18. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா
அத்தைக்கு கை அசைத்து விட்டு அவன் உள்ளே செல்ல, சிலையாகத்தான் நின்றிருந்தாள் அங்கே நின்றிருந்த இந்துஜா.
சில நிமிடங்களுக்கு முன்னால் தான் அலுவலகத்திலிருந்து வந்திருந்தாள் அவள்.
கடந்த பத்து நாட்களாக நடந்தவை எல்லாவற்றிக்கும் மௌன சாட்சி அவள். நடந்த எதற்குமே அண்ணன் எதுவுமே பேசாததே அவளுக்கு வியப்புதான்.
'விடு அத்தை தன்னோட அம்மாவை கூட்டிட்டு போக அவன் யாரை கேட்கணும். நீ சந்தோஷமா போயிட்டு வா அத்தை.' அவன் வார்த்தைகள் அவளை சிலையாக்கி விட்டிருந்தன விஷ்வாவை பார்த்தாலே கொதித்து போகும் அண்ணனிடமா இந்த மாற்றம்.?
மறுநாள் எப்போதும் போல் விடிந்திருந்து. அத்தை இல்லாமல் வீடு களையிழந்து வெறிச்சோடி போய் விட்டதை போல் ஒரு உணர்வு பரத்திற்கு.
கடந்த பத்து நாட்களாக வீட்டில் வழக்கமான பூஜை கூட சரியாக நடக்கவில்லை.. அத்தையின் நினைவுகளுடனே கல்லூரிக்கு சென்று திரும்பியிருந்தான் அவன்.
தாத்தா, இந்து இருவரும் கண்ணில் தென்படவில்லை. இந்து இன்னமும் அலுவலகத்திலிருந்து வந்திருக்கவில்லை. யோசித்தபடியே அவன் மொட்டை மாடி ஏற அங்கே சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தார் தாத்தா.
தாத்தாவையும் மகளின் நினைவுகள் சூழுந்துதான் இருந்தது. தனக்கென இருந்த பலரையும் இழந்தாகி விட்டது. எங்கே மகளையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் கடந்த சில நாட்களாக ஆடித்தான் போயிருந்தார் அவர்.
நேற்று வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் அவர் கையை பிடித்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார் அவர் மகள். தனது மகளின் பேச்சில் தெரிந்த சந்தோஷம் தந்தைக்கு புரியாமல் இல்லை. மகனுடன் இணைந்து விட்ட சந்தோஷம் மைதிலிக்கு.
தனது தாயை அழைத்துக்கொண்டு செல்ல விஷ்வா காட்டிய வேகம் கூட தாத்தாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியையே கொடுத்திருந்து.
இதே போல் விஷ்வா கண்ணன் இடையே இருக்கும் விரிசலும் சேர்ந்து விடாதா? யோசித்தபடியே அமர்ந்திருந்தவரின் அருகில் வந்து அமர்ந்தான் பேரன் 'தாத்தா...' என்றபடி.
வந்தவனின் தோளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார் தாத்தா. 'ரொம்ப சந்தோஷம்டா கண்ணா. உன்னை நினைச்சா கொஞ்சம் பெருமையாகூட இருக்கு'
ஏன் தாத்தா?
'இந்த பத்து நாளிலே நீ கொஞ்சம் கோபப்பட்டிருந்தால் கூட எல்லார் நிம்மதியும் போயிருக்கும்டா. எல்லாத்தையும் ரொம்ப அழகா ஹான்டில் பண்ணே,'
சின்ன புன்னகை கலந்த பெருமூச்சுடன் தலை குனிந்துகொண்டான் பரத்.
ஏண்டா டல்லா இருக்கே? என்றார் தாத்தா.
'அத்தை இல்லாமே வீடே ஒரு மாதிரி வெறிச்சோடி இருக்கு தாத்தா என்றான் பரத்.
'ம்' என்றார் பெரியவர். எனக்கும் கூட அப்படிதான் இருக்கு.
சில நொடி யோசனைக்கு பிறகு ஏண்டா கண்ணா. நமக்கே இப்படி இருக்கே. அதுவும் ஒரே நாளிலே. விஷ்வாவுக்கு இத்தனை நாள் எப்படி இருந்திருக்கும்.?' மெல்ல துவக்கினார் தாத்தா.
திடுக்கென நிமிர்ந்தான் பரத்.
'அதுவும் அவன் அப்பா. போனப்போ தனியா எப்படியெல்லாம் அழுதானோ. யார் அவன் கூட இருந்தாங்களோ?. அந்த நேரத்திலே நாம எல்லாருமே யோசிக்கிற சக்தியை இழந்துட்டோமாடா? என்னையும் சேர்த்து, நாம யாருமே அதையெல்லாம் அப்போ யோசிச்சே பார்க்கலையேடா?. எப்படி எல்லாம் கஷ்டப்பட்டானோ பாவம்டா அவன்'.
'எல்லா முடிவையும் உணர்ச்சி வசப்பட்டு சட்டு சட்டுன்னு எடுக்கற குணம் அவனுக்கு. அந்த விஷயத்திலே உங்க அத்தை மாதிரியே தாண்டா அவனும். மத்தபடி அவன் நல்லவன் டா. நாமெல்லாம் அந்த நிலைமையிலே இருந்திருந்தா எப்படி நடந்திட்டு இருப்போம்னு தெரியலைடா. எப்படி பார்த்தாலும் பாவம் தாண்டா அவன்'. மெல்ல சொன்னார் தாத்தா.
பரத்தினடத்தில் சிந்தனை கலந்த மௌனம். விஷ்வா என்ற பெயரை கேட்டாலே பரத்திடம் பொங்கி எழும் கோபம் இப்போது தென்படாதது தாத்தவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
உனக்கு ஞாபகம் இருக்காடா கண்ணா? அவனுக்கு ஒரு பன்னெண்டு, பதிமூணு வயசு ஆகுற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஒத்துமையா சந்தோஷமா இருந்தீங்கன்னு ஞாபகம் இருக்கா? அப்போ எல்லாம் தாத்தாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்டா. திடீர்னு எங்கேடா போச்சு அதெல்லாம்?
யோசனையுடனே நிமிர்ந்த பரத்திடம் அந்த கேள்விக்கும் பதிலில்லை.
இந்த பூமியிலே எல்லாரும் வாழறது மிஞ்சி மிஞ்சி போனா எண்பது, எண்பத்தஞ்சு வருஷம்டா. அதுக்கப்புறம் நாம நினைச்சாலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடிய போறதில்லை. அதுக்குள்ளே ஏண்டா உன்னை பார்த்த எனக்கு பிடிக்கலை என்னை பார்த்தா உனக்கு பிடிக்கலைன்னு சண்டை?
தாத்தாவை விட்டு விழி அகற்றவில்லை பரத். அவர் இப்படியெல்லாம் பேசி அவன் பார்த்ததே இல்லை.
யாருக்கு எப்போ என்னனே தெரிய மாட்டேங்குது. என்னாலே முடியலைடா. உங்க அத்தையும் என்னை விட்டு போயிடுவாளோன்னு ரொம்ப பயந்துட்டேன்டா. நிறையவே பார்த்துட்டேன். போதும்டா. தாத்தாவுக்கு இன்னும் எத்தனை நாள் மிச்சமிருக்குன்னு தெரியலைடா.' என்றார் அவர்.
'அதெல்லாம் இன்னும் நிறைய நாள் இருக்கு' அவருடைய கையை தனது கைகளுக்குள் பொத்திக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தவரின் தோளில் தலை சாய்த்துக்கொண்டான் பரத். 'எங்க பசங்க கல்யாணமெல்லாம் பார்க்க போறீங்க தாத்தா நீங்க.'
மலர்ந்து சிரித்தார் தாத்தா. 'அவ்வளவு எல்லாம் ஆசை இல்லைடா கண்ணா. நான் போறதுக்குள்ளே நீயும் விஷ்வாவும் பழைய மாதிரி ஒத்துமையா மாறிட்டா அதுவே போதும்டா' என்றார் தாத்தா.
பதில் சொல்லவில்லை பரத். அவர் தோளிலேயே சாய்ந்து இருந்தவன், தனது கைகளுக்குள் இருந்த அவர் கையை அழுத்திக்கொடுத்தபடியே மௌனமாக அமர்ந்திருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தவன். 'ஈவினிங் காபி குடிச்சீங்களா? வாங்க நான் காபி போட்டு தரேன்' என்று எழுந்து நடந்தான்.
அவன் படியிறங்கி செல்ல, அவன் எப்போதுமே சரியாக முடிவெடுப்பான் என்ற நம்பிக்கையுடனே அவனை பின் தொடர்ந்தார் தாத்தா.
விஷ்வாவின் வீட்டில் இருந்தாள் இந்துஜா. அத்தை டிவியின் முன்னால் அமர்ந்திருக்க, சமையலறையில், இரவு உணவுக்காக சப்பாத்தி மாவை பிசைந்துக்கொண்டிருந்தாள் அஸ்வினி.
அவள் கொடுத்த காபியை சுவைத்தபடியே அவளருகே நின்றிருந்தனர், இந்துவும், விஷ்வாவும்.
அம்மாவின் அருகாமையினால் விஷ்வாவின் முகத்தில் நிறையவே சந்தோஷமும் நிறைவும் நிரம்பியிருந்தது.
அதை ரசித்தபடியே காபியை பருகிக்கொண்டிருந்த இந்துவினுள்ளே வேறு சில யோசனைகளும் ஓடிக்கொண்டிருந்தன.
சார் ரொம்ப ஹாப்பியா இருக்கார் போலிருக்கே அஸ்வினி? என்றாள் இந்து.
'ஆமாமாம். அம்மா இங்கே வந்திட்ட சந்தோஷம். சார் நேத்து ராத்திரி பூரா தூங்கலை. அம்மாவையும் தூங்க விடலை. இருவரும் பேசினார்கள் பேசினார்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.' சிரித்தவள் 'இது எல்லாத்துக்கும் உங்க அண்ணனுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும் இல்லையா இந்து ? கேட்டே விட்டிருந்தாள் அஸ்வினி.
காபி கோப்பையை சிங்கில் போட்டு விட்டு நகர எத்தனித்த விஷ்வா, சட்டென கேட்டான் அவனுக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்?
'இதுக்கு பதில் உனக்கே தெரியுமே விஷ்வா.' இதமாக ஒலித்தது இந்துவின் குரல்..
சட்டென திரும்பினான் விஷ்வா. 'எங்க அம்மாவை நான் கூட்டிட்டு வரும்போது அவன் எதுவும் பேசலை அவ்வளவுதானே.? அதுக்குள்ளே எல்லாரும் அவன் கூட சேர்ந்து அவனை பெரிய தியாகி ரேஞ்சுக்கு பேசுறீங்களேடி' என்றான் அவன்.