மெத்தையில் விழுந்தவளுக்கு, எதுவுமே நினைவில்லை… அவளின் ராமனுக்கு உடல் நலமில்லை என்பதை தவிர…
மாலை வரை, கஷ்டப்பட்டு அலுவலகத்தில் வலுக்கட்டாயமாக வேலைப் பார்த்தவள், வீட்டிற்கு வந்ததும் தலைவலி என்று மயூரியிடம் சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்…
காலையில் தொடாமல் தொட்ட டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள்… அன்று புரிந்த போரின் விளைவாக நிலவும் அவளுக்கு பாராமுகம் காட்டியது… ஜீரணித்துக்கொண்டு மனம் உடைந்து போவதையும் பொருட்படுத்தாமல் எழுத்துப்போரை துவங்கினாள்…
சில தினங்கள்
பிரிந்து இருப்பதே
பல யுகமாய்
தோன்றுகிறதே....
என்றும் உன்னை
பிரியாதிருக்க
வேண்டுகிறேன்
ஒவ்வொரு நொடியும்....
தூக்கத்தைத் தொலைத்து
கண்மூடி சாய்ந்தாலும்
உள்ளே பொக்கிஷமாய்
உன் நினைவுகள்.....
உன்னிடம் பேசாத
வார்த்தைகள்
மௌனமாய் கரைந்தது
நெஞ்சுக்குள்ளே.....
கிடைத்த இதமான
தனிமையிலும்
இனிமையை சுமக்க
மறுத்தது இதயம்.....
அமைதியின்றி அலைப்புறும்
புறாவைப்போல்
தத்தளித்து தவித்தது
என் மனது.....
கவலை மனதை
ஆக்கிரமித்து உடைத்து
இமைகளை
நனைத்தது....
அன்று உன்னை நேசிக்க
ஆரம்பித்ததை தவிர்த்திருந்தால்
இன்று என்மனம் உடைந்து போனதையும்
தடுத்திருப்பேன் நான்.....
ஆனாலும்
உனக்காக தவிப்பதை
சுகமாய் உணருகிறேன்
இவ்வேளையில்......
இந்த பரிதவிப்பின்
ரிஷி மூலம் அறிந்து
உணரும்போது உள்ளம்
உரைப்பதோ உண்மையாய்....
ஆம்....
என் உயிரினில்
உணர்வினில்
கலந்தாய்
நீ.........
சில தினங்களுக்குப் பிறகு, ஒரு நாள், தினேஷ் காவ்யாவிடம், ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினான்…
கணவனின் இந்த பரபரப்பு, சந்தோஷம், அவளுக்கு புரியாத புதிராக இருந்தது…
“என்னடா… இப்படி பார்க்கிற?...”
“இல்லங்க… இன்னைக்கு நீங்க புதுசா தெரியுறீங்க…”
“ஹ்ம்ம்… ஆமா… மாப்பிள்ளை பார்த்திருக்கேனே… அதான்…”
“மாப்பிள்ளையா!!!! எந்த மாப்பிள்ளை…”
“மயூரிக்கும் சாகரிக்கும் தான்…”
“என்னங்க… அவங்க ஏற்கனவே வேற ஒருத்தரை விரும்புறாங்கன்னு சொன்னீங்க… இன்னைக்கு இப்படி மாப்பிள்ளை அது இதுன்னு சொல்லுறீங்க…”
“அப்ப சொன்னதும் நிஜம் தான்… இப்ப சொல்லுறதும் நிஜம் தான்…” என்றவன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டான்…
“கவிம்மா… என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே?...”
“நீங்க மட்டும் தாங்க என் நம்பிக்கை…” என்றாள் சட்டென்று…
“இது போதும்டா எனக்கு… அப்பாவிடமும் பேசிவிட்டேன்… அவரும் பையனைப் பார்க்க விரும்புகிறார்… அவர் பார்த்து சரி என்று சொன்ன பின்னால், ஜனா அப்பா ராசு அப்பாவிடம் பேசுவார்… அதன் பின், திருமணம் தான்… உன் நாத்தனார் இரண்டு பேருக்கும்…”
கடவுளே இது என்ன சோதனை?... திடீரென்று இவர் ஏன் இப்படி எல்லாம் சொல்கிறார்?... விரும்பின வாழ்க்கை அவர்கள் இருவருக்கும் அமைய வேண்டுமென்று தானே நான் உன்னை கேட்டுக்கொண்டேன்… இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன இறைவா?...
பாவம் அந்த சின்னஞ்சிறுசுகள்… அவர்களின் வாழ்வில் புயலை வரவழைக்காதே… உன்னை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்… இந்த வயதில் அவர்களுக்கு வேதனை எதுவும் வேண்டாம்… என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள் காவ்யா…
அவளுக்கு அவன் சொல்வதின் அர்த்தம் புரியாமல் இல்லை… எனினும், இதற்கு மயூரியும் சாகரியும் என்ன சொல்வார்கள் என்று குழப்பமானாள்…
அவள் குழம்பியதை சற்று நேரம் பார்த்திருந்தவன், புன்னகையுடன், அவளை அணைத்துக்கொண்டு அவளின் காதோரம் சிலவற்றை சொன்னான்…
அதைக் கேட்ட அவளும் நிம்மதியுடன் கணவனின் மார்பில் சாய்ந்து கண் மூடினாள்…