அன்று மனோவின் திருமணம் முடிந்தவுடன் வசந்தின் கையை பிடித்துக்கொண்டு இவள் நடந்த நிமிடத்தில் அப்படியே மயங்கி சரிந்தார் அப்பா.
பதறிக்கொண்டு அவர் அருகில் ஓடி வந்தாள் அர்ச்சனா. அவர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.
சரியாய் அப்போது உள்ளே நுழைந்தான் விவேக். மனோ வந்திருக்கவில்லை.
திருமணமான மகிழ்ச்சியில் புது மனைவியுடன் தன் வீட்டிற்கு சென்றிருந்த மனோவின் சந்தோஷத்தை இந்த பிரச்சனைகளை சொல்லி கலைக்க விரும்பவில்லை வசந்த். அதனால் அவனிடம் எதுவுமே சொல்லவில்லை.
விவேக் ஏதோ ஒரு ஊசியை அப்பாவின் கையில் செலுத்திவிட்டு சொன்னான் 'பி.பி தாறுமாறா எகிறி இருக்கு அர்ச்சனா. ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணிடலாம்'.
மண்டபத்துக்கு அருகில் இருந்த அந்த மருத்துவமனையில் மயங்கிக்கிடந்தார் அப்பா.
உடனே ஊருக்கு செல்ல துடித்துக்கொண்டிருந்த தனது அப்பாவையும் மீறி, மருத்துவமனைக்கு ஓடி வந்தான் வசந்த்.
அந்த மருத்துவமையின் வாசலில் நின்றபடி அவள் விரல்களை பற்றிக்கொண்டுக்கேட்டான் 'என் கூட வரமாட்டியாடா?
எப்படி வசந்த் அப்பாவை இந்த நிலைமையிலே விட்டுட்டு? தவிப்புடன் கேட்டாள் அர்ச்சனா.
ஏன்னு தெரியலை. ரொம்ப பயம்மா இருக்கு அர்ச்சனா. இத்தனை நாள் நான் எதுக்கும் இப்படி பயந்ததே இல்லை. எங்கப்பா முகமே சரியில்லை. ஏ.....தோ ஏதோ தப்பா நடக்க போகுதோன்னு தோணுது அர்ச்சனா.
தைரியமா இரு வசந்த். கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாயிடும்.....
இல்லைடா எனக்கென்னமோ...... ஏனோ அவன் குரல் உடைந்தது. அவள் கையை தன் நெஞ்சின் வைத்து அழுத்திக்கொண்டான் 'இந்த கையை விட மனசில்லைடா. ரொம்ப பயமாயிருக்கு.'
வசந்த்....
சில நிமிடங்கள் கழித்து சுதாரித்து சொன்னான் 'எது நடந்தாலும் மனசை தளர விடாதே.. எத்தனை வருஷமானாலும் வசந்துக்கு பொண்டாட்டின்னா அது அர்ச்சனா மட்டும்தான். தைரியமா இரு.' சொல்லிவிட்டு திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தான் வசந்த்.
அன்றிரவு அப்பாவுக்கு நினைவு திரும்பி விட்டிருந்தது. சில மணி நேரங்கள் அவளுடன் பேசவேயில்லை அப்பா. மனோ வீட்டுக்கு கூட செல்வதை தவிர்த்தார் அவர்
'அங்கே நின்றிருந்த விவேக்கிடம் சொன்னார் மண்டபத்துக்கு போய் என் பெட்டியை எடுத்திட்டு வாப்பா நான் ஊருக்கு கிளம்பறேன்.'
ஏன் அங்கிள் வீட்டுக்கு வந்திட்டு போலாமே? என்றான் விவேக்
இல்லைப்பா அங்கே போனால் தேவையில்லாமல் பிரச்சனை வரும். நான் இப்படியே கிளம்பறேன்.
தவிப்புடன் நின்றிருந்த அர்ச்சனா விவேக் நகர்ந்தவுடன் கெஞ்சினாள். 'அப்பா என்னாச்சுப்பா? என்கூட பேசுங்கப்பா ப்ளீஸ்'.
திரும்ப திரும்ப அவள் கெஞ்சிய பிறகு பேசினார் அப்பா ' உனக்கு தான் நான் தேவையில்லையே. அவன் கையை பிடிச்சிட்டு கிளம்பிட்டியே. அவன் கூடவே போயிடு.'
'அப்பா...... அப்படி இல்லைப்பா. எனக்கு நீங்க ரொம்ப முக்கியம்,
அப்பிடீன்னா நீ இனிமே அவனை பார்க்க கூடாது, பேசக்கூடாது சம்மதமா?
அப்பா ஏன் பா.? என்னதான்பா பிரச்சனை. தயவு செய்து சொல்லுங்க.
சொன்னா நம்புவியா நீ? உனக்கு அவன் வார்த்தை தானே வேதம்,
இல்லப்பா. இத்தனை வருஷமா நீங்கதானேபா எனக்கு எல்லாம். எங்கப்பா பொய் சொல்ல மாட்டார். நான் நம்பறேன் சொல்லுங்க.
'வசந்தோட அப்பா என்னை கை நீட்டி அடிச்சிட்டார்.
அதிர்ந்து போய் கேட்டாள் 'எதுக்குப்பா?
'என்னாலே நீ இல்லாம இருக்க முடியாதுன்னு சொன்னேன். வசந்த் சென்னையிலே வந்து செட்டில் ஆக முடியுமான்னு கேட்டேன். அவருக்கு அது பிடிக்கலை. அவனை வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொல்றியான்னு கேட்டு என்னை அடிச்சிட்டார். அதனாலேதான் கல்யாணத்தை நிறுத்திட்டார்.'
பேச வார்த்தைகள் எழாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
கண்களில் நீர் சேர சொன்னார் அப்பா 'நீ டெல்லிக்கு போயிட்டியானா என்னாலே இங்கே இருக்க முடியாதுமா. இந்த இருபது நாளிலேயே நான் தவிச்சு போயிட்டேன்.'
'அவனை மறந்திட்டு பழைய மாதிரி என் பொண்ணா என் கூடவே இருப்பியாமா? நீ இல்லேன்னா அப்பா செத்து போயிடுவேன்' குலுங்கி குலுங்கி அழ துவங்கினார் அப்பா.
அவரை சமாதான படுத்த வழி தெரியாமல் தவித்துதான் போனாள் அர்ச்சனா.
மறுநாள் மருத்துவமனையிலிருந்தே ஊருக்கு கிளம்பும் முன் கைப்பேசியில் அழைத்த போது கொதித்து போனான் மனோ.
என்ன விளையாடறீங்களா எல்லாரும்? அவனும் சொல்லாம ஊருக்கு கிளம்பி போயிட்டான். கேட்டா எதுவும் சரியா பதில் சொல்ல மாட்டேங்கறான். நீயும் எதுவும் சொல்ல மாட்டேங்கறே. எதுக்கு உங்கப்பா அங்கிருந்தே ஊருக்கு கிளம்பராராம்? அவர் மேலே தப்பு இல்லைனா இங்கே நேர்லே வர வேண்டியது தானே?'
'இல்லை மனோ. இப்போ வேண்டாம். இப்போ வந்தால் பெரிய சண்டையாயிடும். எல்லாத்தையும் கொஞ்சம் ஆறப்போடுவோம். கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாகும்'.
அவன் அருகே நின்றிருந்த மனோவின் அப்பாவுக்கும் அர்ச்சனா சொல்வதே சரியென தோன்றியது.
ஆனால் எதுவுமே சரியாகவில்லை. இரண்டு மூன்று நாள் கழித்து அப்பாவுக்கு தெரியாமல் அவள் வசந்தை அழைத்தபோது அவன் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது மறுபடி மறுபடி முயன்றும் பயனில்லை.
பத்து நாட்கள் கழித்து அவள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய போது அவள் கண்ட காட்சியில் மொத்தமாய் உடைந்து போனாள் அர்ச்சனா.
ஜன்னலின் அருகே நின்று பழைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்தவள் ஒரு பெருமூச்சுடன் அதிலிருந்து மீண்டவளாய் கட்டிலில் வந்தமர்ந்தாள்.
மறுபடியும் தன்னை தானே கேட்டுக்கொண்டாள் 'நிஜமாகவே தவறு யார் மீது?
சட்டென்று ஞாபகம் வந்தவளாய் தனது கைப்பையை புரட்டிப்போட்டு தேடத்துவங்கினாள் அதை. அந்த அட்டையை
டாக்டர் சிதம்பரம் கொடுத்த அவரது அட்டையை.
அன்று அதை இதனுள் தானே வைத்தேன். எங்கே போயிற்று.?
சில நிமிடங்களுக்கு பிறகு, அவளுக்குள் சட்டென்று ஒரு மின்னல் வெட்டியது.
ஏன் இதற்கு இத்தனை கஷ்டப்படுகிறேன்? அவர் மருத்துவ மனையின் பெயர் நன்றாகவே தெரியும். கணினியை இரண்டு தட்டு தட்டினால் அவரது மருத்துவமனையின் எண் திரையில் விரிந்து விடாதா என்ன? அதன் பின் அவருடன் எளிதாக பேசி விடலாமே?
தனது மடிக்கணினியை உயிர்ப்பித்தாள் அர்ச்சனா
அடுத்த ஆறாவது நிமிடத்தில் அந்த மருத்துவமனையின் எண் அவள் கையிலிருந்தது.
அதே நேரத்தில் டில்லியில் வசந்தின் வீட்டில் அனு கையில் துடைப்பத்துடன் மாடிப்படி ஏறினாள்.
ஓடி வந்தாள் சாந்தினி. 'நீங்க குழந்தையை பார்த்துக்கோங்க நான் மாடியை க்ளீன் பண்ணிட்டு வந்திடறேன். காலையிலிருந்து எல்லா வேலையும் நீங்களே செய்யறீங்களே. பாவம்.'
சற்று வியந்துதான் போனாள் அனு. 'இந்த அக்கறை புதிதாய் இருக்கிறதே.?' ஆனால் அதில் ஒளிந்திருந்த காரணத்தை அவளால் ஊகிக்க முடியவில்லை.
மாடிப்படி ஏறினாள் சாந்தினி.
அவன் அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து தனது கண்களை அறையை சுற்றி சுழல விட்டாள் சாந்தினி.
சுவற்றில் இருந்த அந்த புகைப்படம் அவளை ஈர்த்து நிறுத்தியது. ' கிரீம் நிற சேலையில், கை நிறைய வளையல்களும், முகம் நிறைய சந்தோஷமுமாய் சிவந்து, மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்த அர்ச்சனவையும், அவளை கண்களால் பருகிக்கொண்டிருந்த வசந்தையும் பார்த்துக்கொண்டே நின்று விட்டிருந்தாள் சாந்தினி.
ஏனோ அவளே அறியாமல் தனக்குள்ளே வேண்டிக்கொண்டாள் 'இறைவா இவர்கள் இருவரும் சீக்கிரம் சேர்ந்து விட வேண்டும்'
சில நிமிடங்கள் கழித்து அறையை கண்களால் துழாவியபடியே பெருக்க துவங்கினாள்.
படுக்கையை சரி செய்யும் சாக்கில் ஏதாவது கிடைக்கிறதா தேடியவளுக்கு,படுக்கைகடியிலும், தலையணைக்கடியிலும் எதுவும் கிடைக்கவில்லை.
பெருமூச்சுடனும், ஏமாற்றத்துடனும் கட்டிலுக்கடியில் பெருக்கியவளுக்கு தட்டுபட்டது அந்த காகிதம்..
அதை ஆவலுடன் பிரித்து பார்த்தவள் ஏமாறவில்லை. அது வசந்தின் டைரியிலிருந்து கீழே விழுந்திருந்த கடிதம்.
அதை எடுத்து தனது நைட்டியில் இருந்த பைக்குள் பத்திர படுத்திக்கொண்டு அறையை பெருக்கி விட்டு கீழே இறங்கினாள் சாந்தினி.
தனது கைப்பேசியிலிருந்து டாக்டர் சிதம்பரத்தின் மருத்துவமனையின் எண்ணை அழுத்தினாள் அர்ச்சனா.
திஸ் இஸ் அர்ச்சனா காலிங் ப்ரம் பெங்களூர். கேன் ஐ ஸ்பீக் டு டாக்டர் சிதம்பரம் ப்ளீஸ்.
தொடரும்
Manathile oru paattu episode # 17
Manathile oru paattu episode # 19
{kunena_discuss:683}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.