யாரும் நின்று அவனுக்கு உதவ முன்வரவே இல்லை. இவள் தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடினாள் கையில் தண்ணீர் பாட்டிலுடன்….நவ்யாவும் இவளுக்கு பின்னாக ஓடி வந்தாள்.
அரைகுறை வெளிச்சத்தில் அவன் முகம் தெளிவாக புரிபட அலறினாள் நல்லிசை…”சதீஷ்ஷ்ஷ்ஷ்…..”
அவ்வளவுதான் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற நவ்யா “நீ வா இசை…எல்லாம் ட்ராமா…” என்றபடி இவளை இழுத்துக் கொண்டு திரும்பி நடந்தாள்.
ஆனால் சதீஷ் துடிப்பது நல்லிசையின் கண்ணில் பட்டது. நவ்யாவின் கையை உதறிக் கொண்டு அவனிடமாக ஓடினாள் நல்லிசை.
“நவிமா….” அவன் மூச்சுக்கு திணறியபடி கூப்பிடும் சத்தத்தை நவ்யா கண்டு கொள்ளாமல் காரை நோக்கிப் போனாள்.
“சதீஷ் பயப்படாதீங்க…நான் உடனே ஆம்புலன்ஸ் கூப்டுறேன்…நீங்க இந்த தண்ணி குடிங்க…”
மறுப்பாக தலை அசைத்தவன் மூச்சு திணற திணற சொல்லி முடித்தான்…”.எ…….ன் மொ..பை…ல்ல….6….கூ…ப்…டு….நீ…உ…ட….னே….கி…ள…ம்…பு…..” அவன் சொன்னதை அவசரமாக செய்தாள்.
தன் காதருகில் மொபைலை வைக்க சொன்னான். அவனுக்கு தெரிந்தவர் யாராவது இருந்தாக வேண்டுமே…
முதல் ரிங்கில் யாரோ இணைப்பை ஏற்றனர்” எ……ல்…..6…. ப்….ரி…ட்..ஜ்” சதீஷ் சொல்ல இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இவள் அவசரமாக அவனுக்கு தண்ணீர் குடிக்க உதவினாள். தலையை சற்று உயரமாக தூக்கிப் பிடித்து அவன் வாயில் நீர் ஊற்ற சற்று பருகியவன் முகத்தில் புன்னகை. இவள் தலையில் ஆதூரமாய் கை வைத்தவன் “கல்……யாண….மாமே…நல்…லா இரு….க்கனு….ம்டா நீ” என்றான்…
அவன் முகத்தில் கண்டது பாசம். நடிப்பென்று நிச்சயமாக நம்ப முடியவில்லை நல்லிசையால்.
இயல்பாய் இருப்பதுபோல் காமிக்க முயன்றாலும் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் வந்தது நல்லிசைக்கு…
“க…ல்யாண..த்துக்கு….அண்…ணன்…வரு….வேன்…மா…..ப…ய…ப…டா…த…” ஏனோ இந்த அண்ணனில் எரிச்சல் வரவில்லை. காரணம் அவன் நிலை.
“நீ…கிள….ம்….பு…”
அதற்குள் ஒரு வேன் போன்ற வாகனம் வந்து நிற்க
“போன்னு சொல்றேன்ல…” சதீஷ் தன் சக்தி அனைத்தும் திரட்டி உறுமினான்.
இவள் காரை நோக்கி ஓடினாள் செய்வது சரியா தவறா என புரியாமலே..
இருவர் ஓடி வந்து சதீஷை வேனில் அள்ளிக் கொண்டு சென்றனர்.
காரில் ஏறிய பின்னும் தன் படபடப்பு அடங்கவில்லை நல்லிசைக்கு. “அவர் ஒன்னும் ஆக்ட் செய்யலை…நிஜமாவே ரத்தம்….”
மிக இயல்பாக இருப்பது போல் அமர்ந்திருந்தாள் நவ்யா.
நல்லிசை காரை ஸ்டார்ட் செய்தாள். “அப்ப கூட உன்னை தான் கூப்டார் தெரியுமா..”
மௌனமாகவே இருந்தாள் நவ்யா.
சில நிமிடங்கள் கடந்திருக்கும் தன் வயிற்றை அடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள் அவள். அரண்டு போனாள் நல்லிசை நவ்யாவின் கதறலில்.
தொடரும்
{kunena_discuss:878}