அன்று இரவு, எப்படி தூங்காமல் இருப்பது என ரோஹினி மனதினுள் யோசித்துக் கொண்டிருக்க, சாரதா ரோஹினியுடன் அரட்டை அடித்து விட்டு தாமதமாக தான் தூங்கினாள்.
ரோஹினி தூக்கம் வழிந்த கண்களுடன் விழித்தே இருந்தாள்!
நேரம் ஸ்லோ மோஷனில் போகவும், அவளுக்குள் திக் திக் என்று தான் இருந்தது!
மனதை திசை திருப்ப அவளின் தீவை பற்றி யோசித்தாள்! இன்னமும் அங்கே எல்லோரும் அவளை தேடிக் கொண்டு தான் இருப்பார்கள்... பாவம்...
இப்படி ஓடி வராமல் அங்கேயே இருந்து தைரியமாக எதிர்த்து பேசி இருக்க வேண்டுமோ???
தீவில் இருந்து கிளம்பி வந்த சில நாட்களில் எந்த அளவிற்கு அவளின் மனம் மாறிப் போயிருக்கிறது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது! அவளின் கண்கள் தானாக பாசமும், கனிவுமாக சாரதாவின் பக்கம் சென்றது!
சென்னை வந்த சில நாட்களிலேயே நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறாள்! முக்கியமாக யோசித்து பேச வேண்டும், எதையும் செய்ய வேண்டும் என்பதை நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறாள்!
“...இப்போ இப்படி ஸ்டைலா மன்னிச்சுக்கோங்கன்னு சொன்னா, எல்லாம் சரியா போயிடுமா?”
அஜயின் பெண் குரல் மன்னிச்சுக்கோங்க’வை நினைத்து அவளின் முகத்தில் புன்முறுவல் வந்தது!
அதற்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை என நினைத்துக் கொண்டவள், அலுப்புடன் நைட் லேம்ப் வெளிச்சத்தில் தெரிந்த சுவர் கடிகாரத்தை பார்த்தாள்! இரண்டு மணி ஆகி இருப்பது தெரியவும், அவளுள் குதூகலம் பீறிட்டது! தலையணைக்கு அடியில் ஒலித்து வைத்திருந்த சின்ன மை டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு, சத்தம் போடாமல் எழுந்து சென்றாள்.