புரண்டுப் போனது!!!
✽✽✽
வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளே காரணமாக அமைகிறது. எல்லோருக்கும் இது பொருந்துமோ இல்லையோ ஜெய் விஷயத்தில் இது சரியாகி விட்டது!
ஜெய் நினைத்திருந்தால் உடலுக்கு கடின உழைப்பு கொடுக்கும் தோட்ட வேலையை ஏற்றுக் கொள்ளாமல் பாங்க் லோன் வாங்கி படித்திருந்திருக்கலாம். பொறுப்பில்லாமல் இருக்கும் அவனின் பெற்றோரை வற்புறுத்தி அவனின் படிப்புக்கு பணம் கேட்டிருந்திருக்கலாம். ஆனால் ஜெய் அப்படிப்பட்டவன் இல்லை. கடன் வாங்குவதை விட உழைத்து படிப்பது எந்த விதத்திலும் தாழ்ந்து போனது இல்லை என்பது அவனின் திடமான நம்பிக்கை.
அதேப்போல அவனின் சொந்த உழைப்பினால் பெறும் கல்வி அவனுக்கு தன்னம்பிக்கையும் அதிகமான உத்வேகத்தையும் கொடுத்திருந்தது. இதனால் நன்மைகளுடன் எதிர்பாராத தீமைகளும் வந்து சேர்ந்தது!
ஜெய்யை முதல் முதல் சித்ரா சந்தித்தது நினைவில் வைத்துக் கொள்ள கூடிய நிகழ்ச்சி இல்லை.
அவர்கள் வீடு இருந்த சாலையின் நடுவே ஒருவனை அடித்து உதைத்துக் கொண்டிருந்தான் ஜெய். சாலையில் நின்றிருந்த சிலர் வேடிக்கைப் பார்த்தார்களே தவிர எதுவும் கேட்கவில்லை.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரேஷால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. ஜெயை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.