ஒரு நொடி, பார்த்தது ஒரு நொடியே ஆயினும் சுற்றி இருப்பவரை மறந்து போனனர் இருவரும், எதிரி என்று சொல்லிக்கொண்டதெல்லாம் மறந்துப் போக கண்களில் கலந்து போனனர்.. முதலில் சுதாரித்த அஸ்வத் பொறுமையாக சிக்கிய வளையலை நீக்கி அவ்விடத்தைவிட்டு அகன்றான்.
வெளியில் இருந்து பார்த்தவருக்கு மாற்றம் தெரியவில்லை என்றாலும் மனம் அந்த ஒரு நொடியையே சுற்றிச்சுற்றி வந்தது இருவருக்கும். அவனது கண்களில் தான் மயங்கிய நொடியை எத்தனை முறை எண்ணி பார்த்தாலும் திகட்டவேவில்லை அனுவிற்கு. அஸ்வத்தோ உலகையே மறந்து போனான், இவ்வளவு அருகாமையில் அவள் இருந்தும் மனம் தடுமாறாமல் இருக்க மிகவும் கஷ்டப்பட்டான். அவள் கண்கள் உயர்த்தி பார்த்த அந்த ஒரு நொடி மீண்டும் கிடைக்காதா என்று ஏங்கினான். அஸ்வத்தும் அனன்யாவும் அவர்களது கனவுலகில் இருக்க, லேகா வந்தார்.
““எல்லாரும் நான் கொடுத்த கேள்விக்கு ப்ரோக்ராம் போட்டிங்களா இல்லை நல்லா படம் படமா பார்த்து போடாமல் வந்திருக்கிங்களா?””
ச்சே இவங்களுக்கு யாரு இதையெல்லாம் நியாபகப்படுத்துறது என்று பெண்களில் சிலர் அலுத்துக்கொள்ள, அருண் குரல் உயர்த்தினான். “படமா வெறும் trailer தான் மேடம் பார்த்தோம் அதுவே சூப்பர், படம் சூப்பர் டுப்பர் ஹிட் ஆகும்” என்று கிண்டல் செய்ய வகுப்பே ஒன்றாக சேர்ந்து சிரித்தது. அனைவரும் சிரித்தாலும் அஸ்வதும் அனுவும் மட்டும் சிரிக்காமல் இருப்பதை பார்த்து ஒரு அளவிற்கு லேகாவால் யூகிக்க முடிந்தது. இருவரை பற்றியும் அவர் அறிந்தமையால் எதுவும் கேட்காமல் வகுப்பைத் தொடரப் போனார். வகுப்பை நகற்ற அடுத்த அம்பினைவிட்டான் அருண்.
“மேடம் இன்னைக்கு அனன்யாக்கு பிறந்தநாள்” என்று மீண்டும் குரல் கொடுத்தான்.
“ஓ... ஹாப்பி பர்த்டே அனன்யா” என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்திவிட்டு வகுப்பை தொடர மீண்டும் குறுக்கிட்டான் அருண்.
“என்ன மேடம் அவ்வளவுதானா?”
“பின்ன என்ன பண்ணனும்? birthday song பாடனுமா?”
“அய்யய்ய அதெல்லாம் நாங்க முன்னாடியே டூயட் songe பாடிட்டோம், ஆனால் ஒரு சாக்லேட் கூட தரலை மேடம்” என்று பாவம் போல் நடித்தான். அவனை உற்சாகம் செய்யும் வண்ணம் அவன் என்ன கூறினாலும் ஒரு கும்பல் சிரித்தது.
“ஒரு சாக்லேட் தான் உன் பிரச்சனையாடா...” என்று கேட்டுக்கொண்டு “அனன்யா கொண்டு வந்திருக்கியாம்மா? ” என்று பரிவாக கேட்டார்.
“ம்ம்ம்ம்” என்று அவள் தலை அசைக்க அனைவருக்கும்க் கொடுத்தாள். அனைவரும் அவளுக்கு வாழ்த்துக்கள் சொல்ல நன்றி சொல்லிக்கொண்டே வந்தவள் அஸ்வத்திடம் சாக்லேட் கொடுத்தாள், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனரோ அல்லவோ மற்ற வானரங்களின் கண்கள் அவர்கள் மீது இருந்தது. அவன் வாழ்த்த வாய் திறக்கவும் இல்லை அவள் அதை எதிர்பார்க்கவும் இல்லை அவனது வாழ்த்தும் அவளது நன்றியும் ஒரு நொடியைவிட கம்மியான நேரத்தில் பரிமாறிக்கொண்ட கண் அசைவுகளில் இருந்தது.
பரிமாற்றங்கள் முடிந்து இருக்கையில் அமர்ந்தவளுக்கு சிறுவயது நியாபகம் வந்தது. அன்றும் அனன்யாவிற்கு பிறந்தநாள் ஆனால் அது அவளுக்கு 9வது பிறந்தநாள். அனைவருக்கும் இதேபோல் சாக்லேட் கொடுத்துகொண்டே வந்தவள் அஸ்வத்தின் முன் நின்றாள், அவள் வருவாள் என்று அறிந்தே அவன் மேசைமீது தலை சாய்த்துப்படுத்துக் கொண்டான் அவள் மேசை மீது தட்டி பார்த்தாள் அவன் காதுகளை மூடிக்கொண்டானே தவிர எழுந்திருக்கவில்லை. சிறுபிள்ளைப் போல் அவன் கோவம் காட்ட அவளும் சிறுபிள்ளை போல் வகுப்பு ஆசிரியரிடம் முறையிட்டாள்.
“சார் அஸ்வத் வேணும்னே என் சாக்லேட் எடுத்துக்க மாட்டிங்குறான் சார்.”
“ஹே அஸ்வத் என்னாச்சு?” என்று அவர் இருந்த இடத்தில் இருந்தே அந்த சண்டையை விசாரிக்க அஸ்வத் எழுந்து நின்றான்.
“இல்லை சார் உடம்பு சரில்லை சார்” என்று பொய் சொன்னான்.
“பரவால்லை எடுத்துக்கோ” என்று அவரும் சேர்ந்து பரிந்துரைக்க வேறுவழியின்றி அனன்யாவை முறைத்துக்கொண்டே அவளிடம் இருந்து சாக்லேட் வாங்கிக்கொண்டான் அஸ்வத்.
அப்போது பார்த்த பார்வையையும் இன்று பார்த்த பார்வையையும் ஒப்பிட்டு நினைத்து பார்த்தவளுக்கு சிரிப்பாக இருந்தது. சுற்றி இருக்கும் தோழிகளை மறந்து அனன்யா அவன் நினைவில் சிரித்தாள். “ஹே ஓடுது ஓடுது புடிங்கப் புடிங்க” என்று தோழிகளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் கத்தினாள், அவளது குரலில் அவ்விடம் வந்த அனன்யா முழிக்க, மற்ற தோழிகள் “என்னதுடி” என்று அங்கும் இங்கும் குனிந்துத் தேடினர்.
“இரண்டு.... நட்டு கழண்டு ஓடுது அதைதான் பிடிக்க சொன்னேன்” என்று அனன்யாவைப் பார்த்து சிரித்தவாறு கூறினாள்.
அனைவரும் சிரிக்க, “அதுசரி ஒரு நட்டு அனன்யாது, இன்னொன்னு யாருது ஆர்த்தி?” என்று சந்தேகம் கேட்டாள் ஸ்வாரா
“அதோ அங்க பாருங்க” என்று அவள் கைக்காட்ட அனைவருடன் சேர்ந்து அனன்யாவும் பார்த்தாள், அஸ்வத்தும் ஒரு கையை தலையில் வைத்து மேசையில் சாய்ந்தவாறு சிரித்துக்கொண்டு இருந்தான். “அவனும் இப்படித்தான் தானா சிருச்சுட்டு இருக்கான்” என்று ஆர்த்தி கிண்டல் செய்ய தோழிகள் சிரித்தனர். ஆனால் அனன்யாவிற்கு மட்டுமே அவனும் தான் நினைத்த அந்த நாளை நினைத்துதான் சிரித்துக்கொண்டு இருக்கிறான் என்று புரிந்தது.
மிதமான கூடல் நேரம்....
பயணம் தொடரும்...
{kunena_discuss:676}