தோட்டத்தில் கடினமாக உழைத்தாலும், மற்ற நேரங்களின் சீரான உடையும், கம்பீரமான தோற்றமும், உதட்டில் சிரிப்பும், பேச்சில் புத்திசாலித்தனமும் என்று எல்லாம் பெற்ற ஹான்ட்சம் இளைஞனாக விளங்கிய ஜெய் அந்த ஊரின் பல இளம் பெண்களுக்கு கனவு கண்ணனாக மாறிப் போனான்.
ஆனால் ஜெயின் கவனத்தில் பட்டது என்னவோ ஒரே ஒரு பெண் தான். அவன் வேலை பார்க்கும் தோட்டத்திற்கு பக்கத்தில் இருந்த வக்கீல் வீட்டு பங்களாவிற்கு அவ்வப்போது வருகை தருபவள் அவள்!
அவள் யார் என்ன என்று தெரியாமல் தவித்தவன், பேச்சுவாக்கில் அவள் பெயர் புவனேஸ்வரி என்பதையும், அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரரின் இளைய மகள் என்பதையும் தெரிந்துக் கொண்டான்.
புவனேஸ்வரியின் பணம் - அது ஒன்று தான் அவனுக்கு இடித்தது!
மற்றபடி கண்ணில் பட்ட அவளின் அலட்டலில்லாத அழகு, அடக்கம், அமைதி என அனைத்தும் அவனுக்கு மிக சுலபமாக அவள் மேலே ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அவளை அவன் படிக்கும் காலேஜில் பார்த்த உடன் அவனுடைய சந்தோஷத்திற்கு ஈடு இணையே இல்லை.
காலேஜ்மெட்ஸ் என்ற விதத்தில் அவனே அவளிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். பார்த்தால் ஹாய், ஹலோ சொல்லும் அளவிற்கு பரிச்சயத்தையும் ஏற்படுத்திக் கொண்டான்.
அவர்களின் அறிமுகம் மெல்ல மெல்ல காதலாக உருமாறத் தொடங்கியப் போது ஜெய் தான் முதலில் அந்தக் காதலை சொன்னவன்.