ஆனால் ஒரு நொடியில் அவன் முக பாவம் இயல்பு நிலைக்கு மாறி, அவன் டிரேட் மார்க் புன்னகையை சூடிக் கொண்டது.
“ஹையோ! என்னமா இருக்கான்டி.....சீஃப் கெஸ்ட் ஒரு போலீஸ் ஆஃபீஸர்னதும் ஒரு முக்கால் கிழம் வரும்னு நினச்சேன்...க்ளீன் போல்டுபா நான்...”
யாரோ சொல்ல
“ஏய்! அவன் நம்ம சதுக்கபூதத்தோட மருமகானாம்.....ஸ்டேஜ்க்கு பக்கத்துல வேற இருக்க....நீ பேசுறது மட்டும் அவர் காதுல விழுந்துதோ....?”
அடக்கினாள் மற்றவள்.
கல்லூரி சேர்மனைத்தான் அப்படி குறிப்பதுவது வழக்கம்.
கத்தியாய் காயத்தை குத்தி திருகியது அவ்வார்த்தை ரேயாவை...
அவனுக்கு மேரேஜ் ஆகிட்டா....?....
மூச்சு முட்டிக்கொண்டு வருகிறது. இனி தாங்காது. எழுந்துவிட்டாள்.
ஐந்தாவது.. அவார்டாவது...இவன் கையால் வாங்கவா? மூச்சு நின்றாலும் நின்று விடும். நோ வே....கிளம்ப வேண்டியது தான்.
கிளம்ப எத்தனித்தவளை நகரவிடாதவாறு ஒரு பெண் காவலர் வந்து நின்றார்.
“எஸ்பி சார் உங்களை கஸ்டடில எடுக்க சொல்லிருக்காங்க...”
“வா...ட்?!!!!!!!” பழி வாங்கிறியா ஆதிக்....இவ்ளவு கேவலமானவனா நீ?!!!
அவனை பார்வையால் வெறித்தாள்.
அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். புன்னைகையின்றி பாலைவனமாக அவன் முகம். கண்களில் வெறி.....???
1990 ஆம் ஆண்டு, திருச்சி
மலர்விழியால் தன் கண்ணை அந்த புகைப்படத்திலிருந்து எடுக்கவே முடியவில்லை. இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹாஸ்டலில் தங்கி இருந்து டீச்சர் ட்ரெய்னிங் படிக்கும் மலர்விழிக்கு திருமணம் பேசி முடிக்க இருப்பதாக அப்பா கடிதம் எழுதி இருந்தார்.
அவள் அறிந்த குடும்பங்களில் பள்ளி படிப்பு முடிந்ததும் பெண்களுக்கு திருமணம் செய்துவிடுவது வழக்கம்.
ஆனால் இவள் ஆசைக்காக மேலும் ஒரு வருடம் படிக்க அனுமதித்திருந்தார் தந்தை, படிப்பு முடியும் போது திருமணம் என்ற நிபந்தனையுடன். ஆக இது இவள் எதிர்பார்த்த விஷயம் தான்.
ஆனால் வருகிறவன் இப்படி ஒரு வசியக்காரனாய் இருப்பான், அவன் புகைப் படத்தைப் பார்த்ததும் தலைகுப்புற இவள் விழுந்துவிடுவாள் என்பதுதான் அவள் எதிர்பார்க்காத விஷயம்.
கல்யாணத்துக்கு முன்பு புகைப்படம் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் அவர்கள் குடும்பங்களில் கிடையாது.
இருந்தும் படித்த மகள், வெகு அழகானவளும் கூட, அவளுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவேண்டுமே என புகைப்படம் கேட்டுப் பார்த்திருக்கிறார் அப்பா.
அப்படி ஒரு பழக்கம் எங்கள் குடும்பங்களில் கிடையாது என்று சொல்லிவிட்டார்களாம் மாப்பிள்ளை வீட்டில்.
ஆனால் இங்கு யாருக்கும் தெரியாமல் அந்த மாப்பிள்ளை வசீகரன் இவளுக்கு புகைப்படம் அனுப்பி வைத்திருக்கிறான்.
சம்மதம் தருவாய் தண்நிலவே
நிலவு தொடங்கி நீளும் உலகு முழுதும்
உலவும் இந்த மனம் முழுவதும் உன் நினைவே
மெல்ல வந்தாய் என் உலகில்
மௌனம் தந்தாய் என் மொழியில்
தென்றல் செய்தாய் என் நினைவில்
சாரல் பெய்தாய் என் வழியில்
என்றெல்லாம்
செப்பிடுவேன் தினம் நூறு பொய்மை
அது உனக்காகும் இனிமை என்றால்
கால் கொண்ட புயலாய்
உடல் கொண்ட நெருப்பாய்
உயிர் பறிக்க வந்தாய்
காதல் நோய் தந்தாய்
கடும் விஷமென கொன்றாய்
என்றிடுவேன் இன்று மட்டும்
அதுதானே உண்மை.
சாகா வரம் கேட்கவில்லை
சந்தோஷம் அதுவும் கேட்கவில்லை
கனி மொழி
காதல் விழி
எதுவும் தேவையில்லை.
நொடி தோறும் உன் விழியில்
நூறு முறை சாக வேண்டும்
காதல் எனைக் கொல்லும்
கடும் வேதனை தினம் வேண்டும்
கோபம் சொன்னாலும்
அதை சொல்வது
நீ என் மீது என்றாக வேண்டும்
வருவாய் வழித்துணையாய் மலர்விழியே
சம்மதம் தருவாய் தண்நிலவே
என்ற ஒரு நீண்ட கவிதை வேறு.
இந்த புகைப் படத்தைப் பார்க்கும் வரை மலர்விழியின் திட்டம் வேறாக இருந்தது.
அவளுக்கு படிப்பின் மீது ஆசை. மேலும் அவள் ஹாஸ்டல் தோழி பபிதாவின் கசின் ஒருத்தி ரஷ்யாவில் மருத்துவம் படித்து கொண்டிருந்தாள்.
அங்குள்ள பனி பொழிவு, பழக்க வழக்கம், பண புழக்கம், பாரம்பர்யம், உடை முறை என்ற பல விஷயங்களை குறித்து பபிதாவிற்கு அவள் கசின் அவ்வப்போது கடிதம் அனுப்புவது வழக்கம்.
அதை இவளுக்குமாக வாசித்துக் காண்பிப்பாள் பபிதா.
மன கண்ணில் அந்நாடுகளைப் பார்த்து பார்த்து இவளுக்குள் ஒரு ஆசை.
வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்று ஒரு கனவு.
அதற்கான வழி முறைகள் எல்லாவற்றையும் தொடர் முயற்சியின் மூலம் அறிந்து வைத்திருந்தாள்.
இவளது ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அக்கனவை நிறைவேற்ற இவளை தகுதிப்படுத்தி இருந்தது. அதோடு வீட்டில் பொருளாதார வகையில் எந்த தடையும் இல்லை.
பாசமான குடும்பம் இவளுடையது. பெற்றோரும் சரி இவள் தங்கையும் சரி இவள் மனம் நோக தாங்க மாட்டர்.
ஆக எப்படியாவது வீட்டை சம்மதிக்க வைத்து வெளி நாடு சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் இப்பொழுது இந்த வசீகரன் இவளை நொடியில் வசப்படுத்திவிட்டான்.
இனி இவன் தான் இவள் காண விரும்பும் உலகம்.
அடுத்தமுறை ஹாஸ்டலுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட தந்தையிடம் சொல்லிவிட்டாள் மலர்விழி “எந்த காரணத்தை கொண்டும் இந்த இடத்தை வேண்டாம்னு சொல்லிடாதீங்கப்பா....”
அவள் அப்படித்தான். கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் மதித்து நடந்தாலும், மனதிற்கு நியாயம் என படுவதை வெளிப்படையாக பேசிவிடுவாள்.
தன் விருப்பத்தை தன் அப்பாவிடம் தெரிவிக்க ஏன் தயங்க வேண்டும்?
வருகிறேனடா வசீகரா!!!
{kunena_discuss:876}