காதல் நதியில் – 29 - மீரா ராம்
யாருக்குடா தெரியாது?... எல்லாம் தெரியும்… உனக்குத்தான் எதுவும் தெரியவில்லை… புரியவும் இல்லை… - ஆதி…
என்னடா அப்படி தெரியும் உனக்கு???... இவரால் எனக்கு ஏற்பட்ட இழப்புப் பற்றி உனக்குத் தெரியுமா???... – ஹரி…
உன்னை விட இழப்புகள் அவருக்கு அதிகம்டா ஹரி… அதை நீ உணரவே மாட்டாயா???? என்று வருத்தத்துடன் கேட்டவனைப் புரியாமல் ஏறிட்டான் ஹரி…
உன் இழப்பு ஈடு செய்ய முடியாதுதான் கொஞ்சமும்… எனினும் அதற்கு மருந்தாகவேனும், இதோ உன் தங்கை இருக்கிறாள் தானே உனக்கு என்று ரிகாவை கை காட்டினான் ஆதி…
ஆனால் பெற்ற பெண்ணையும் இழந்து, உயிரோடிருக்கும் மகனையும் இழந்து அவர் தவிக்கும் தவிப்புக்கும், அவர் துடிக்கும் துடிப்புக்கும் எதை வைத்து ஆறுதல் அடைய முடியும்???... சொல்லுடா… என்ற ஆதி, ஹரிக்கு உண்மையை புரிய வைக்க முயற்சித்தான்…
அவருக்கு உங்கள் இருவரின் மேலும் பாசம் அதிகம் தான்… ஆனால் பாவம் அவருக்கு அதைக் காட்ட நேரமில்லை…
சிறு வயதில் தான் கஷ்டப்பட்டு வளர்ந்தது போல் தன் பிள்ளைகள் வளரக்கூடாது என எண்ணி எண்ணி நிற்க கூட நேரமில்லாது அவர் ஓடி ஓடி சம்பாதித்து வைத்தது யாருக்காக???... உனக்காகத்தானே… அது ஏன் உனக்கு கொஞ்சமும் உரைக்காமல் போனது ஹரி???...
உன் தங்கை உன் தங்கை என்று உருகுகிறாயே, உனக்கு அவள் தங்கை என்றால் அவருக்கு அது பெண்ணில்லையா ஹரி?...உனக்கு வலிப்பது போல் தானே அவருக்கும் வலிக்கும்.. அதை ஏனடா நீ உணரவில்லை இன்னமும்???...
தாரிகா உன்னை விட்டுப் பிரிந்தது விதி செய்த கொடுமை என்றால் உன் தகப்பனை விட்டுப் பிரிந்து இப்படி நீ வாழ்வது அவருக்கு நீ இழைக்கும் கொடுமை… அந்த கொடுமையை இனியும் தொடராதே ஹரி… பாவம் அவர்… உன்னைப் பெற்ற தகப்பன்…
இத்தனை நாள் நீ கொடுத்த அத்தனை வலிகளையும் அவர் தாங்கிக்கொண்டிருக்கிறார்… மேலும் மேலும் அவரின் நெஞ்சில் எட்டி உதைக்காதே ஹரி பிரிவெனும் துயரை அவருக்கு பரிசாக கொடுத்து… என்று சொல்ல, ஹரி ஆதியின் வார்த்தைகளில் வாயடைத்துப் போனவனாய் தகப்பனைப் பார்த்தான்…
ஆதி சொன்னது அத்தனையும் மறுக்க முடியாத உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்டவனாக ஹரி நின்றிருந்தான் அமைதியாக…
அவருக்கு இனி வேண்டியது உன் அன்பும் அரவணைப்பும்தான்… உன் இளமைக் கால வயதில் அவர் உன்னை விட்டு விலகினார் என்பதற்காக அவரது முதுமை காலத்தில் நீ அவரை ஒதுக்காதே ஹரி…
தவறை உணர்ந்து அவர் உன்னுடன் இருக்க ஏங்குகிறார்… மன்னிப்பு என்ற ஒன்றை அவர் கேட்கும்போது நீ அதைத்தருவது தானே தர்மம்…
நீ பார்க்கும் உத்தியோகத்தின் மூலம் பல உயிர்களை நீ காப்பாற்றியிருக்கிறாய்… ஏன் இன்னமும் காப்பாற்ற போகிறாய்… அப்படிப்பட்ட மருத்துவனாக இருக்கும் நீ, உனக்கு உயிர் கொடுத்த தந்தையின் உயிரைக் குறைக்கும் செயலை செய்ய விரும்புகிறாயா?... இனியும்…. என்று ஆதி கேட்க…
ஹரியின் கண்களில் நீர் திரண்டுவிட்டிருந்தது…
நண்பனின் தோளில் மெதுவாக கைவைத்தவன் அவனைத் தேற்றும் விதமாக, தகப்பனிடம் பேச சொல்ல… ஹரி அமைதியாக இருந்தான்…
அவனை வற்புறுத்தாதே ஆதி… என் பையன் என்றைக்கு என்னை மன்னிக்கணும்னு நினைக்கிறானோ, அன்றைக்கு மன்னிக்கட்டும்… நான் அதுவரை காத்திருப்பேன்… என் கடைசி சொட்டு உயிர் என் உடலில் இருக்கும் வரை…. என்றவர் மெல்ல திரும்பி நடக்கையில்.. அவரின் தோளில் கை விழுந்தது…
விடு ஆதி என்று அவர் சொல்லிக்கொண்டே திரும்புகையில், பேச நா எழவில்லை அவருக்கு…
எனில் அவரின் தோளில் கை வைத்தது அவரது மகன் ஹரீஷ்…
ஹ….ரீ…………….ஷ்………………. என்று அவர் இழுக்க…
அப்பா………… என்றவன் அவரை அணைத்துக்கொண்டான்… என் வலியை பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தேன்… என்னை விட நீங்கள் அதிகம் துயர் கொண்டிருந்ததை ஆதியின் வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன்… மன்னிச்சிடுங்கப்பா… என்று மன்னிப்பு கேட்டு அவருடன் ஒட்டிக்கொண்டான் ஹரீஷ்….
எத்தனை நாள் ஏக்கம் இது அவனுக்கு… தந்தை இருந்தும் இல்லாத நிலை அல்லவா?... பெற்றவள் சிறு வயதிலேயே போய்விட, தாய்க்கு தாயாய் இருக்க வேண்டிய தகப்பனும் அருகில் இல்லாத கொடுமையை அவன் அனுபவித்தானே… இன்று அது எல்லாம், தகப்பனின் தோள் சாய்ந்த வேளை அந்த காயத்திற்கு எல்லாம் மருந்திட்டது போல உணர்ந்தான் ஹரீஷ்…
அப்பாடா…. எல்லா பிரச்சினையும் முடிந்தது… எல்லாரும் சந்தோஷமாயிட்டாங்க…. என்றான் அவ்னீஷ்…
ஆமாடா… இனி எப்பவும் சந்தோஷம் தான்…. என்றான் ஆதியும்…
ஹாஹா… ஆதி… அவன் என்ன அர்த்தத்தில் சொல்ல வருகிறான்னு உனக்குப் புரியலையாடா இன்னும்?... – ஹரி…
என்னடா சொல்லுற ஹரி… புரியலையே… - ஆதி…
எல்லாருடைய பிரச்சினையும் முடிந்தது… சீக்கிரம் ஷன்வியைப் பார்க்க வழி விடுங்கன்னு அவன் சொல்லாம சொல்லுறாண்டா மச்சான்… - ஹரி…
அய்யய்யோ… அண்ணா… அதெல்லாம் ஒன்றுமில்லை… என்ற அவ்னீஷிற்கு எங்கிருந்துதான் வெட்கமும் வந்ததோ… ஓடியே விட்டான்…
ஹரியும், ஆதியும் விழுந்து விழுந்து சிரித்தபடி இருக்க…
இப்படி சிரிச்சிட்டே இருங்க… நான் போய் சமையல் பண்ணுறேன்… என்றபடி அங்கிருந்து அகன்றாள் ரிகா…
ஹரியும், அவனின் அப்பாவும் பேசட்டும் என்று நினைத்த ஆதி, சிறிது நேரத்திற்குப்பின் அங்கிருந்து சென்றான்…
மேலே அறைக்கு செல்லும் வழியில், அவ்னீஷ், முகமெங்கும் புன்னகையுடன் போனில் பேசிக்கொண்டிருக்க… ஆதிக்கு அது ஷன்வி தான் என்று தெரிந்து போயிற்று…
மெல்ல அங்கிருந்து கிளம்பியவன், கீழே செடிகொடிகளை சற்று நேரம் வேடிக்கைப் பார்த்தான்… பின் அங்கிருந்த மல்லிக்கைப் பூ செடியில், கை வைத்தவன், மென்மையாக அதை வருட, அது அசைந்து தன் வரவேற்பை காட்டியது அவனுக்கு…
பின், என்ன நினைத்தானோ, அதிலிருந்து சிலப் பூக்களைப் பறித்தவன், முகர்ந்து பார்க்க எண்ணி முகத்தருகே கொண்டு சென்றவன் சட்டென்று முகராமல், விட்டு விட்டு, வீட்டினுள் வந்தான்…
கண்களை அங்கும் இங்கும் சுழற்றியவன் பார்வையில் யாரும் அகப்படவில்லை… மெல்ல அறைக்கு சென்றவன், சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தான்…
நேரே சமையலறைக்குள் சென்று சீதை என்றழைத்தான்…
அவனின் குரல் கேட்டு திரும்பியவள், என்னங்க… எதும் வேணுமா?... அங்கிருந்தே கூப்பிட்டிருக்கலாமே… வந்திருப்பேனே… என்றாள்...
அவன் பதில் பேசாமல் அவளையேப் பார்க்க… அவனது பார்வையில் முகம் சிவந்தவள், மெல்ல திரும்பிக்கொண்டாள்… சமையல் பண்ணிட்டேன்… வாங்க சாப்பிடலாம்… என்றபடி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவனை கடக்கும்போது, அவன் அவளைத்தடுத்து, இதை வாங்கிக்கோடா, இதை கொடுக்க தான் வந்தேன் என்றான்… மெதுவாக…
அவள் அதனையும், அவனையும் மாறி மாறிப் பார்க்க… என்னடா… நல்லா இல்லையா?... ஹ்ம்ம்… என் கையால தொடுக்கணும்னு ஆசையா இருந்துச்சு… அதான்… நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன்… எனக்கு இதுக்கும் மேல தொடுக்கத்தெரியலை என்றான் அவன் வருத்தத்துடன்…
அவன் கொடுப்பது பூவல்ல… அவன் மனம் தான் அது… என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு, அவனை எப்போதும் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உள் மனது சொன்னது… அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன், பூவை நீட்டிய கையை மடக்கும் முன்,
மனம் நிறைய பூரிப்புடன் ரொம்ப அழகா, இருக்கு… என் தர்ஷ் மாதிரியே… என்றவள்… வைங்க… என்றாள் அவனைப் பார்த்த வண்ணம்…
அவள் வார்த்தைகளில் நிறைவு கொண்டவன், அவள் கையில் பாத்திரம் இருப்பதைப் பார்த்துவிட்டு எப்படி கொடுக்க என்று யோசித்தவன், சரி பிரிட்ஜினுள் வைத்துவிடலாம் என்றெண்ணி நகர முற்பட, அவள் சட்டென்று அவனுக்கு முன் சென்று திரும்பியவள், அவனைத்திரும்பி பார்த்து வைங்க என்றாள் நிலம் நோக்கி குனிந்தவாறு…
அவளின் பதிலில் கிளர்ந்தவன், அவளை நெருங்கினான்… படபடப்புடன் திரும்பியவாறு நின்றிருந்தவள், அவன் அருகே வந்துவிட்டதை உணர்ந்தாள்…
மெல்ல அவளது கூந்தலில் மல்லிகையை சூடியவன் அதை அள்ளி முகர்ந்தான்… பூவின் வாசனை, அவள் கூந்தலின் மணம் என அனைத்தும் ஒரு சேர்ந்து அவனை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல, இதற்கு மேல் இங்கிருப்பது நல்லதல்ல… என்றெண்ணியவன் பூவை கையிலிருந்து விடுவித்துவிட்டு, மெல்ல இடைவெளி விட்டு விலகி அவள் முன் நின்றான்…
இருவரின் பார்வைகளும் ஒருங்கே சந்தித்துக்கொள்ள, அங்கே வார்த்தைகள் தேவையற்றுப்போனது… பார்வையில் காதலை சொல்லிக்கொண்டிருந்தவர்களை ஹரியின் குரல் கலைக்க… இருவரும் புன்சிரிப்புடன் அங்கிருந்து வெளியே வந்தனர்…