(Reading time: 25 - 49 minutes)

 

ம்மா நான் வருவது இருக்கட்டும், முகிலன் அண்ணாகிட்ட முதலில் கேளுங்க… அப்படியே ஆதி அண்ணாவிடமும் தான்… ஏன்னா, இப்போ அவங்க வருவாங்கன்னு எனக்கு தோணலை…”

“இப்படியே எல்லாரும் சொல்லிட்டே இருங்கடா... ஒருத்தரும் ஊருக்கு வந்துடாதீங்க… இங்கேயும் சில பேரு இருக்கோமென்ற நினைப்பு உனக்கு இருக்கிறதா இல்லையாடா?...”

“அம்மா… நான் வரேன்மா… ஆனா கொஞ்ச நாள் ஆகும்… சீக்கிரம் வரேன்மா… ப்ளீஸ்… கோபப்படாதீங்க….” என்று தன் தாயை கெஞ்சிக்கொண்டிருந்தான் அவ்னீஷ்…

“என்னவோ பண்ணுங்க….” என்று சலிப்பாக சொல்லிக்கொண்டிருந்தவரிடம் இருந்து போனை வாங்கினாள் அனு…

“ஹாய்… ஈஷ்…. எப்படி இருக்குற?... ஆமா அதென்ன அம்மா வார்த்தைக்கு எதிர்பேச்சு பேசுற?... ஒழுங்கா ஊருக்கு வந்து சேரு… புரியுதா?...”

“இப்படி கூப்பிடாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லுறது, இதுல இப்படி பேரு சொல்லி கூப்பிட்டு நல்லா இருக்கியான்னு கேள்வி வேற?... நான் ஒன்னும் எதிர்பேச்சு பேசலை… அதான் எனக்கும் சேர்த்து நீ பேசுறியே மாமாகிட்ட… ஊருக்கெல்லாம் வரமுடியாது… போ…”

“டேய்… உனக்கு கொழுப்பு கூடிட்டுடா…”

“ஆமா… நீதானே எனக்கு சமைச்சுப் போடுற தினமும்… போ போ… கடுப்பேத்தாத…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “அனு…” என்ற ஷ்யாமின் குரல் கேட்க… “இதோ வந்துட்டேங்க…” என்றவள்… “உன்னை அப்புறமா பேசிக்கிறேண்டா ஈஷ் பிசாசே…” என்று சென்றுவிட்டாள்…

அம்மா, அப்பா, அக்கா, மாமா, அபி, அண்ணன்மார்கள், என அனைவரும் இருந்த குடும்ப புகைப்படத்தை மேஜையின் மீதிருந்து எடுத்தவன், தாயின் சொல் நிறைவேற்ற முடியாது போனதை எண்ணி வருந்தினான்…

செல்ல சண்டையிடும் அக்கா, அவளிடம் சிறிது நேரம் சகஜமாக பேசி சிரிக்க முடியாது போயிற்றே…

மனைவியை விட்டு கொடுக்காத, எப்போதும் அன்பை பொழியும் கணவர், ஷ்யாம்… இப்படி மருமகன் வாய்த்தால் எந்த குடும்பத்திலும் நிம்மதிக்கு குறைவு இருக்காது தான்… எனினும் அக்காவை சீண்டி, அவரிடம் திட்டு வாங்க முடியவில்லையே…

தத்தி தத்தி நடந்து மழலை மொழி பேசும் அபியை அள்ளி அணைக்க துடித்தும், முடியாது போன நிலையை எண்ணி வேதனை கொண்டான்…

கம்பீரம் நிறைந்த தன் தந்தையின் சிரிப்பை நேரில் பார்த்து ரசிக்க, கொடுத்து வைக்க இயலாது போனதின் காரணமும் அவனை நோக செய்தது…

எந்த நேரமும் அரட்டை அடிக்கும் முகிலன் அண்ணா, அவர் அருகே இருந்தால் நேரம் போவதே தெரியாது… இப்போது அவரும் அருகில் இல்லை.. இந்த நேரமும் நகர மறுக்கிறது…

பொறுப்பான, நல்ல அண்ணன் ஆதி… கலகலவென்று எப்போதும் இருக்காவிடினும், அவர் இருக்கும் இடத்தில் சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது எப்போதும்… எந்த விஷயத்தையும் அவர் அணுகும் முறையே வித்தியாசம் தான்… அவருடனாவது சில நாட்கள் இருக்க முடிந்ததே…. ஹ்ம்ம்…

வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அணுதினமும் நினைத்துப் பார்த்து வேதனையும், அதனால் ஏற்படும் சுகத்தையும் பெறும் விஷயம் தனது குடும்பம் பற்றியது தான்…

தாயின் கையில் பிடிசோறு உண்ணமுடியவில்லை

தகப்பனின் அரவணைப்பில் நிற்க நாளிகையில்லை

தமக்கையின் சீண்டலில் பங்கு எடுக்கவில்லை

தமையனின் அருகாமையில் நிலைத்து நின்றபாடில்லை

பிள்ளை மொழிபேசும் மழலையை அள்ளிகொள்ள இயலவில்லை

மண் மணம் மாறா தாய் நாட்டை விட்டு பிரிந்து

அயல் நாட்டில் வாழ்வதால் தானோ

அவர்கள் தங்களது குடும்பத்தை விட்டு

அந்நியனாகி போன உணர்வு எற்படுகின்றது??

இருந்தும் பசுமையான உறவுகளின் நினைவுகள் தான்

அவர்களுக்கு உயிர் ஊட்டுகிறது தினமும்…”

“கவி.. கிளம்பிட்டியா?...”

“இதோ வந்துட்டேங்க… நீங்க சித்து நந்து கிளம்பிடாங்களான்னு பாருங்க…”

“சரிடா…” என்றவன் சாகரியைத் தேடி சென்றான்…

“வாங்க தினேஷ் அண்ணா…”

“மயூரி நீங்க எல்லாரும் ரெடி தானே?...”

“ரெடிப்பா…” என்றபடி மயூரியின் பின்னிருந்து வெளி வந்தனர் சித்துவும் நந்துவும்…

“ஹேய்… சூப்பரா இருக்கீங்க இரண்டு பேரும்… யாரு ரெடி பண்ணி விட்டா உங்களை இவ்வளவு அழகா?...”

“வேற யாரு நம்ம மயிலும், பத்மினியும் தான்பா…” என்றனர் இருவரும்…

“அப்படியா… சரி சரி வாங்க.. நேரமாச்சு… கிளம்பலாம்….” என்று தினேஷ் அவசரப்படுத்தினான்…

“ஆமா.. அப்பா.. அம்மா எங்கே?...”

“அவ ரெடி ஆகிட்டிருக்கா சித்து… சரி… சாகரி எங்கே… ஆளையேக் காணோம்…?...”

“அவ உள்ளே இருக்கா அண்ணா.. நீங்க போங்க… நான் கூட்டிட்டு வரேன்…”

“சரிம்மா… சீக்கிரம் வாங்க…” என்றபடி சென்றுவிட்டான் தினேஷ்…

எப்பொழுதும் கோவிலுக்கு என்றால், முதல் ஆளாக தயாராவாள்… இன்று இவளுக்கு என்ன நேர்ந்தது?... என்ற யோசனையுடன் சாகரியின் அறைக்கு சென்றாள் மயூரி…

காலையில் தினேஷ் வந்து இன்று எல்லோரும் கோவிலுக்கு செல்வோம்… என்று கூறியபோது அவளுக்கு பகீரென்றது… இன்று வெள்ளிக்கிழமை… போன வாரம் இதே நாளில் அவள் அவனின் ராமனைப் பார்த்தாள் அல்லவா… அதன் பின் இன்று அவன் வருவானோ மாட்டோனோ என்று எண்ணிக்கொண்டிருந்தவள், தினேஷின் முடிவில் கொஞ்சம் கலங்கி தான் போனாள்…

ஒருவேளை ஆதர்ஷ் இன்று வந்து இவளும் அங்கே குடும்பத்தோடு சென்றால், அவனிடம் பேச முடியாதே… பேசுவது என்ன பார்க்க கூட முடியாதே அவளால் சிறிதும்….

அதுவும் இல்லாது ஆதர்ஷிடம் எல்லாம் சொன்ன பிறகும் அவன் ஏன் அவளை சந்திக்க முற்படவில்லை, அலுவலகத்திலும், அதன் பின் இந்த கோவிலிலும்…

எதனால்… ஏன்?... என்ற கேள்வி தான் அவளின் மனதில் இமயமாக எழுந்து நின்றது…

ஆதர்ஷிற்கு எதுவும்….. என்று எண்ணமிடவும் அவள் மனம் மறுத்தது… அவனைப் பார்த்துவிட்டு வந்த மறுநாளே அவளின் மனது துடிக்க ஆரம்பித்துவிட்டது… எதுவோ சரியில்லை என்று அவளும் உணரத் தான் செய்தாள்… ஆனாலும் அவள் வணங்கும் ஸ்ரீராமனின் மேல் பாரத்தை போட்டு அதன் பின் வந்த இந்த 7 நாட்களையும் கடத்திக்கொண்டிருக்கின்றாள்…

தன்னையும் அறியாமல் அவளது கை டைரியை நோக்கி நகர்ந்தது… ஆம்… 5 நாட்களுக்கு முன் அந்த நிலவோடு சண்டைப் போட்டுக்கொண்டிருந்தவள் கூர்மையான பேனாவைக்கொண்டு டைரியோடும் போர் புரிந்தாள்…

அந்த போரின் தாக்கத்தை கண்களில் மறுபடியும் தரிசிக்க முற்பட்டவளை மயூரியின் வருகை தடுத்தது…

“அங்கே தினேஷ் அண்ணன் வந்து உன்னை எங்கேன்னு கேட்கிறார்… நீ என்னடான்னா, இந்த டைரியை கொஞ்சிட்டு இருக்குற…”

“ஓ… கொஞ்சுற மாதிரி இருக்கா… ஹ்ம்ம்.. உனக்கு அப்படி தான் தெரியும்,,,, எல்லாம்….” என்றவாறு சிரித்தாள் சாகரி…

“ஹேய்… என்னடி ஏன் சிரிக்குற?...”

“இல்ல… விடிய விடிய செல்லம் கொஞ்சினவங்களை நானும் பார்த்தேன்… அதான்…” என்றவளின் சிரிப்பு மேலும் நீள…

“என்னடி சொல்லுற?...” என்றாள் மயில் புரியாமல் …

“நீ கனவு கண்டு ராத்திரி முழுவதும் உளறியதை தான் சொன்னேன்… ஆனாலும் சும்ம சொல்லக்கூடாதுடி… செமயா கொஞ்சிட்டடி என் அண்ணாவ… நேரில் தான் கண்டிஷன்ஸ் எல்லாம் போல.. கனவுல எதும் இல்லையோ…” என்றபடி சாகரி மயூரியை கிண்டல் செய்ய…

வெட்கத்துடன், “சீ… போடி…” என்றபடி ஓடிவிட்டாள் மயூரி…

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.