07. காதல் உறவே - தேவி
காலை நேராக வீட்டிற்குச் சென்று பிரேக் பாஸ்ட் முடித்துவிட்டு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்த மண்டபத்திற்குச் சென்றனர். அங்கே மண்டப அலங்காரங்கள், உணவு மேற்பார்வை, வருபவர்களுக்கு பரிசு என அனைத்தையும் சரி பார்த்து விட்டு அவரவர்கள் ரெடியாக ஆரம்பித்தார்கள். மைதிலிக்கு அழகு நிலையத்திலிருந்து வந்தவர்கள் அலங்காரம் பண்ண ஆரம்பிக்க, மற்ற இளம் பெண்கள் அவர்கள் உடைக்கேற்ப தலை அலங்காரங்களை சரி செய்தனர்.
சரியாக ஆறு மணிக்கு ஸ்கை ப்ளு கலர் டிசைனர் புடவையில் பொருத்தமான சஃபையர் செட்டில் ஆகாய தேவதையாக வெளியே வந்த மைதிலியைப் பார்த்த ராம் இமை கொட்டாமல் பார்த்தான். சந்தோஷின் கேலியில் நிமிர்ந்த மைதிலி, நேவி ப்ளு கோட் சூட்டில் ஆண்மையின் இலக்கணமாக நின்றிருந்த ராமைப் பார்த்தவள் கண்கள் முகமும் ஜொலிக்க பெருமிதத்துடன் நின்றாள். ராம் அவள் கைபிடித்து மேடைக்கு அழைத்து வர அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
மாலை 6 மணிக்கு வர ஆரம்பித்த கூட்டம் இரவு 10 மணி வரை நீண்டது. இருவரும் கைகுலுக்கி, வரவேற்று களைத்தனர். ஒரு நிமிடம் கூட அலங்கார நாற்காலியில் அமர முடியவில்லை. இதற்கிடையில் ராமின் மியூசிக் க்ரூப் மெல்லிசைக் கச்சேரி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ராமைப் பாடச் சொல்ல ராம் “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை” பாட கைதட்டல் பறந்தது.
மைதிலியின் ஆபீஸ் கொலீக்ஸ் மற்றும் ஹாஸ்டல் பிரண்டஸ் எல்லாம் சேர்ந்து ஒரு 15 பேர் வந்திருந்தனர். மைதிலி நிறுவனத்தின் சேர்மன் வந்திருந்தார். ராமின் வீட்டில் அனைவரும் பிஸியாக இருந்தனர். தொழில்துறையைச் சேர்ந்தவர்களை ராமின் அப்பாவும், ராம் நண்பர்களை சந்தோஷ{ம் சைதன்யா, சபரி இருவரும் ஒரே கல்லூரி ஆனதால் அவர்கள் பிரண்டஸை எனவும் விருந்தோம்பினர்.
ராம் வீட்டில் அப்பா, அத்தையும் அம்மா வீட்டில் அவர்கள் மட்டுமே என்றாலும் கூட ராமின் தாத்தா பாட்டி கூட பிறந்தவர்கள், அவர்கள் வாரிசுகள் என உறவினரும் நிறையவே இருந்தனர். எல்லோரிடமும் ராமின் வீட்டில் நல்லுறவே இருந்ததால் அனைவரும் மைதிலியின் அந்தஸ்து, தீடீர் திருமணம் போன்றவற்றை கிண்டாமல் இருந்தாலும், அவள் உறவினர்கள் பற்றிய அதிருப்தி அவர்களிடையே இருப்பதாகப் பட்டது மைதிலிக்கு. இருந்தாலும் அவள் தன் இன்முகம் காட்டி அனைவரிடமும் அறிமுகப் படுத்திக் கொண்டாள். ராம், மைதிலி அருகே நிற்பதற்கு யாருமில்லை. அவர்கள் வீட்டு காரியஸ்தரே இருந்து பரிசுகளை வாங்கி வைத்துக் கொண்டார்.
போதாதற்கு 10 மணிக்கு பிறகு போட்டோ செஷன் வேறு. எல்லாம் முடித்து சாப்பிட்டுக் கிளம்பினர். ராமின் தாத்தா பாட்டி, அம்மா அப்பா, தங்கை, அத்தை, மாமா, அவர்களின் பிள்ளைகள் என அனைவரையும் நிற்க வைத்து குடும்பமாக போட்டோ எடுத்துக் கொண்டனர். முன்னதாக பாட்டி தாத்தாவுடன் அத்தை மாமா சென்று முதலிரவிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ராமின் அப்பா கணக்கு முடித்து வருவாதாகக் கூற, இளையவர்கள் அனைவரையும் அத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
வீட்டிற்குச் சென்ற ராம், மைதிலியை கீழ் அறையில் ரிபிரெஷ் செய்து உடை மாற்றி வரச் சொன்னார் அத்தை. பிறகு மைதிலிக்கு மெலிதாக அலங்காரம் செய்தனர். ராம், மைதிலி பெரியவர்களிடம் ஆசி வாங்கிய பிறகு தங்கள் அறைக்குச் சென்றனர்.
அறையின் உள்ளே சென்ற இருவரும், முதலில் சற்றுத் தயங்கி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ராம் மெதுவாக மைதிலியின் அருகில் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு கட்டிலைச் சென்றடைந்தான். பிறகு அங்கே மன்மத காவியம் அரங்கேறியது.
அதிகாலை விழிப்பு ஏற்பட்ட போது ராமின் கையணைப்பில் இருந்தாள் மைதிலி. இரவின் இனிமையில் முகம் சிவக்க மெதுவாக, எழுந்து குளியலறைக்குச் சென்றாள். குளித்து உடைமாற்றி அவள் அறையில் தலை துவட்டும் போது பின்னாலிருந்து அணைத்த ராம் “குட்மார்னிங் மிது டார்லிங்” என்றான்.
“நேற்றே கேட்க நினைத்தேன் அது என்ன மிது?”
“மைதிலியின் செல்ல சுருக்கமே மிது. நீ நேற்று ஏன் கேட்கவில்லை?” என்று கூறி குறும்பாகக் கண்ணடித்தான். முகம் சிவக்க அவன் மார்பில் சாய்;ந்தாள். பிறகு சற்று நேரம் அவளிடம் விளையாடியவன் குளிக்கப் போனான்.
இருவரும் கீழே இறங்கி வர மைதிலியை விளக்கேற்றச் சொல்ல, செய்தாள். பிறகு காலை உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது அடுத்த இரண்டு நாளில் செல்லவிருக்கும் டூருக்குத் தேவையானதைப் பற்றிப் பேசினார்.
ராம் மைதிலியிடம், “நான் காலையில் அலுவலகம் போய்விட்டு மதியம் சாப்பிட வருகிறேன் மைதிலி. பிறகு மாலையில் ஷாப்பிங் போய் வரலாம்” என்றான். மைதிலி சரி என எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அலுவலகம் கிளம்பினான்.
மைதிலி மாமியாரிடம் “வேலை ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க, அவரும் “சமையல்காரரிடம் மதியம் மெனு சொல்லிவிட்டேன். நீயும் போய் உன் சாமான்களை அடுக்கி வைத்து விட்டு கையோடு டூருக்கும் பேக் செய்” என்று கூறினார்.
அன்று காலை உணவின் போதே ராமின் அத்தை குடும்பம் கிளம்பி விட்டபடியால், தாத்தா பாட்டியிடம் சென்றாள். அவர்களும் டூருக்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பதைப் பார்த்து அவர்களுக்கு உதவி விட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.
அன்று மதியம் ராம் வந்தபின் சாப்பாடு முடித்து விட்டு, சற்று நேரம் தங்கள் அறைக்குச் சென்று ரெஸ்ட் எடுத்தனர். மாலை 5 மணி அளவில் ஷாப்பிங் சென்றனர் இருவரும். ராம் அவளுக்குத் தேவையான ஜெர்கின், ஸ்வெட்டர் போன்றவை வாங்கினான். பிறகு சின்னச் சின்னதாக நகைகள் வாங்கினான்.
“மிது பொதுவாக விழாக்களுக்கு குடும்ப நகைகள் அணிவது தான் வழக்கம். நீயும் அம்மாவும் அந்தந்த உடைக்கேற்றவாறு முன்பே செலக்ட் செய்து அணிந்து கொள்ளுங்கள்” என்றான்.
சரி எனவும், அவன் தனியாக இருக்கும் போது மட்டுமே அந்த பெயர் சொல்லி அழைப்பதைக் கண்டு வினவ, அது தனக்கு மட்டுமே உரிய பெயர் என்றான். இதற்கிடையில் மற்றவர்களுக்கு விசா இன்டர்வயூ ஏற்கனவே முடிந்திருக்க, மைதிலிக்கு மட்டும் அடுத்த நாள் இருந்தது. அதற்கு அவளை ராம் அழைத்துச் சென்றான்.
ஒருவழியாக எல்லோரும் சுற்றுலாவுக்குக் கிளம்பினர். ஆஸ்திரேலியா மெல்பெர்னில் தன் நண்பன் ஒருவனின் கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு செய்திருந்த ராம் எல்லோரையும் அங்கு அழைத்துச் சென்றான். கெஸ்ட் அவுஸ் அழகான தோட்டத்துடன் இருந்தது. கீழே மூன்று, மேலே மூன்று என ஆறு அறைகள் இருந்தன. இளையவர்கள் ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு ஒன்றும், ராம் மைதிலிக்கு ஒன்று என மேலே உள்ள அறையை எடுத்துக் கொள்ள, கீழே உள்ள மூன்று அறைகளை பெரியவர்களுக்கு கொடுத்தனர்.
வந்த களைப்பு தீர அன்று ஓய்வெடுத்து, மறுநாளில் இருந்து ஊர் சுற்ற ஆரம்பித்தனர். பகலில் நன்றாக சுற்றிவிட்டு மாலை அரட்டை, சீட்டு கேரம் என விளையாடி மகிழ்நதார்கள். மைதிலிக்கு இது புதிதாக இருந்தது. இத்தனை கும்பலுடன் அவள் இருந்தது கிடையாது என்பதால் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இரவானால் கணவனின் அணைப்பு அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது.
இந்த டூரில் மைதிலி உணர்ந்தது ராம் எந்த நிலையிலும் தன்னுடைய குடும்பத்தை விடவில்லை. புதிதாக திருமணம் செய்தவர்கள் என்ற முறையில் அவ்வப்போது மற்றவர்கள் அவர்களைத் தனியாக விட்டாலும் ராம் சற்று நேரத்திலேயே அவர்களோடு சேர்ந்து கொண்டான். இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு மைதிலியே அந்த தனிமைகளை தவிர்த்து விட்டாள். ஆனால் இரவில் அவளோடு பேசிச் சிரித்து மகிழ்ந்தான்.