சில வருடத்தில் இந்த உணர்வு உயிரற்றதாகிவிடும் என என்னவோ அவன் சொல்லிவிட்டு போய்விட்டான், ஆனால் இதோ இத்தனை வருடங்களாகிவிட்டது அப்படி எந்த மறதியும் வரவே இல்லை இவளுக்கு.
என்ன ஒருவிதமாக தனக்குள் இறுகி இருந்தாள். எதன் மீதும் ஒருவித பற்றற்ற மனப்பான்மை. ஆனால் விரக்தியோ வெறுப்போகிடையாது. ஆண்டவருடனான உறவு அவளை காப்பற்றி வந்தது. இந்த காதல் விஷயத்தில் கடவுளின் விருப்பம்தான் என்ன? அவசரப்பட்டு மனதை கொடுத்ததின் பலனை பாடாக அனுபவித்தாள்.
அவன் இவளை தேடி வருவான் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் ‘வரமாட்டானா’ என்ற ஏக்கம் கொன்றது நிஜம். வேறொருவருடன் திருமணம் வாழ்நாளில் கிடையாது என்பது மட்டும் இவளுக்கு உறுதி.
பி. எச். டி வரை படித்து முடித்தாயிற்று. தந்தையிடம் அனுமதி பெற்று இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள் நிறுவ முடிவு செய்து, ஆரம்பகட்டமாக முதல் நிறுவனத்தை அவளது பூர்வீகமான கோயம்புத்தூர் மாநகரில் தொடங்க திட்டமிட்டாள்.
கோயம்புத்தூரில் இடம் பார்த்து முடித்தாயிற்று. பலவித விளம்பரங்கள் ஜெ.சி.டி அகாடமி வரவை கட்டியம் கூறின. ஆம் அதுதான் இவள் நிறுவனத்திற்காக இவள் தெரிந்தெடுத்த பெயர்.
ஜாஷ்வா என வைக்கத்தான் விருப்பம். அவள் அப்பா மறுத்ததோடு, மட்டுமல்லாது ஜெ.சி என வேண்டுமானால் வைத்துக்கொள் என சொன்னபோது பிறந்ததுதான் இந்த பெயர் ஜெ.சி.டி., காரணம் கூட கேட்க்காது அப்பா சம்மதித்துவிட்டார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளை உள்ளடக்கிய வளாகமாக ஜெ.சி.டி ஐ திட்டமிட்டிருந்தாள். அப்பாவே தங்களுக்கு கட்டிட வேலை செய்து தரும் ஒரு மேற்கத்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கூட செய்திருந்தார். கட்டிட வேலை ஆரம்பிக்க வேண்டிய நேரம். “வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி கலந்து கொள்ள வா” என்றழைத்தார் தந்தை.
என்று இவளுக்கு கடவுள் நம்பிக்கை வந்ததோ அன்றே அவர் இவள் பற்றிய அரசியல் கனவுகளை கைவிட்டிருந்ததால், இப்படி இவளை விருந்து, விழா என எதற்கும் அழைக்கும் வழக்கம் அவருக்கு கிடையாது. கூட்டம், கும்மாளம் இதில் இவளுக்கும் சிறிதும் நாட்டமில்லைதான். ஆனால் அப்பாவை அவ்வப்பொழுது பார்க்க கிடைக்கும் வாய்ப்பை தவறவிட விருப்பமில்லை. கிளம்பிவிட்டாள்.
அவர்கள் வீட்டு புல்வெளியில்தான் விழாபோலும். படு படோபடமான அலங்காரத்தில் அது அவள் வீடுதானா என அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்பா முகத்தில் ஒரே ஆரவாரம். அவரை இவ்வளவு சந்தோஷமாக பார்த்து ஞாபகம் இல்லை. ‘அதுவும் எலெக்க்ஷன் பக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில்?’
இவளுக்கான உடை தேர்வு கூட இந்த முறை அப்பாவினுடையதுதானாம். வழக்கமாக உடை வாங்கும் ஊழியர்கள் சொன்னார்கள் “ஸாரே கொண்டு வந்தாங்க!” இது கூட அப்பாவுக்கு தெரியுமா? அவ்வளவு அழகாய் இருந்தது அந்த ஆரஞ்சு வண்ண காக்ரா மை நிற வேலைப்பாடுகளுடன்.
இவளது மூன்று சாண் நீள கற்றை முடியை அழகாய் கொண்டையிட்டிருந்தனர் அலங்கார நிபுணர் குழு. வைரமும் மரகதமுமாய் நீள காதணிகள் அதற்கேற்ற நெக்லெஸ், அடுக்காய் வளையல்கள். அதே போன்ற மெல்லிய ஒட்டியாணம்.
ஏற்ற அணிமணி அணிந்து, அலங்காரம் முடித்து, இவள் நின்றபோது, இவள்தானா இது, என்ற சந்தேகம் இவளுக்கே வந்தது. கண்ணாடி பார்த்து அலங்காரம் செய்து பல காலமாகியிருந்ததும் காரணமாக இருக்கலாம்.
“இந்த சுட்டியும் வச்சுட்டா மேக்கப் முடிஞ்சிடும் மேம்.” அந்த மேக்கப் உமன் சொல்ல “நோ வே இதுவே அதிகம், சுட்டியெல்லாம் வேணாம்” இவள் மறுத்த நேரம் அவளது அறைக்குள் அப்பா வந்து நின்றார்.
“என்னம்மா முடிஞ்சுதா, எல்லோரும் வந்துட்டாங்க, வாம்மா”
விழி விரிய ஆச்சரியமாக அப்பாவை பார்க்க, அவரோ இவள் கைபற்றி அழைத்து சென்றுவிட்டார்.
கூட்டமாக விருந்தினர்கள் சூழ்ந்து நிற்க அவர்கள் முன் சென்றதும், “ஒரு அறிவிப்பு, இன்று என் மகள் நிரல்யாவிற்கு நிச்சயதார்த்தம்” என்றார்.
தொடரும்
{kunena_discuss:752}