அதன் மதிப்பை உணரவில்லை! ‘Taken for granted’ ஆக தான் எடுத்துக் கொண்டார்கள்!
எத்தனை முறை அவளே பணம் கொடுத்தால் போதுமா என்று யோசித்திருக்கிறாள்! ஏன் அவ்வளவு செலவு செய்யும் அப்பா பேசாமல் இருக்கிறார் என்று யோசிக்க அவளுக்கு தோன்றவே இல்லை???
இந்த எண்ணம் தோன்றியதாலோ என்னவோ ரேஷ்மியால் பாட்டியை, அத்தையை, சித்தப்பாவை குறை சொல்ல முடியவில்லை! அவர்களுக்கும் அவளை போல அப்பாவின் மனம், குணம் இரண்டுமே தெரியவில்லை!
அம்மா மட்டும் இருந்திருந்தால்...
அந்த யோசனையே ரேஷ்மிக்கு பெரிய மன வருத்தத்தை கொடுத்து, கண்களை குளமாக்கியது!
அப்பாவை சுற்றி அவ்வளவு பேர் இருந்தும் அவரை புரிந்துக் கொள்ள ஒருவருமே இல்லை... புரிந்துக் கொண்ட ஒரே ஜீவனான அம்மாவை அப்பா பக்கத்தில் விட்டு வைக்க கடவுளுக்கு மனமில்லை!
கேன்சருக்கு நிரந்தர தீர்வு கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதினுள் திடமாக, கலங்கி இருந்த விழிகளுடன் மீண்டும் டைரி பக்கம் கவனத்தை திருப்பினாள் ரேஷ்மி!
✽✽✽
ஒவ்வொரு நாளும் கமலுக்கு துணையாக இருந்தது சுமி தான்...
மறக்காமல் ஒவ்வொரு நாள் நடப்பதையும் அப்படியே அவளிடம் ஒப்பித்தான்... அதையே டைரியில் எழுதவும் தொடங்கினான்...
முதலில் அன்றாட நிகழ்வுகளை பற்றி எழுதியவன், பின் அதுவே அவனுக்கு தெரியாமலே, சுமி – கமலின் வாழ்க்கையை சொல்லும் நினைவுத் தொகுப்பாக மாறிப் போனது...