“ஹலோ, ரவி எப்படி இருக்கீங்க?”
“அடடே ரகுராம் சகலையா. எனகென்ன உங்க புண்ணியத்துல அமோகமா இருக்கேன்”
“என்ன ரவி எலெக்ஷன் வர்ற சமயத்துல இப்படி மக்கள் பணத்துல கைய்ய வச்சுட்ட”
“என்ன ரகு, புதுசா மக்களைப் பத்தி கவலை எல்லாம் பட ஆரம்பிச்சுட்டீங்க? இந்த சிட்ஃபண்ட் ஆரம்பிக்கும்போதே கொஞ்ச நாள் நல்லா ஓடறா மாதிரி காமிச்சுட்டு அப்பறம் இழுத்து மூடறதாதானே பிளான் பண்ணி இருந்தோம். இப்போ ஏதோ நான் தப்பு பண்ணிட்டா மாதிரி கேள்வி எல்லாம் கேக்கறீங்க?”
“அது சரிதான் ரவி, ஆனா இப்போ கொஞ்ச நாள் முன்னாடிதான் அந்த கல்குவாரி மாட்டர்ல மாட்டினேன். இன்னும் அந்தக் கேசே முடிஞ்சபாடில்லை. பேப்பர்க்காரன் தினம் ஒரு நியூஸ் வளச்சு வளச்சு எழுதிட்டு இருக்கான். நியூஸ் சேனல்ல பாதி நேரம் இந்த நியூஸ்தான் ஓடிட்டு இருக்கு. அதுக்கே இந்த முறை சீட் கிடைக்குமா தெரியலை. இதுல இன்னொரு ஸ்காண்டல் அப்படின்னா அப்பறம் என்னோட அரசியல் வாழ்க்கையை மறந்துட வேண்டியதுதான்”
“ஏன் ரகு இத்தனை கவலைப்படறீங்க. நம்ம மக்கள் கிட்ட இருக்கற மிகப் பெரிய பலம், பலவீனம் ரெண்டுமே என்ன தெரியுமா? மறதிதான். இன்னைக்கு கல்குவாரி பத்தி பேசறவங்க, நாளைக்கே சினிமா நடிகர் எந்த நடிகையை வச்சிருக்கார்ன்னு அடுத்த மேட்டர்க்கு போய்டுவாங்க. உங்க நியூஸ் பத்தி இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு பரபரப்பா பேசுவாங்க. அப்பறம் அதுவே ஆறின கஞ்சி, பழம் காஞ்சி ஆகிடும்”
“அப்படிலாம் இந்த முறை அவங்க விடறா மாதிரி தெரியலை ரவி”
“முதல்ல நீங்க எதுக்கு இத்தனை கவலைப்படறீங்க ரகு. நீங்க இதுல நேரடியா இல்லவே இல்லையே. உங்களுக்கு நான் பினாமி, எனக்கு என் அக்கா பையன், அவனுக்கு இன்னொரு ஆள். இப்படி ஏகப்பட்ட பேர் இருக்காங்க. முதல்ல நான்தான் இதுல இருக்கேன்னு கண்டுபிடிக்கவே இன்னும் வருஷக்கணக்காகும், அப்பறம்தானே உங்களைக் கண்டுபிடிக்க”
“நினைச்சுட்டே இரு. நம்ம போலீஸ் எப்பவோ நீதான் இதோட main ஆள் அப்படின்னு மோப்பம் பிடிச்சுட்டாங்க”
“என்ன சொல்றீங்க..... எப்படி, எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சுது?”
“நம்ம போலீஸ்லயும் ஒழுங்கா வேலை செய்யற ஆளுங்க இருக்காங்களே. அவங்கதான் தீயா வேலை செஞ்சு உன் வரைக்கும் மோப்பம் பிடிச்சுட்டாங்க. நானும் இருக்கேன்னான்னுதான் அவங்களுக்கு இன்னும் நிச்சயமா தெரியலை”
“ஹ்ம்ம், என்னைக் கண்டு பிடிச்சுடாங்கன்னா ஏன் இன்னும் வெளில சொல்லாம இருக்காங்க?”
“அதுதான் எனக்கும் புரியலை ரவி. இதுக்கு நடுல பணம் போட்டதுல ஒரு ஆள் வேற மண்டைய போட்டுட்டான். ஆனா அதையும் இவங்க பத்திரிகைக்கு சொல்லலை. எதுனா பெரிசா பிளான் பண்றாங்களா தெரியலை”
“நீங்க சொல்றது சரியான தகவல்தானா, இவ்வளவு சீக்கிரம் இத்தனைப் பேரை தாண்டி என் வரைக்கும் கண்டுபிடுச்சுட்டாங்களா?”
“கண்டுபிடிச்ச போலீஸ் ஆபீசர் கீழ இருக்கறது நம்மாளு ரவி. அதனால இது நிச்சயமான தகவல்தான். ரெண்டாவது அவங்க கிட்ட ஏதோ ருசுவான ஆதாரம், இல்லை சாட்சி இருக்கு ரவி. அதை இன்னும் வலுவாக்கத்தான் வெயிட் பண்றாங்கன்னு நினைக்கறேன். இல்லைன்னா எப்பவோ உன்னைக் கைது பண்ணி இருப்பாங்க. ஏன்னா இந்தக் கேஸ் எடுத்து நடத்தறது ACP பாலு. அந்தாளு எப்படா நம்மளை மாதிரி ஆளுங்களை உள்ளத் தள்ளலாம்ன்னே காத்துட்டு இருப்பான். தேவை இல்லாம நாளைக் கடத்த மாட்டான்”
“ஓ அந்தாளா, அப்போ நாம கொஞ்சம் கவனமாதான் நம்ம அடுத்த நடவடிக்கை எடுக்கணும். சரி ரகு, நீங்க விஷயத்தை சொல்லிட்டீங்க இல்லை. இனி ஆக வேண்டிய காரியத்தை நான் பார்த்துக்கறேன். போலீஸ்னால மட்டும்தான் நம்மளைப் பத்தி தெரிஞ்சுக்க முடியுமா, அவங்க எத்தன்னா, நாமல்லாம் எத்தனுக்கு எத்தன். எத்தனை நாள் ஆனாலும் இந்தக் கேஸ் நகராதபடி பண்றேன் பாருங்க”
“எதைப் பண்றதா இருந்தாலும் பார்த்துப் பண்ணு ரவி. ஏற்கனவே என் பேர் ரிப்பேர்ல இருக்கு. அதை இன்னும் மோசமாக்கிடாதே. இந்தப் பணம் நமக்கு பெரிசில்லை. ஒரே வருஷத்துல இந்தப் பணத்தை நான் வேற ஏதானும் வழில எடுத்துடுவேன். அதனால நீ பணத்தைப் பார்த்து, என்னை வசமா மாட்ட வைக்கறா மாதிரி வேலை பண்ணிடாதே”
“அட என்ன ரகு நீங்க, கவலையேப்படாதீங்க, போலீஸ் என்னையே நெருங்காமப் பார்த்துக்கறேன், அப்பறம்தானே அவங்க உங்ககிட்ட வரப்போறாங்க”, ரவி என்ன பண்ணி இந்த விஷயத்தில் கேசை நடத்த விடாமல் நாளைக் கடத்தலாம், என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
தொடரும்
{kunena_discuss:780}