“ஹலோ, நீ தானா சித்தி அனுப்பி வச்ச சின்னப் பொண்ணு?? நான் தான் விஜய்! இந்த வீட்டோட கடைக்குட்டி,” என்று சொல்லிக் கொண்டே ரோஹினி பக்கமாக கை குலுக்க கையை நீட்டினான் விஜய்!
ரோஹினி தயக்கத்துடன் ஒரு புன்னகையை பதிலாக கொடுத்து விட்டு, சாரதாவின் அருகே இன்னும் அதிகமாக நெருங்கி நின்றாள்.
“ரோஹினிம்மா, இவன் என் ரெண்டாவது மகன்... பேரு விஜய்... இவன் கிட்ட உனக்கு ஒரு தயக்கமும் வேண்டாம்! ரொம்ப நல்ல பையன்! அப்படியே வாலுத்தனம் செய்தாலும் என் மருமக நிரு அவனுக்கு கொட்டு வச்சு சரி செய்திருவா,” என்றாள் சாரதா!
“அவங்க உங்க மருமகன்னா இவரோட மனைவியா??” என்றாள் ரோஹினி விஜயையும் நிரஞ்சனாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே!
கொஞ்சும் மொழியில் இனிமை கலந்து ரோஹினி பேசிய பாணியில், விஜய் பதில் சொல்ல முயற்சிக்காமல் அவளை ஆர்வத்துடன் பார்த்தான்! அதை கவனித்து நிரஞ்சனாவின் மனதில் இருந்த பொறாமை இன்னமும் அதிகமானது!
அதற்கு நடுவே சாரதா, “கல்யாணம் இன்னும் ஆகலை ரோஹினிம்மா, கல்யாணம் செய்துக்க போறாங்க... எல்லாம் பேசி முடிவு செய்தாச்சு!!! மூத்தவன் அவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு கிடைச்சா தான் கல்யாணம்னு ஒத்தைக் கால்ல நிற்கிறான்! அதனால இவங்க இரண்டு பேரும் இன்னும் காதலிச்சிட்டே இருக்காங்க,” என்று ரோஹினிக்கு விளக்கமாக பதில் சொன்னாள்.
“அவருக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா???? கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாச்சே!!!”
அவளையுமறியாமல் யோசிக்காமல் சட்டென்று சொல்லிவிட்ட ரோஹினி, பிறகே தவறை உணர்ந்தவளாக, நாக்கை கடித்துக் கொண்டு,
“மன்னிச்சுக்கோங்க,” என்றாள்.