இளைய தலைமுறையினருக்கு பிடித்த அந்த பட்டு சேலையை யோசனையுடன் பார்த்தாள் ரேவதி.
“ப்ச் ப்ச்... இது மத்த நேரத்துல எடுக்கலாம்... கல்யாணத்துக்கு சரியா வராது,” என்றாள்.
நந்திதா நம்பவே முடியாமல் ரேவதியை பார்த்தாள். துளசிக்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது...
“ஏன் அத்தை அப்படி? நல்லா இருக்கே... நந்துக்கும் சூப்பரா செட் ஆகும்,” என்றாள் துளசி.
“இல்லை துளசி, கல்யாணத்துக்கு நகைங்க போடனும்... இந்த சாரீல நகைங்க எடுப்பா தெரியாது... ரெட், பிங்க், கிரீன், ப்ளூன்னு பளிச்சுன்னு தெரியுற கலர்ல பாருங்க... இதே மாதிரி டிசைன்ல அந்த கலர்ல கிடைச்சா கூட நல்லா இருக்கும்...”
ரேவதி வெகு இயல்பாக சொல்ல, காமாட்சியும் அதை ஏற்றுக் கொண்டாள்.
“ரேவதி சொல்றதும் சரி தான்.... கொஞ்சம் எடுப்பா தெரியுற கலர்ல தேடுங்க,” என்றாள்.
ப்ரியாவும், துளசியும் அந்த தங்க நிற அழகிய புடவையை மனமில்லாமல் கீழே வைத்து விட்டு வேறு சேலை தேடும் வேலையை தொடர, நந்திதாவால் அத்தனை எளிதாக அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
அவளுக்கு அந்த பட்டு புடவை மிகவும் பிடித்திருந்தது... நடக்க போவது அவளுடைய திருமணம்... அவளுக்கு பிடித்த சேலையை கூடவா எடுக்க முடியாது????
தானாக இறந்து போன அம்மாவை அவளின் மனம் தேடியது...
இந்நேரம் அவளின் அம்மா இருந்திருந்தால், அவள் இப்படி வாயை மூடி அமைதியாக இருக்க வேண்டியதில்லை... இது தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கலாம்... இது தான் பிடித்திருக்கிறது என்று அடித்து சொல்லி இருக்கலாம்...