சனிக்கிழமை அன்று, வார இறுதி நாட்களுக்கு உரிய விதத்தில், சோம்பலுடன் சிப்ஸை கொறித்துக் கொண்டே யூட்யூபில் பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஆகாஷின் அருகில்,
“ஆகாஷ்.. என்ன செய்ற?.” என்று கேட்டபடி வந்து அமர்ந்தாள் சுபாஷினி.
அம்மாவை ஒரு வினாடி பார்த்து விட்டு, “என்னம்மா, எங்கே போகனும்?” என்றுக் கேட்டான் ஆகாஷ்!
சிரிப்பால் முகம் மலர, “எப்படிடா ஆகாஷ்???” என்றாள் சுபாஷினி!
“சாட்டர்டே மார்னிங் எப்போவும் அதை செய்றேன், இதை செய்றேன்னு கிச்சன்ல எதையாவது உருட்டிட்டே இருப்பீங்க... அப்படி பட்ட நீங்க கிச்சனை விட்டுட்டு இந்த பக்கம் வந்தாலே ஏதோ விஷயம் இருக்குன்னு எனக்கு தெரியுமே...”
“என் செல்லம்டா நீ!!! உங்க அப்பா எப்போவும் போல பிஸி, உனக்காவது இன்னைக்கு டைம் இருக்கா?”
“எனக்கு எந்த வேலை இருந்தாலும், என் அம்மாவுக்காக தூக்கிப் போட்டுட்டு நான் வருவேன். சொல்லுங்கம்மா எங்கே போகனும்??”
“கவிதான்னு என் ஃப்ரென்ட் ஒருத்தி வீட்டு கிரஹாபிரவேசம் வருதுப்பா... அதுக்கு கிஃப்ட் வாங்கனும். அப்பாவும் பிஸி, வசீகரன் அங்கிளும் பிஸி. நீ வந்தா நானும் ஜோதியும் கிஃப்ட் வாங்குற வேலையை முடிச்சிடுவோம்...”
“அவ்வளவு தானே, போகலாம்! நீங்க ஆன்ட்டி கிட்ட பேசி எத்தனை மணிக்கு கிளம்பனும்னு சொல்லுங்க, நான் உங்க இரண்டு பேரையும் அழைச்சிட்டு போறேன்...”
“தேங்க்ஸ்டா கண்ணா! மதியம் லஞ்ச்க்கு மேல போவோம்...”