29. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha
சந்தியாவால் மட்டுமல்ல தான் செய்ததை நிரஞ்சனால் கூட நம்ப முடியவில்லை...குழந்தையாய் காலை சுற்றி வருபவளின் அன்னியோன்யம் அதிகரிக்க அவள் குமரி என்ற உணர்வுகள் கிளர்ந்து அவன் பொறுமையை சோதித்தன.
அனைவரும் வீட்டின் மறுபக்கம் இருக்க, மஞ்சள் நிற விளக்கொளியின் மந்தமான வெளிச்சத்தில் அமைதியாய் தோன்றிய தோட்டம் நிருவையும் மதுவையும் ஈர்த்தது.
“நிரு அலைபாயுதே டயலாக்...எங்க சொல்லுங்க பாக்கலாம்” என கேட்டாள் மது.
“நான் உன்னே வரம்ப்ளே, ஆஷா…” என்றதும் மது முறைக்கவும்,
“ஆஷா..இல்லே...இல்லே...ஆசே படலே...நீ அழுக்கா”, என்றதும் அவன் தோளில் ஓங்கி ஒரு அடி போட்டாள்.
“பொண்ணுங்க பேரா சொன்னா இனி உதை தான்..புரியதா?”, விழிகளை உருட்டி மிரட்டினாள்.
அவள் கரங்களால் வலிக்காமல் அடி வாங்கிய பூரிப்பில் வாயிலிருந்து ஜொள்ளு வடியாத குறையாக வழிந்தான். பின்,
“அல்கா இருக்கா“, நிரு.
மறுபடியும் முறைத்தாள் மது.
“இப்போ என்னது?”
“அல்கா இல்ல...அதுவும் பொண்ணு பேரு தான்… அழகா சொல்லுங்க” என்று திருத்தினாள்.
“அளகா”, நிரு.
“சிறப்பு ழ நல்லா நாக்கை சுழட்டி சொல்லணும்….என்னோட நாக்கை நல்லா கவனித்து சொல்லுங்க” என்று விட்டு,
அவன் முகத்தருகில் சென்று புருவத்தை உயர்த்தி, நாக்கை சுழட்டி சிறப்பு ‘ழ’ வை உச்சரித்து காண்பித்தாள்.
தேனூறும் உதடுகளை ரசிக்க வெளிப்படையாக அனுமதி சீட்டாக அதை உபயோகித்த நிருவின் மனம் துள்ளி குதித்தது...கண்களின் விருந்தை அவன் இதழ்களும் பருக கெஞ்சியது…. அதில் மயங்கி பேதலித்து பார்த்தவனின் தோள்களை உலுக்கி
“நிரு...நிரு...நிரு….” மூன்றாவது முறை சற்று பலமாக கூவி அழைத்தாள்…
தன்னிலைக்கு வந்தவன் அப்பொழுதும் அவள் இதழ்களைப் பார்த்த படி,
“ம்ம்ம்.. சொல்லுது”
“என்ன சொல்லுது… நான் செய்து காட்டியது போல செய்யுங்க… இல்லாட்டி தலையிலே கொட்டுவேன்”, செல்லமாய் மிரட்டினாள்.
“ள” என்றான் கொஞ்சம் கூட நாக்கை சுழிக்காமல்…
“என் நாக்கை நல்லா கவனிக்கணும்” என்று மீண்டும் அவன் முகத்தருகில் சென்று செய்து காண்பிக்க அந்த பாவனை அவனது எட்டு வருட தவத்தை கலைக்க உசுப்பேற்றிக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை…
அவள் சொன்னது போல சொல்ல நிரு முயற்சி செய்த நேரம் சற்று சுழித்து அடித்த காற்றில் மதுவின் கண்ணுக்குள் தூசி விழுந்தது...
“நிருரு…”, என கண்ணை கசக்கிக் கொண்டே அழைத்து முடிக்கும் முன் அவளை நெருங்கி, கசக்கிய அவள் கரத்தை விலக்கி வருடல் போல மென்மையாய் அவள் இமைகளை விரித்து விட்டு ஊதி விட்டான். அப்பொழுதும் அவள் கண்களில் விழுந்த தூசி அகலாமல் இமைகள் படபடத்தது. மீண்டும் ஒரு முறை அவன் முயற்சிக்க இவளுக்கோ கூச்சம்...வேடந்தாங்கலில் அவன் தோளில் சாய்ந்ததை உணர்ந்த பொழுது எழுந்த கூச்சம் இப்பொழுதும் தடுத்தது. அணைத்து விடுவது போல நெருக்கத்தில் இருந்தவனின் நெஞ்சை புறங்கைகளால் தள்ளி விட்டு “வேண்டாம்” இரகசிய குரலில் சொல்லிக் கொண்டே கண்ணைக் கசக்கினாள்.
அவனோ விடாது அவளை நெருங்கி அவளது முகத்தை தன் கரங்களுக்குள் தாங்கி விழியில் விழுந்த தூசியை சற்று அழுத்தமாக ஊதி தள்ளினான். தூசி அகல, விடுதலை பெற்றவளாய் “அப்பாடா தேங்க்ஸ் நிரு”, என்றாள் விழிகள் படபடக்க. தூசி அகன்ற பொழுதும் அவன் கைகள் அவளை விட்டு அகலவில்லை….காதலுடன் அவளது முகவாயை வருடிய அவன் விரல்களை விலக்கி விட்டு, “ழ சொல்லிக் காமிங்க நிரு “ என்றாள் அவன் தொடுகையிலும், பார்வையிலும் ஏற்பட்ட கூச்சத்தை பின்னுக்கு தள்ளி…
“என்னது?”, என்ற நிரு போதையில்...மயக்கத்துடன் பார்த்த படி.
“ழ” என்று அழுத்தி சொல்லி விட்டு “ம்ம்..சொல்லுங்க”, என அதட்டல் போல படபடப்பை மறைக்க முயன்றாள் ...
“என்னது?”, நெருங்கி வந்து அவளது தோள்களைப் பற்றி ரகசிய குரலில் கேட்டவனின் பார்வை உதடுகளை மையமிட, அவளுக்கு உடல் சிலிர்த்தது!
“ழ்ழ்“ என்று தயங்கி கொண்டே சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் பூ இதழ்களை தன் ஆண்மை பொருந்திய இதழ்களால் இதழினும் மென்மையாய் சுற்றி வளைத்தான்….வலிமையை விட மென்மை வலியதோ! மென்மையான கெஞ்சலுக்கு இளகியது அவள் இத “ழ்” கள்… கட்டுபாடிழந்த இதழ்களை தடுக்க முடியாமல் நடப்பதை புரிந்து கொள்ளவும் முடியாமல் திணறி போனாள்...
அவன் காதல் வெள்ளத்தில் மிதக்க, . அவளோ கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தாள்.... மெதுவாக அவளை விடுவித்து தன்னிலைக்கு திரும்பிய நிரு, மது கண்களில் நீரைக் கண்டதும் பதறிப் போனான்…. “மதுதுது…ஐ அம் சாரி” கெஞ்சலாக மன்னிப்பு கோர, அதை காதில் வாங்காமல் அழுது கொண்டே ஓடி விட்டாள்...
அவசரப்பட்டு விட்டோமே என குற்ற உணர்ச்சியில் இவன் வருந்த… என்ன தான் பழகியவன் என்றாலும் இவ்வளவு நெருங்க விட்டோமே என இவள் வருந்த அன்று அத்தனை பேரிடமும் இருந்த கலகலப்பு இவர்களிடம் தொலைந்து போனது…