07. வாராயோ வெண்ணிலவே - சகி
"வெண்ணிலா!"
"................"
"ஏ...நிலா!"
"ஆ...அக்கா!"-உறக்கத்தில் இருந்து விழிப்பதைப் போல விழித்தாள் வெண்ணிலா.
"என்னடி ஆச்சு??பேய் அறைஞ்சா மாதிரி உட்கார்ந்திருக்க?"
"ஒ...ஒண்ணுமில்லைக்கா!"
"நீ என்னமோ கொஞ்ச நாளா சரியில்லை!"-ப்ரியா மெல்லியதாக சிரித்துவிட்டு,
"யாருடி அந்தப் பையன்?"
"யாரு?"-தெரியாதவளாய் கேட்டாள்.
"அதான் நானும் கேட்கிறேன்.யாரு?"
"நீ ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்க...அப்படி யாரும் இல்லை! நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்!"
"போடி போ!எத்தனை நாள் தப்பித்து ஓடுறன்னு பார்க்கிறேன்!"-வெண்ணிலா சிரித்துக் கொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டாள்.
மனமானது,ஆலயத்தின் உள்ளே பிரவேசித்த உடனே,
இலேசாவதை உணர முடிகிறது.
அப்படி என்ன தான் விசித்ரம் அதனிடத்தில் இருக்கிறதோ??அது...அறிவியல் பூர்வமோ?ஆன்மீக பூர்வமோ?அது வேண்டாம்!
ஆனால்,என்றுமே இல்லா ஓர் இரம்யமான அமைதி மனதினை நிச்சயம் வியாபிக்க தான் செய்கிறது.
"வாம்மா நிலா!"
"அர்ச்சனை பண்ணனும் சாமி!"
"அப்பா அம்மா பேருக்கா?"
"இல்லை...விஷ்வாங்கிற பேருக்கு!"
"யாரும்மா அது?"
"தம்பி!இந்த மாசம் ஐ.ஐ.டி.எக்ஸாம் எழுதுறான்,அதான்!"
"ஓ..! ராசி,நட்சத்திரம் சொல்லும்மா!"-கூறினாள்.
அவர்,பூஜிப்பதற்காக கற்பகிரகத்தினுள் பிரவேசித்தார்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர்,
"நல்லா படிக்க சொல்லும்மா!"-என்றப்படி,அர்ச்சனைத் தட்டை அவளிடம் தந்தார்.
"சரிங்க சாமி!"-என்று அவளிடம் விடைப்பெற்றாள்.
கோவிலின் வெளி பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்தாள்.மனம் லேசானது.
"ஹலோ மேடம்!"-என்று யாரோ அவளை அழைப்பது செவிகளில் விழுந்தது.
ஆனால்,யாரும் இல்லை.
திடீரென்று எங்கிருந்து வந்தானோ!!!ரஞ்சித் அவளருகில் வந்தமர்ந்தான்.
அவள் எதிர்ப்பார்க்காத இந்த தரிசனத்தினால், அவளுக்குள் சற்று அதிர்ச்சி தலைத்தூக்கியது.
"என்னங்க???எவ்வளவு நேரமா ஒரு மனுஷன் கூப்பிடுவான்??என்னை தவிர எல்லாரையும் பார்க்கிறீங்க?"
"நீங்க??"
"போச்சுடா?அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"
"இல்லை...நீங்க தான் கூப்பிட்டீங்களா?"
"இல்லைங்க...என் தாத்தா கூப்பிட்டாரு!"
"ஸாரிங்க கவனிக்கலை..!"
"பரவாயில்லை...ஆமா, உங்களுக்கு கோவிலுக்கு வர பழக்கம் இருக்குதா?"
"ஏன்?"
"இல்லை...என் பக்கத்து வீட்டு அக்கா!இந்தக் காலத்து பொண்ணுங்க கோவிலுக்கு போகவே மாட்றாங்க!அப்படின்னு ஃப்பீல் பண்ணாங்க!அதான்...
நீங்க,நீங்களாவே கோவிலுக்கு வந்தீங்களா?இல்லை...என்னை மாதிரி துரத்தி விட்டாங்களா?"
"துரத்தி விட்டாங்களா?"
"ம்...ஆமா,இன்னிக்கு ஏதோ சொன்னாங்களே!"
"மஹா சிவராத்திரி!"
"ஆ...அதுக்காக,கோவிலுக்கு போனா தான் வீட்டுக்குள்ள சேர்ப்பேன்னு துரத்தி விட்டுட்டாங்க!"
"யாருங்க??அம்மாவா?"
"எங்கம்மா ஏன் அதை பண்ணப் போறாங்க?
என் அருமை அண்ணாங்காரன் தான்!"-அவன் கூறுவதில் இருந்து அவனுக்கு,கடவுள் நம்பிக்கை இல்லை என்பது புரிந்தது.இருப்பினும்,அவன் பேச்சு சிரிப்பை வரவழைக்க சிரித்துவிட்டாள்.
அதைக் கண்டவன் என்ன நினைத்தானோ??
அப்படியே,அவள் சிரிப்பதை பார்த்தப்படி மௌனமாய் அமர்ந்திருந்தான்.
அவன்,தன்னையே பார்ப்பதை கவனித்தவள் மௌனமானாள்.
"சரிங்க...எனக்கு டைம் ஆயிடுச்சு! நான் கிளம்புறேன்!"-என்று எழுந்தாள் வெண்ணிலா.
"ம்...பார்த்துப் போங்க!"
"ம்..!"
"நிலா!"-அவன்,திடீரென உரிமையோடு அவளை நிலா என்று பெயர்விட்டு அழைத்தான்.
"உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லணும்!"
"என்ன?"
"இந்தப் புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு!"-சிறிது நேரம் மௌனம் சாதித்த பின்னர்,
"தேங்க்ஸ்!"என்றாள்.
வீட்டிற்கு சென்றதும்,முதல் வேலையாக நிலை கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
அந்த செர்ரி பழ நிற புடவையானது,அவள் நிறத்திற்கு ஏதுவாக பொருந்தி இருந்தது.
ஒரு நொடி அவன் கூறியதை நினைத்தாள்.அவளையே அறியாமல்,அவள் முகத்தில் நாணம் படர்ந்தது.
புது வித பரிணாமம்,ஒரு பெண் உண்மையாக அழகாக தெரிகிறாள்...
அவளது நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது...
அவள்,முகத்தில் அடிக்கடி நாணம் படர்கிறது எனில்,
அதற்கு காரணம்,நிச்சயம் ஓர் ஆணாக தான் இருப்பான்.
சம்பந்தமே இல்லாமல், திடீரென கண்ணாடியில் தன் அழகை இரசிப்பவளை, விசித்ரமாய் பார்த்தாள் ப்ரியா.
"நிலா!"
"என்னக்கா?"
"நீ நல்லா தானே இருக்க?உடம்பு சரியில்லையா என்ன?"
"இல்லையேக்கா?ஏன்?"
"அதிசயமா கண்ணாடி எல்லாம் பார்க்கிற?"
"ஏன் இதுக்கு முன்னாடி நான் கண்ணாடி பார்த்தத்தில்லையா?"
"இவ்வளவு நேரம் பார்த்தத்தில்லையேம்மா?"
".................."
"இது சரியில்லை..!!பார்த்துக்கோ!"-மீண்டும் அவளிடத்தில் நாணம்.
"ஏ..ரஞ்சித்!"
"என்னடா?தூங்குறவனைப் போய் டிஸ்டர்ப் பண்ணிட்டு?"
"நீ தூங்குற?"