்று அவனுள் எழுந்த ஆர்வத்தை கஷ்டப் பட்டு அடக்கியவன், வேகமாக நடந்து அவனின் அறையினுள் நுழைந்தான்!
✽✽✽