”நாம இங்கயே இருந்து பார்த்துக்கலாம், விடியட்டும், அண்ணா வரட்டும் அதுவரைக்கும் பொறுமையா இருக்கலாம்” என சொல்ல மற்றவர்களும் சரியென்றார்கள், இரவு முழுவதும் வாசலுக்கு வெளியே சம்யுக்தாவிற்காக காவல் காத்தார்கள், அவளோ வெறும் தரையில் சுருண்டு படுத்துக் கொண்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள். நேரம் செல்ல செல்ல அவளின் அழுகை குரல் குறைந்துவிட்டது.
மறுபுறம் தில்லையோ வயிற்றில் ஏற்பட்ட காயத்திற்காக டாக்டரை தேடிச் சென்றான்.
யார் துணையும் இன்றி தானாகவே ஜனனியின் வீட்டிற்கு வண்டியில் சென்றான்.
இரவு நேரம் அவளின் வீட்டு கதவை தட்ட அவளே கதவைத் திறந்தாள்
”தில்லை என்ன இந்நேரம்” என கேட்பதற்குள் தில்லை தள்ளாடியபடியே வீட்டுக்குள் நுழையவும் அவள் பயந்துவிட்டாள். சட்டென அவனை தாங்கிக் கொண்டவள்
”என்னாச்சி தில்லை“
”வயித்தில கத்திக்குத்தி பட்டிடுச்சி ஜனனி” என ஈனமாக சொல்ல அவளுக்குப் பக்கென்றது. அவசரமாக அவனை தனது பெட்ரூமில் இருந்த படுக்கையில் படுக்க வைத்து அவனை சோதனையிட்டாள்.
அவளிடம் தனது உடலில் ஏற்பட்ட காயத்தை தில்லை காட்ட அவளும் இரவு நேரமானாலும் பரவாயில்லை என அப்போதே அவனுக்கு வைத்தியம் செய்தாள். அவனோ கோபமாக இருந்தான். எதுவும் பேசவில்லை, அவனது கண்கள் கோபத்தில் சிவந்துவிட்டது, உக்கிரமாக எதிரில் இருந்த வெறும் சுவரை பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஜனனியோ பெரிய பிரச்சனை ஏதோ நடந்திருக்கிறது என புரிந்துக் கொண்டு ஏதாவது பேசி அவனது கோபத்தை அதிகப்படுத்தாமல் அமைதியாகிவிட்டாள். விரைவாகவே தில்லைக்கு வைத்தியம் செய்து முடித்தாள்.