பார்வதி இறந்த நாளில் இருந்தே புவனேஸ்வரியையும் அவளது அக்காவையும் அம்மா இல்லாத தாக்கம் தெரியாமல் பார்த்துக் கொண்டவள் சித்ரா. இரண்டுப் பெண்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து அவர்களுக்கு வேண்டிய வழிக்காட்டுதல்களை பல வருடங்களாகவே கொடுத்து வருபவள். ராஜேஸ்வரி சித்ரா சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்டி விட்டு அப்படியே எதிர்மறையாக செய்வாள். புவனேஸ்வரி சித்ரா சொல்வதில் இருக்கும் நல்லது கெட்டதை புரிந்து நடப்பவள். இதனாலும் சித்ராவிற்கு புவனேஸ்வரியிடம் ஒட்டுதல் அதிகம்.
புவனேஸ்வரிக்கு ஏற்ற கணவனை சீக்கிரமாக கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற உணர்வு சித்ராவிற்கு ஏற்பட்டது.
“மாமாவும் அப்பாவும் பேசட்டும் பாப்பா, நீ என் கூட வா, “ என சொல்லி சித்ரா புவனேஸ்வரியை தனியாக அழைத்துக் கொண்டுப் போனாள்.
“நீ உன் அப்பா கிட்ட சொன்னது சரி தான் பாப்பா. உன் அப்பாவை நாம எப்படியாவது அஞ்சு ஆறு வருஷத்துக்கு அடக்கி வச்சா, எல்லா கடன் பிரச்சனைல இருந்தும் நீங்க வெளியே வந்திரலாம். நானும் உன் மாமாவும் அதுக்காக தனியா பிளானே போட்டு வச்சிருக்கோம்,” என்றாள் சித்ரா.
“சரி அத்தை,” என்று மட்டும் சொன்னாள் புவனேஸ்வரி!
“நான் உன்னையும், ராஜியையும் பார்த்துக் கிட்ட நேரத்துல அண்ணன் செய்ற செலவுகளை கவனிக்காம விட்டுட்டேன். இப்படி ஒரு பொறுப்பில்லாதவனை நான் பார்த்ததே கிடையாது. உனக்கு கல்யாணம் முடியுற வரைக்குமாவது இவன் குடும்ப பேரை கெடுக்காம இருந்தா நல்லா இருக்கும்.”