(Reading time: 26 - 51 minutes)

ப்படியே கலகலப்பாய் அந்த விளையாட்டு நிறைவு பெறும் சமயத்தில் சுலோ பாட்டி சந்தியாவிடம் வந்து, “நீயும் காதியும் ஜோடியா ஏதாவது பாடலாமே” என சொல்ல,

“ஞானப்பழத்தை பிழிந்துன்னு ஒரு பாட்டு பாட்றி ஒளவை “, என யாதவ் கிண்டலடித்தான்.

“அதெல்லாம் முடியாது போடா” என அவனை திட்டி விட்டு,

“பாட்டி, யாரையாவது சித்ரவதை செய்யணும்னா என்னை பாட சொன்னா போதும்ன்னு கார்த்திக்கே கிண்டலடிப்பார்.  நீங்க ஆசை படுறதுனால நாங்க ஏதாவது நடித்து காண்பிக்கிறோம்“  என்று சொல்லி விட்டு சிவாவை அழைத்தாள்.

“டேய் அண்ணா, மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் சீன். கமல் மாதிரி நடிக்கணும்”, என்றாள் சந்தியா.

“இந்த மெசேஜ் கார்த்திக்குக்கு தான.. கலக்குறீங்க சிஸ்டர்” என்று துள்ளிக் குதித்துக் கொண்டு சென்றான். அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்தான் கார்த்திக்.

“என்னை பைத்தியமாக்குறதுலே குறியா இருக்கா! ஆனா, நீ ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கிற மச்சி?”

“உன் பெர்பார்மென்ஸ் பாக்க அவ்வளவு ஆசை மாப்ளே! “ என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கே ஓரத்தில் இருந்த ஒரு பூந்தொட்டியை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து, “மாப்ளே, இதை தலையில் வைத்து நொண்டி நடந்து காமி. ரிகர்சல் பாத்துடலாம்” என சொல்ல “என்னை டேமேஜ் பண்றதுல உனக்கு அவ்வளோ ஆர்வம்!” என பெருமூச்சு விட்டவாறு, அவள் சொன்ன காட்சியை  ஐபோனில் யூட்யூபில் பார்த்து விட்டு நடிக்க தயாரானான்.

சந்தியாவும் சுலோ பாட்டியும் அங்கிருந்த நீள பெஞ்சில் அமர சொல்லி விட்டு அவள் சொன்ன காட்சியை நடிக்க ஆரம்பித்தான்.

சற்று தொலைவில் நின்று “விஜி...விஜி…” என்று அழுகையுடன் சந்தியாவைப் பார்த்து பலமுறை அழைத்தான். அவளோ அதுவரை அதை கவனிக்காமல் தற்செயலாக அவனை பார்ப்பது போல நடிக்க,

அவள் பார்த்ததும், “விஜி...நான் சீனு…விஜி” என ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டே வாயிற்குள் காற்றை அடைத்து மட்டியை கடித்து, கையை தூக்கி

“ஆடுறா ராமா..ஆடுறா ராமா”, குரல் ததும்ப அவன் நடிக்க, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இப்பொழுது சந்தியா அவனை உற்று பார்க்க வேண்டும்…கடினப் பட்டு சிரிப்பை அடக்கி அவனைப் பார்த்தாள்… “என்ன விஜி” என அவன் விழிகளை உருட்டி, புருவத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் செய்து காண்பிக்க, அதற்கு மேல் அவளால் முடியவில்லை…”ஹே...ஸ்டாப் இட் கார்த்திக்”, என்று  விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்…அவள் மட்டுமா...அந்த கும்பலே அவனைப் பார்த்து சிரித்தது….வெகு நேரம் சிரிப்பொலி தொடர, இதற்கு மேலும் தான் காமடி பீஸ் ஆவதை விரும்பாத, கார்த்திக் பாட ஆரம்பித்தான்...

காதல் கொண்டேன் கனவினை  வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன் இந்நாளில் எனை நீ மறந்தாயே

நீயில்லாமல் எது நிம்மதி? நீதான் என்றும் என் சந்நதி!

கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உன்னை நானே!

அந்த பாடலில் இருந்த உயிர்ப்பு அனைவரையும் கட்டி போட்டு அந்த இடத்தின் சூழலை மாற்றி விட்டது. இப்படியே வெகுநேரம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கழிந்தது! பின், அனைவரும் படுக்க சென்றனர். கீழே உள்ள நீண்ட ஹாலில் பெண்களும், மாடியில் உள்ள ஹாலில் ஆண்களுமாய் படுத்துக் கொண்டனர். படுக்க செல்லும் பொழுது மதுவை காணாமல் சந்தியா தேட,

“அவ பாட்டி ரூம்ல அப்பதே தூங்கிட்டா” என்றாள் சக்தி.

“என்ன அவ பெர்பார்ம் பண்ண கூட வரலை...உடம்பு எதுவும் சரியில்லையா?” கேட்டாள் சந்தியா.

“தெரியலை. நான் தற்செயலாக பாட்டி ரூம்க்கு போனப்போ தூங்கிகிட்டு இருந்தா.” என்றாள் சக்தி. அலுப்பாக இருக்கும் என அதைப் பெரிதா கண்டு கொள்ளவில்லை.

டுக்கையில் விழுந்தவளுக்கு தூக்கம் கண்களை தழுவ மறுத்தது.. சென்ற வாரம் இதே நாள் இதே இரவு திட்டம் போட்டு மொட்டை மாடிக்கு வரவழைத்து அவள் காதலை வெளிபடுத்த வைத்தான்…ஆனால் இன்று அந்த    ஆளுமையின் சுவடே இல்லை அவனிடம்.…. அவள் சொன்னதை செய்யும் தலையாட்டி பொம்மை போல இருந்ததை மனம்  ரசிக்கவில்லை. பெருமூச்சு விட்டவளுக்கு மொட்டை மாடிக்கு செல்ல ஆசை வந்தது. மாடிக்கு படிகளில் ஏறி கதவை திறக்க முயல அது தானாக திறப்பது கண்டு திடுக்குற்றாள்.. அவளை எதிர் கொண்டு திறந்தது அவளவன்.  அவளை அங்கே கண்டதும் விழிகளில் முதலில்  வியப்பு வந்து பின் நொடிபொழுதில் காணாமல் போனது. உணர்ச்சிகளை காட்டாது அவளுக்கு வழி விட்டு விட்டு கதவை சாத்தி விட்டு கீழே இறங்கினான்.

அவனைக் கடந்து வந்தவளுக்கு, தன்னை தனிமையில் பார்த்த பின்பும் அவன் தவிர்ப்பதை தாங்க முடியவில்லை. “எப்போ அவனை பார்ப்போம்...பேசுவோம்” என இந்த ஒரு வாரமாய் உள்ளத்தின் ஓரத்தில் இருந்த எண்ணம் அந்த கணத்தில் விஸ்வரூபம் எடுத்து ஆட்டமாய் ஆடியது. இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது அவனிடம் பேசி விட வேண்டும் என்று ஓடிப் போய் கதவை திறக்க மின்னல் போல கண் எதிரே தோன்றியவனைக் கண்டு திடுக்கிட்டு கால்கள் ஒரு அடி பின் சென்றன..

அங்கு நின்றது வேறு யார்?...கார்த்திக் தான்….ஓடி வந்திருப்பான் போலும்….மூச்சிரைக்க நின்றான். அவள் பயந்ததைக் கண்டதும்,

“ஸாரி ”,  தயக்கத்துடன் சொன்னவனை அவனை அங்குலம் அங்குலமாக பார்வையால் அளந்தாள்….

கடல் காற்றின் போக்கில் சிகையாட சோகத்தை திரட்டி வைத்த களையிழந்த முகத்தால்  அவன் கம்பீரம் தொலைந்து போயிருந்தது! தயக்கம்  அவன் ஆளுமையை அழித்தது! குரலில் அவன் கர்வம் வடிந்து போயிருந்தது! எதையுமே  அவள் விரும்பவில்லை.

“ஏன் கார்த்திக் இப்படி இருக்கீங்க? எனக்கு பிடிக்கலை”, கவலை தோய்ந்த மெல்லிய குரலில்.

“ம்ம்….தெரியும்”, என்றான். சொல்லும் பொழுது சற்றே குனிந்து பார்வையைத் தாழ்த்தி “நான் குற்றவாளி” என்பதை சொல்லாமல் சொன்னது அவளுக்கு எரிச்சலை தந்தது.

“என்ன தெரியும்?”, என்றாள் எரிச்சலாக. அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்து கைகளை குறுக்காக கட்டி தொலைவில் தெரிந்த கடலை பார்த்த படி,

“நீ என்னை டீஸ் பண்றப்போ, இக்னோர் பண்றப்போ ஒரு மிடில் கிளாஸ் பொண்ணுக்கு இவ்வளவு திமிரான்னு நினைத்தேன். எங்க வீட்டில் எல்லார் முன்னாடியும் உங்க குடும்ப நிலையை சொல்லி திட்டியிருக்கேன். அதே எண்ணம் தானோ உன்னை லவ் பண்ண பின்பும் என்னையறியாம உன் குடும்ப நிலையை குறைத்து பேச வச்சது. ஆனா, நீ, உன் மனசுல என்னை பத்தி எவ்வளோ பாசிடிவ்வா நினைத்திருக்க….என்னனமோ யோசிக்கிற….எத்தனையோ பேருக்கு பசியாத்த நினைக்கிற….நான் என்னை சுத்தி ஒரு வட்டத்தைப் போட்டு அதை மட்டும் பார்ப்பவன்...உன்னை மாதிரி வைப்ரன்ட் தாட்ஸ் எனக்கு கிடையாது. உனக்கு நான் பொருத்தமானவன் கிடையாது” உணர்ச்சியற்ற குரலில் சொல்லி விட்டு  நெடிய மூச்சை விட்டான்.

“அதனால?”, கோபமாக கேட்டாள்.

“உனக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும்.”, என்றான் வருத்தத்துடன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.