“என்ன கமல் இது??? எங்கே போக கிளம்பி இருக்க?” புரியாமல் கேட்டாள் பூங்கோதை.
“நான் ஆஃபீஸ் போறேன்ம்மா... வீட்டுல இருந்து என்ன செய்ய போறேன்??” என்று பதில் சொல்லி விட்டு, மேலே நின்று பேசாமல் வெளியே கிளம்பினான்.
“கமல்... சொந்தக்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க,” என்ற பூங்கோதையின் வருத்தம் நிறைந்த கேள்வியும்,
“இவனை ஹிட்லருன்னு சொன்னது தப்பு. இவன் மனுஷனே இல்லை. இரும்புலேயும் கல்லிலேயும் இருக்க ஏதோ ஒரு ஜந்து!”
கவிதாவின் கோபமான பேச்சும் அவன் காதில் விழ தான் செய்தது...
அவர்களை பொறுத்த வரை சுமித்ரா இறந்து விட்டாள், எனவே துக்கம் கடை பிடிக்க வேண்டும். ஆனால் அவனை பொறுத்த வரை அவள் அவனுடனே தான் இருக்கிறாள்!
✽✽✽
டைரியை படிப்பதை நிறுத்தி விட்டு யோசித்தாள் ரேஷ்மி...
ஏன் அன்று யாருக்குமே அப்பாவை சமாதானப் படுத்த வேண்டும் என்று தோன்றவே இல்லை??? அவர் ஆண் மகன் என்பதாலா??? அம்மாவின் எதிர்பாராத மரணம் எந்த அளவிற்கு அப்பாவை பாதித்திருக்கிறது என்பதை ரேஷ்மியால் இப்போது உணர முடிந்தது!
அவளின் கண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஷ்யாமிடம் சென்றது! தானாக அவளின் கைகள் அவனின் கேசத்தை அன்புடன் கோதியது!
அப்பாவின் மனதில் இருந்த ஆழ்ந்த வருத்தத்தை புரிந்துக் கொண்டு குடும்பத்தினர் எல்லோரும் அவரிடம் அன்பாக இருந்திருந்தால் அப்பா வேறு மாதிரி இருந்திருப்பாரோ???