அவளின் அந்த பதில் இருவருக்குமே பிடித்தது…
“சின்ன குழந்தைங்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் ஆச்சே… எப்படி பார்த்துக்கறீங்க ஸ்கூலில்… இங்க அபி வீட்டில் ஒரு நாள் இருந்தா கூட எல்லாரையும் அவள் பின்னாடி ஓடி வர வைப்பாள்… அங்கே எப்படிமா அவள்?...”
“சமத்தா தான்மா இருப்பா…”
(சின்ன குழந்தைகள்னு சொன்னாலே முதலில் நியாபகம் வருவது அவங்களோட கவலை இல்லாத வாழ்வும் மகிழ்ச்சியும் அவங்க பண்ற குட்டி குட்டி சேட்டையும் தான்… மனுஷங்க வளர்ந்த பிறகு அத எல்லாமே முழுசா தொலைச்சிடுறாங்க… சூழ்நிலை காரணமாக… என்று மனதிற்குள் எண்ணியவள் வெளியே ஒரு சிரிப்பை மட்டும் லேசாக உதிர்த்தாள்…)
“ஹ்ம்ம்.. இப்போதான் புரியுது… அவளுக்கு ஏன் உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு… நீ அவளை விட்டே கொடுக்கமாட்டுறியே.. அதனால் தான் போலும்… இல்லைங்க…” என்று கணவனைப் பார்த்து கேட்டார்…
“நீ என்றைக்கு தவறாக சொல்லியிருக்கிறாய் கோதை…” என்று அவரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்…
பொதுவான சில பேச்சு வார்த்தைக்குப்பின், அவளின் தாய் – தந்தை பற்றி கேட்டார் கோதை நாச்சியார்…
அவள் மௌனமாக தரையை வெறித்தாள்…
எதுவோ சரியில்லை என்று அவர்கள் உணர்ந்த நேரம், “அவர்கள் இருவரும் இப்பொழுது உயிரோடு இல்லை…” என்றாள் கண் கலங்க… ஏனோ அவர்களிடம் அவளுக்கு மறைக்க தோன்றவில்லை… மௌனமாக இருக்கவும் இயலவில்லை…
சுந்தரம் சட்டென்று நிலைமையை சமாளிக்கும் பொறுப்பை கையிலெடுத்தார்…
“தாய் தந்தையும் கடவுள் தான் மா… உயிரோட உருவமா அந்த கடவுள் உன்னோடு இல்லை… உணர்வாக அவர்கள் உன்னுடன் தான் எப்பவும் இருப்பாங்க… அனுவை விட நீ சின்னப்பெண் தான்… அவளுக்கு நீ தோழி என்றால், எங்களுக்கும் மகள் தான் மா நீ… உணர்வாக அவங்க உன்னுடன் இருக்குறாங்க… நாங்க உருவமாக உன்னுடன் இருப்போம் மா ரிகா…”
“இந்த வார்த்தை மட்டும் போதும் அப்…… சார்…. எனக்கு நிறைவாக இருக்கிறதென்று கைகூப்பினாள்…”
சற்றே நெகிழ்ந்தவர், “அப்பா என்றே கூப்பிடு மா… சார் எல்லாம் வேண்டாம்.. சரியா… என்றவர் கோதை ரிகாவிற்கு சாப்பிட ஏதாச்சும் கொடு இப்போ… விருந்து நடக்க போகுது… நான் சென்று வந்தவர்களை பார்க்கிறேன்… நீ உள்ளே போமா ரிகா… கோதை நீ கூட்டிட்டு போ…”
“சரிங்க… அவ்னீஷ் எங்கங்க காணோம் ?... அனுவை கூப்பிட்டு வர போன அபியையும் காணோம்… எல்லோரையும் தேடி கண்டுபிடித்து அழைத்து வாருங்கள் சீக்கிரம்…” என்று பொறுப்பான தலைவியாய் உத்தரவிட்டார் கோதை…
“உத்தரவு அம்மையாரே…” என்று இடைவரை குனிந்து கூறியபடி சென்றார் சுந்தரம்…
“இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்… மலர் குரூப் ஆஃப் கம்பெனிஸோட எம்.டி ஆக பொறுப்பேற்று ஐந்து வருடத்தில் நம்ம கம்பெனியை இன்டர்நேஷனல் அளவில் எடுத்து காட்டிய பெருமை ஒரே ஒருத்தரை தான் சேரும்… அவருக்கு உதவி செய்தவரே அதை சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்… சோ… மீட் மை யங்கர் சன்… மிஸ்டர். அவ்னீஷ்…”
“வணக்கம்… அப்பா சொல்லுற மாதிரி நான் பெரிய உதவி எல்லாம் செய்யவில்லை… கொஞ்சம் அவரோட வேலையில் பங்கெடுத்துக்கிட்டேன்.. தட்ஸ் இட்.. அந்த கம்பெனிக்கு ஜிஎம் என்று சொல்லி பெருமை படுவதை விட என் அண்ணனுக்கு தம்பி என்று சொல்வதை பெருமையாக எண்ணுகிறேன்… அண்ணா வாங்க…”
நேர் கொண்ட பார்வை, மிடுக்கான வசீகரிக்கும் தோற்றத்தில் ஆறடிக்கும் குறையாத உயரத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் வண்ணம் பலத்த கைத்தட்டல்களின் ஒலியினூடே வந்து நின்றான் ஆதர்ஷ்…
“அனைவருக்கும் வணக்கம்… அப்பா அவ்னீஷ் சொன்ன மாதிரி என் தனிப்பட்ட முயற்சியில் இந்த உயரத்தை நான் எட்டவில்லை… தாத்தா, அப்பா எல்லோரும் எனக்கு ஒரு வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள்… அதை பற்றுகோலாய் பிடித்துகொண்டு நான் மேலே வந்தேன்… அதற்கு எனக்கு உதவி செய்தவர்கள் நிறைய பேர்… முக்கியமா நம்ம கம்பெனி தொழிலாளிகள் தான்… அவர்கள் இல்லையென்றால் இந்த உயரம் நிச்சயம் சாத்தியமில்லை தான்… அவ்னீஷ் மட்டும் சரியான நேரத்தில் இந்த ப்ராஜெக்ட் ப்ரெஸண்ட் செய்யாமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய ஆர்டர் நமக்கும் கிடைத்திருக்காது… தேங்க்ஸ் டா அவ்னீஷ்… அப்பறம் வருகிற இலாபத்தில் நம்ம தொழிலாளிகளுக்கு 25% கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறோம்… நீங்க என்ன சொல்லறீங்க… உங்களுக்கெல்லாம் சந்தோஷமா?...“ என்று கேட்டதும்,
“ரொம்ப சந்தோஷம்…” என்று கூக்குரலிட்டனர் அங்கிருந்த மலர் கம்பெனியின் தொழிலாளிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும்…
“நாம் இவ்வளவு தூரம் வளர்ந்ததிற்கு கண்டிப்பாக நமக்கு பொருட்கள் சப்ளை செய்த கம்பெனிஸ் தான் காரணம்… அவங்க தரமான பொருட்கள் தராதிருந்திருந்தால் நம்மால் இந்த வெற்றியை ஈட்டியிருக்க முடியாது… இங்கே வந்திருக்கும் அத்தனை கம்பெனிஸ் முதலாளிகளுக்கும் என்னுடைய நன்றி… தொடர்ந்து உங்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை… தருவீங்க என்று நம்புகிறேன்… தருவீங்களா?...”
“நிச்சயமாய்…” என்ற பதில் அவனுக்கு உடனே கிடைத்தது…
“ஷன்விக்கு பிரம்மிப்பாய் இருந்தது… இவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவர்கள் தனது தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரோடு அழைத்தது, வரும் இலாபத்தில் ஒரு பெரும் தொகையை சம்பளமாக கொடுத்தது, அந்த அலட்டலே இல்லாத அண்ணன் – தம்பி, அனுவின் குடும்பம்… இதை அத்தனையும் தாண்டி, அவ்னீஷிடம் தன் மனம் செல்வதை உணர்ந்தவள் அவன் உயரத்தைக் கண்டு அஞ்சினாள்… அவளுக்கு அவன் உயரம் தெரியாதிருந்தாலும் அவனைப் பிடித்திருக்குமே…. அவனைத் தானே அவளுக்கு பிடித்தது… அவனின் அந்த குறும்பு, அவன் பார்வையில் உள்ள அன்பு, காதல், தாய்மை… இவை தானே அவனிடம் அவளை ஈர்த்தது… விழாவிற்கு போகும் வழியில் ஆண்களின் கூட்டத்தின் நெரிசலில் அவளின் மீது வேறொருவரும் இடித்திடா வண்ணம், அவனும் அவளை தொடாத வண்ணம், எவ்வளவு பாதுகாப்பாக கூட்டிச் சென்றான்!!!... ஒரே நாளில் சில மணி நேரத்தில் தனக்கு இப்படி ஒரு ஆணைப் பிடிக்கும் என்று யாரேனும் சொல்லியிருந்தால் கண்டிப்பாக சண்டைக்கேப் போயிருப்பாள்… ஆனால் இன்று நிலைமை தலை கீழாகிப் போனதே… அவனைப் பிடித்திருக்கிறது அதற்காக அவனிடம் பேசினால், அவனிடம் உள்ள பணத்திற்காக தான் பேசுகிறேன் என்று அவன்
தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வது..?... வேண்டாம்… மௌனமாக விலகிவிடலாமென முடிவெடுத்தாள்….
அபியுடன் ரிகா வருவதை பார்த்தவள், “எங்க போயிருந்தீங்க ரெண்டு பேரும்?...”
“இல்லை ஷன்வி… அபி டிராயிங்ஸ் காட்டுறேன்னு அவளுடைய ரூமிற்கு கூட்டிட்டுப் போனாள்…”
“ஓ… சரி ரிகா… இங்கே பார்ட்டி முடிஞ்சது… எல்லாரும் சாப்பிட போயிட்டிருக்காங்க… நாம கிளம்பலாமாடா?...”
“ஹ்ம்ம் சரி…”
“அபியை அனுவிடம் விட்டுவிட்டு போகலாம் வா…”
“அவளை விட்டுட்டு உன் தோழி எங்க தப்பிச்சு போகபோறாங்கன்னு கேளுக்கா…” என்ற குரலில் தூக்கிப்போட திரும்பி பார்த்தாள்… அங்கே அவ்னீஷ் நின்று கொண்டிருந்தான் அனுவுடன்…
“இல்லை அனு… நேரமாயிடுச்சு… பாட்டி தேடுவாங்க… அ…தா…ன்…”
“வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போறதா?... வா பேசாம என்கூட….”
“அம்மா… நாமும் சாப்பிட போகலாமா” என்று அபி கேட்க…
“சரிடா குட்டி பாட்டிகிட்ட போ… அம்மா வரேன்…” என்று மகளை அனுப்பிவிட்டு..
“இவளுக்கு பால் சோறு எடுத்து வச்சிருக்கேன்டா கிட்சன்ல… நான் போய் அதை எடுத்துட்டு அங்கே வரேன்… நீ இவங்கள சாப்பிட அழைச்சிட்டு போடா ஈஷ்…”
“சரிக்கா…” என்று அமைதியாக போகும் தமையனை வியப்பாக பார்த்தபடி நின்றாள் அனு…