முடியவில்லை!
அதெப்படி வீட்டிற்கு வந்த ஒரு சில மணி நேரங்களில் இருவரும் இப்படி ராசியாகி போனார்கள்??
தனக்குள் யோசித்தப்படி, “அதென்ன அத்தை அந்த ஹேர் ஸ்டைல்ல அப்படி ஸ்பெஷல்???” என்று சாரதாவிடம் கேட்டாள்.
“ஸ்பெஷல் எல்லாம் இல்லை நிரு! எனக்கு சின்ன வயசுல வித விதமா தலை வாரிக்க பிடிக்கும்! அம்பிகா ஹேர் ஸ்டைல், நதியா ஹேர் ஸ்டைல்ன்னு புதுசு புதுசா போட்டு பார்ப்பேன்! எனக்கு இரண்டு பேரும் பசங்களா இருக்கவே, அதெல்லாம் மறந்தே போச்சு! இன்னைக்கு ரோஹினியை பார்த்த உடனே ஞாபகம் வந்துச்சு,” என்றாள் சாரதா புன்னகையுடன்!
“இவ்வளவு நாள்ல எனக்கும் கூட நீங்க இதெல்லாம் செஞ்சு பார்த்திருக்கலாமே???”
மனதில் இருந்த ஆதங்கத்தை மறைக்காமல் நிரஞ்சனா கேட்டுவிட,
“அதுக்கு உனக்கு தலைல முடின்னு ஒன்னு இருக்கனும்ல???” என வாசல் பக்கம் இருந்து அவளுக்கான பதில் ஒலித்தது!
திரும்பி பார்க்காமலே அதை சொன்னவன் விஜய் என்பது நிரஞ்சனாவிற்கு புரிந்தது!
மனதை திருடியவனின் குரலிலும், வருகையிலுமாக துள்ளிய மனதை அடக்கிவிட்டு, முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு சாரதாவை பார்த்தாள் நிரஞ்சனா!
“விஜய், அடி வேணுமா உனக்கு? என் மருமகளுக்கு என்னடா குறைச்சல்? அவ முடியும் அழகா தான் இருக்கு,” என்று நிரஞ்சனா எதிர்பார்த்தது போலவே அவளை தாங்கி பேசினாள் சாரதா.
நிரஞ்சனாவை கண்களால் அள்ளிப் பருகுவது போல பார்த்தப்படி அவர்களின் அருகே வந்த விஜய், “நீங்க சொன்னா சரிதான்ம்மா,” என்று சொல்லிக் கொண்டே கண் சிமிட்ட, அப்போது தான் அங்கே புதிதாக இருந்த ரோஹினியை கவனித்தான்!