மனம், தோழியின் கணவனுக்காக வருந்தியது.
நல்லவன் தான்... ஆனால் யாருடனும் ஒட்டாமல் தனியாக இருந்தே அவனின் ஆயுளும் முடிந்து விட்டது...! சுமி இருந்திருந்தால் இவனின் வாழ்க்கையும் கூட நல்ல விதமாக தான் இருந்திருக்கும்...
கமலும் சுமியும் தன் கிளினிக்கில் முதல் முதல் சந்தித்த பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவள், விமல், அபிலாஷ், ஷ்யாம் அனைவரும் வீடு திரும்பி வந்த பின்னரே சுயநினைவுக்கு வந்தாள்...
ரோஷனி பூங்கோதை மற்றும் கவிதாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பது அவளின் கண்ணில் பட்டது... ஆனால் ரேஷ்மி அங்கே எங்கும் இல்லை என்பதை கவனித்தாள்...
உள்ளே இருக்கிறாளோ???
அங்கிருந்து எழுந்து மருமகளை தேடி சென்றாள்.
ரேஷ்மியின் அறையை அடைந்தவள், அது சாத்தி இருக்கவும்,
“ரேஷூ,” என அழைத்தபடி மெல்ல தட்டினாள்.
“சாத்தி தான்ம்மா இருக்கு... உள்ளே வாங்க,” என்ற ஷ்யாமின் குரல் கேட்டது...
கதவை திறந்து உள்ளே வந்தாள் ஹேமா. அங்கே, கட்டிலின் ஓரத்தில் ஒரு தலையணையை முதுகுக்கு சாய்வாக வைத்து அமர்ந்திருந்தாள் ரேஷ்மி. கால்களை மடித்து அவள் அமர்ந்திருந்த விதம், வெகு நேரமாக அப்படியே அமர்ந்திருந்திருக்கிறாள் என்பதை எடுத்து சொன்னது...
ஷ்யாம் அவளின் அருகே அமர்ந்து அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்திருப்பான் போலும்...