தெரியாத எண்ணில் இருந்து தேன்மொழிக்கு கால் வர அதை எடுக்கலாமா வேண்டாமா என்று எண்ணியவள் ‘இது புது நம்பர், முக்கியமானவங்களுக்கு தவிர வேறு யாருக்கும் தெரியாது, எனவே எடுக்கலாம்’ என்று எண்ணி எடுக்க,
“ஹலோ”
“ஹலோ மிஸ் தேன்மொழியா”
“எஸ். நீங்க யாரு”
“மேம். நான் கௌஷிக் பேசறேன். நேத்து இண்டர்வ்யூக்கு வந்திருந்தீங்களே. நியாபகம் இருக்கா”
“எஸ் சார். சொல்லுங்க”
“யூ ஆர் அப்பாயிண்டட். உங்களுக்கு ஆபர் லெட்டர் மெயில் பண்ணியிருக்கேன். வரும் போது அதை ஒரு பிரிண்ட் எடுத்துட்டு வந்திடுங்க.”
“ஓ” என்றவள் தொடர்ந்து “ஓகே சார். எப்ப வந்து ஜாய்ன் பண்ணணும்” என்றாள்.
அவளின் குரலில் எந்த வித சந்தோசமோ குதூகலமோ இல்லை. அவளின் ஓ என்ற பேச்சை கேட்ட போதே இந்த வேலை கிடைக்கும் என்று அவள் எண்ணவில்லை என்பது கௌஷிக்கிற்கு நன்றாக புரிந்தது. அப்படி இருக்க இந்த வேலை கிடைத்து விட்ட போதிலும் அவள் குரலில் மேற்கொண்டு எந்த வித சந்தோச உணர்ச்சியும் தெரியாதது அவனுக்கு ஆச்சரியம் தான்.
நேற்று தேன்மொழியை சந்தித்ததிலிருந்தே அவனுக்கு நிறைய ஆச்சரியங்கள் தான். அவளின் உணர்ச்சிகள் துடைத்த முகமும், முகத்தில் ஒரு தீட்சண்யமும் அதை தொடர்ந்த நிகழ்வுகளும் அவனை ஆச்சரியப் படுத்திக் கொண்டே இருந்தது.
“உங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் ஓகே வோ அவ்வளவு சீக்கிரம் ஜாய்ன் பண்ணுங்க. பிகாஸ் போர்ஷன் பெண்டிங்கா இருக்கு”
“ஓகே சார். நான் நாளைக்கே வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன். இது வரைக்கும் எந்த அளவுக்கு போர்ஷன் போய் இருக்கு, இப்ப நாளைக்கு வந்து நான் என்ன கிளாஸ் எடுக்கறதுன்னு சொல்லுங்களேன்”
“நான் அதை செக் பண்ணி தான் சொல்லணும் மேம். நாளைக்கு மட்டும் நீங்க ஏதாச்சும் ஒரு டாபிக் எடுங்க. இங்க வந்த உடனே எல்லா டீடைல்ஸும் நான் நாளைக்கு சொல்றேன்.”
“ஓகே சார்.”
வீட்டில் மலர்விழியிடமும் கௌசல்யாவிடமும் தேன்மொழி விஷயத்தை சொல்ல இருவரும் மிகவும் சந்தோசப் பட்டார்கள்.
அதிலும் மலர்விழி சந்தோசத்தில் டான்ஸ் கூட ஆடிக் கொண்டிருந்தாள்.
“சரசு இப்ப தான் சொல்லிக்கிட்டிருந்தா எல்லா நல்லா நடக்கும்க்கான்னு உடனே பாரு இவளுக்கு வேலை கிடைச்சிடுச்சி” என்று கூறி சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தார் கௌசல்யா
இதை அப்பாவிடம் சொல்லிட்டு வரேன் என்று போனை எடுத்துக் கொண்டு போனார்.
மலர்விழி இன்னும் ஆடிக் கொண்டிருக்க, தேன்மொழி யுபிஎஸ்சி சிலபஸ் டவுன்லோட் செய்து அதற்கேற்றவாறு நாளை என்ன கிளாஸ் எடுக்கலாம் என்று முடிவு செய்ய தனது லேப்டாப்பை ஆன் செய்தாள்.
அவள் லேப்டாப்பில் வால்பேப்பராக ‘எவரிதிங் ஹாப்பன்ஸ் பார் எ ரீசன்’ என்று இருந்தது. (ஒரு வேளை எல்லாமே நல்லதுக்கு தானோ?)
அடுத்த நாள் தேன்மொழி சிறிது முன்பாகவே போய் விட்டாள்.
அவள் உள்ளே செல்ல ரிசப்ஷனில் இருந்தவனிடம் விவரத்தை சொல்ல “இப்ப தான் மெயின்ஸ் கிளாஸ் முடிஞ்சது. திரும்ப பத்து மணிக்கு தான் கிளாஸ் ஸ்டார்ட் ஆகும். எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. நீங்க உள்ளே போய் வெயிட் பண்ணுங்க மேம். கௌதம் சார் உள்ளே இருக்காரு” என்றான்.
அவனுக்கு நன்றி சொல்லி விட்டு தேன்மொழி உள்ளே செல்ல அங்கு அந்த கௌதம் என்றவன் மட்டும் தான் இருந்தான். ஒரு காதில் ஹெட் செட் இருக்க, கண்ணை மூடியவாறு கையில் கூலர்ஸை சுழற்றிக் கொண்டிருந்தான்.
அங்கு சென்று தேன்மொழி அமர அந்த சத்தத்தில் முகத்தை திருப்பியவன் கண்ணை மட்டும் திறக்கவில்லை. அந்த கூலர்ஸை சுழற்றுவதையும் நிறுத்தவில்லை.
தேன்மொழி ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து விட்டு “ஹலோ சார்” என்றாள்.
அவன் மொபைலில் ஏதோ செய்து விட்டு “ஹலோ. நீங்க தான் புது ஹிஸ்டரி மேமா” என்றான் அவன்.
“எஸ் சார்”
“ம்ம்ம். ஓகே.” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
கண்களை மூடிக் கொண்டே அவளிடம் பேசியவன் திரும்ப மொபைலை அழுத்தி ஹெட் செட்டை அட்ஜஸ் செய்துக் கொண்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு ஆச்சரியம் தான்.
யாரையும் ஒரே சந்திப்பில் அவள் எடை போடுவதில்லை என்றாலும் அவள் மனம் அவள் அனுமதி இல்லாமலே “என்ன மனிதன் இவன்” என்று எண்ண வைத்தது.
அதற்கு மேல் ஏதும் நினைக்க கூடாது என்று அவள் கொண்டு வந்த புத்தகத்தில் ஆழ்ந்தாள் அவள்.
தொடரும்!
{kunena_discuss:727}