அக்ஷராவும், அகிலாவும் டென்ஷனுடன் அவன் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் அந்த காரில் இருந்து இறங்கியது மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க விரும்புபவனாக நேராக சிறிது தொலைவு நடந்தவன், பின் சாலையை கடந்து அந்த இளைஞர்கள் நின்றிருந்த திசையில் சென்றான்.
அவர்கள் நின்றிருந்த கடையை கடக்கும் போது தெரியாமல் மோதிக் கொள்வதை போல ஒரு இளைஞன் மீது மோதிக் கொண்டான். உடனேயே சாரி சொல்வது போல எதுவோ சொன்னான் கணேஷ்.
ஆனாலும் அந்த இளைஞன் கணேஷிடம் கோபமாக பேச, கணேஷ் பதில் சொல்ல... மற்றவர்களும் கணேஷை சூழ்ந்துக் கொண்டார்கள்.
கடையின் சொந்தக்காரர் அவர்களை சமாதானப் படுத்த முயல்வதும் தெரிந்தது...
“இவன் ஏன் இப்படி செய்றான்? வா அகிலா அவனை போய் பிடிச்சு இழுத்துட்டு வரலாம்...” என்று கவலையுடன் படபடத்தாள் அக்ஷ்ரா.
“இது அவன் ப்ளான் செய்து செய்றது அக்ஷு... அதனால தான் என்ன ஆனாலும் காருல இருந்து இறங்காதீங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டு போனான்... இரு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...”
நான்கு பேர் vs ஒருவன்! அதுவும் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத சாலை... இந்த எண்ணங்கள் அந்த இளைஞர்களுக்கு தைரியத்தை கொடுத்திருக்க வேண்டும்! அவர்கள் நால்வரும் சுற்றி நின்று கணேஷை மிரட்டுவது தெரிந்தது!
ஆனால் அடுத்த வினாடியே நிலைமை தலை கீழாய் மாறி போனது! சரியாய் 2 நிமிடங்கள் 4 வினாடிகளில் அவர்கள் அனைவரையும் அடித்து கீழே சாய்த்திருந்தான் கணேஷ்!