'நமக்குள்ளே எந்த பிரச்னையும் எப்பவுமே வராது' என்றாள் சட்டென அவன் பேச்சினிடையே புகுந்து.
சரிடா. வராது. வர வேண்டாம்ன்னுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் ஒரு வேளை சின்னதா... அவன் முடிப்பதற்குள்
எந்த பிரச்னையும் வராது. அப்படியே வந்தா நான் வேறெதுவும் செய்ய மாட்டேன் எங்க proffesorரை இறுக்கமா கட்டிபிடிச்சுக்குவேன் அவ்வளவுதான்.' அழுத்தமாக சொன்னாள் அபர்ணா.
அவன் கண்கள் மெல்ல நிமிர, நீர் தளும்பும் அவள் கண்களுக்குள் கரைந்து போனது அவன் இதயம்
சத்தியமா.... என்றாள் கண்ணீர் வழிய 'இறுக்கமா கட்டிபிடிச்சுக்குவேன் அவ்வளவுதான்.'.
அவளை அப்படியே இழுத்து தன்னுடன் சேர்த்துக்கொள்ள விழைந்த மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு அவள் கண்ணீரை துடைத்தபடியே உருகிப்போன குரலில் கேட்டான் 'ஏண்டி இப்படி பண்றே?
அவள் பதில் பேசாமல் தலை குனிந்து நின்றிருக்க 'சரி போ. போய் எதையும் யோசிக்காம தூங்கு. நான் அப்புறம் வரேன் கிளம்பி விட்டிருந்தான்',
கல்லூரியை அடைந்த பின்னரும் அவள் முகமும் குரலும் அவன் நினைவை விட்டு அகல மறுத்தன.
.தொண்ணூறாவது முறையாக யோசித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாக கைப்பேசியை எடுத்தாள் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த இந்துஜா.
விஷ்வாவின் எண்ணை அழுத்தினாள்.
அவள் எண் ஒளிர்ந்ததை பார்த்த மாத்திரத்தில் எடுத்து விட்டிருந்தான் அவனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த விஷ்வா.
விஷ்...வா என்றாள் கொஞ்சம் மெதுவான குரலில்
ம்... சொல்லுடா.
நாளைக்கு நியூ இயர். அதனாலே... அவள் குரல் தயக்கத்தில் மூழ்கி மெலிதாய் ஒலித்தது.
அவன் கண்கள் கணினியின் மீது இருக்க, அவன் விரல்கள் கீ போர்டில் விளையாடிக்கொண்டிருக்க என்ன வேணும் சொல்லுடா? என்றான் அவள் தயங்குவதை புரிந்துக்கொண்டவனாய்.
இல்லை... புது வருஷம் பிறக்கும் போது என்ன செஞ்சாலும், அது நமக்கு வருஷம் பூரா கிடைக்கும் அப்படின்னு உங்க அம்மா சொல்வாங்க.
எங்கம்மாவா??? சரி அதனாலே.....
இ...ல்லை...... இன்னைக்கு உ...ன் கூட கொ...கொஞ்ச நேரம் இருக்கணும் போ....லே இருக்கு. அண்ணனை ஏமாற்றுகிறோமோ என்ற குற்ற உணர்வில் குரல் தடுமாற சொன்னாள் இந்து.
மௌனம் நிலவியது விஷ்வாவினிடத்தில். என்ன சொல்ல வருகிறாள் அவள்? இன்று என்னுடன் இருந்தால் வருடம் முழுவதும் என்னுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுமென்றா? இதையெல்லாம் நம்புவதாக இல்லை அவன். அவன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்........
இன்னைக்கு அத்தை அவங்க காலேஜ் டீச்சர்ஸ், friendsகெல்லாம் நம்ம வீட்டிலே டின்னர் பிளான் பண்ணியிருக்காங்க. நீயும் வரியா விஷ்வா?
வீட்டுக்கா? விளையாடுறியா நீ?
இல்லை விஷ்வா. நிஜமாத்தான். அஸ்வினி வந்திருக்கா. தெரியுமா உனக்கு?
தெரியும் இன்னைக்கு காலையிலே எனக்கு போன் பண்ணா என்றான் விஷ்வா
நீயும் வா விஷ்வா. அவ வரும்போது நீ வரக்கூடாதா? அவளுக்கு ஒரு நியாயம். உனக்கு ஒரு நியாயமா? என்றாள் இந்து.
பதிலில்லை அவனிடம்.
புது வருஷம் பிறக்கும் போது நாங்க எல்லாரும் ஒண்ணா இருக்கப்போறோம் நீ மட்டும் தனியா இருந்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் விஷ்வா.
அதுக்கில்லை டா.....
ப்ளீஸ் விஷ்வா. வர மாட்டியா? 'ப்ளீஸ் விஷ்வா. எனக்காக இன்னைக்கு ஒரு நாள் வா விஷ்வா. கெஞ்சலும், தவிப்புமாய் ஒலித்த அவள் குரலை மறுத்து .பதில் பேசத்தோன்றாதவனாய் அப்படியே அமர்ந்திருந்தான் அவன்.
சில நிமிடங்கள் கழித்து, 'கொஞ்சம் டைம் குடுடா நிலாப்பொண்ணு யோசிச்சு சொல்றேன்'. என்றான் விஷ்வா.
போய் விடலாமா? போய் அம்மாவை பார்த்து விட்டு வரலாமா? போனால் தான் என்ன? என் அம்மாவை நான் போய் பார்க்க யாரை கேட்க வேண்டும்? அழைப்பை துண்டித்து விட்டு யோசித்தபடியே அமர்ந்திருந்தான் விஷ்வா.
தனது மதிய உணவை முடித்துவிட்டு ஹாஸ்டல் வாசலுக்கு வந்து பரத்திற்காக காத்திருந்த அபர்ணாவின் கைப்பேசி ஒலித்தது.
அப்பு பிஸியா இருக்கியாடா? என்றான் விஷ்வா மறுமுனையில்.
இல்லை விஷ்வா. சொல்லு.
'நான் கேட்கிற கேள்விக்கு சட்டுனு எஸ் ஆர் நோ சொல்லணும். நான் இன்னைக்கு எங்க அம்மாவை போய் பார்த்திட்டு வரவா? வீட்டிலே இன்னைக்கு பார்டியாம். அஸ்வினியும் வந்திருக்காடா. நம்ம இந்துமா கூப்பிட்டுச்சு என்னை. போயிட்டு வந்திடவாடா.? எங்க அம்மாக்கு நான் நியூ இயர் விஷ் பண்ணியே ரொம்ப வருஷம் ஆச்சுடா. எல்லாம் சரியா நடக்குமாடா? நீ சொல்லு அப்பு. நீ சொன்னா சரியா இருக்கும்டா' அவளை பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்தான் விஷ்வா. அவன் குரல் பட பட படவென ஒலித்தது. அம்மாவிடம் பேசிவிடவேண்டுமென்ற ஆவலும், தவிப்புமே அதில் இருந்தது. மெளனமாக கேட்டுக்கொண்டே இருந்தாள் அபர்ணா.
விஷ்வா இப்படியெல்லாம் தவித்து அவள் பார்த்தது இல்லை. அவள் மனம் முழுவதும் அவனுக்கான ஆதங்கம் பரவியது. அவனை இப்போதே அவனது தாயின் முன்னால் கொண்டு நிறுத்திவிட வேண்டுமென்றுகூட தவித்தது அவள் உள்ளம்.
போயிட்டு வா விஷ்வா. உங்க அம்மாவை பார்க்க நீ யாரை கேட்கணும்? என்றாள் அபர்ணா. எல்லாம் நல்லபடியா நடக்கும்.
எங்க அம்மா என்கிட்டே பேசுவாங்கதானே அப்பு?
'கண்டிப்பா பேசுவாங்க விஷ்வா. தைரியமா போயிட்டு வா எல்லாம் நல்லதா நடக்கும்' .மனதார சொன்னாள் அபர்ணா. அப்புறம் வெறும் கையோட போகாதே ஸ்வீட் பாக்ஸ் ஏதாவது வாங்கிட்டு போ என்றாள் அவள்.
பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவளின் மனதிற்குள்ளே வேண்டுதல் 'இறைவா. எல்லாம் சரியாக நடக்க வேண்டும். விஷ்வாவின் அம்மா அவனுடன் பேசி விட வேண்டும்.'