மணியை எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் அவனுக்காக காத்திருந்தாள்.
“அம்மா அந்த லூசு இன்னும் வரல மா” அம்மா காவேரியிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
“எவ்வளவு நேரம் தான் இதையே என்ட சொல்லிட்டு இருப்படி, நீயெல்லாம் எப்படி பொழைக்கப் போறயோ, உன்ன நம்பி என் பையனும் பொண்ணும் வேற, முதல்ல அவனுக்கு போனப் போட்டு நான் இருக்கவா போகவானு கேளு”
காவேரி பேசிக்கொண்டிருக்கையில், மணியின் கார் தூரத்தில் வந்துக் கொண்டிருந்தது.
“அம்மா அவன் கார் வந்துட்டு இருக்கு.”
“ஈ ன்னு பல்ல காட்டிட்டு ஏறிறாதடி. லேட்டா வந்தான்ல கொஞ்ச நேரம் கெஞ்சட்டும்.”
“சரிம்மா. அவன் பக்கத்துல வந்துட்டான் நான் கட் பண்றேன்.”
மணி அஞ்சலியின் அருகின் காரினை நிறுத்தினான். காரில் அமர்ந்துக் கொண்டே மறுபக்கம் அவளுக்கு கார் கதவினைத் திறந்துவிட்டான்.
“ஸாரி அஞ்சலி கொஞ்சம் லேட் ஆச்சு”
காவேரி சொல்லிக் கொடுத்ததைப் போல், அவன் பேச்சை துளியும் கேட்காமல் முகத்தினை திருப்பிக் கொண்டாள்.
“என்னடி கோவமா?”
கைகளைக் கட்டிக்கொண்டு “ம்ஹூம்” என்றாள் சிடுசிடுவென.
“நீ ஏறாம நான் இங்க இருந்து நகரவே மாட்டேன். உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு வந்தேன். ஓகே. நீ ஏறவும் வேண்டாம் நான் சொல்லவும் வேண்டாம்.” என சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தான்.
“அது என்ன முக்கியமான விஷயமா இருக்கும், வீட்டுல கல்யாணத்துக்கு ஓகே வாங்கிருப்பானோ, சரி என்னனு கேட்போம்” என மனதிற்குள்ளே பேசிக்கொண்டு வெளியே போலிச் சிரிப்புடன் காரில் ஏறி கதவினைத் தாளிட்டாள்.
“இதான் என் அஞ்சலி” என காரினை ஓட்ட ஆரம்பித்தான்.
சிறிது தூரம் சென்றதும் பேசத்துவங்கினான். அவன் கூறிய செய்தி அஞ்சலியை கதி கலங்க வைத்தது.
You might also like - Barath and Rathi... A free English romantic series
ஊட்டியில்,
தலையில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தாள் மீரா. ஸ்ரீமதி ஊட்டியை விட்டு கிளம்பிவிட்டாள் என்பதற்காக அல்ல, கருப்பு வெள்ளை படங்களில் வரும் ஹீரோக்களைப் போன்று அஷ்வின் செயல்கள் இருப்பதைக் கண்டு. அவர்கள் அப்பொழுதுதான் ஸ்ரீமதியின் வீட்டு (ஊட்டி வீடு) வாட்ச்மேனிடம் பேசிவிட்டு வந்தார்கள்.
“அவங்களாம் அப்போவே போய்டாங்க மா. அவங்க வீட்டு அட்ரஸ்லாம் தெரியாது ஆன அவங்க நம்ம மதுரைக்காரவுக” என்று அவர்கள் தங்கியிருந்த வீட்டு வாட்ச்மேன் கூறியிருந்தான். மேலும் “குரு ஐய்யா அந்த ஊர்ல பெரிய ஆளுங்க அங்க போய் விசாரிச்சா தெரியும் சார்” என்று அஷ்வினிற்கு நம்பிக்கைத்தரும் தகவலையும் தந்திருந்தான்.
“அண்ணா” வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஜன்னலின் வழியில் ஏதோ ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அஷ்வினை மீரா அழைத்தாள்.
ஆனால் அஷ்வினோ வேறு ஒரு உலகத்தில் ஸ்ரீயுடன் வாழ்ந்துகொண்டிருந்தான்,
“இது எங்க உருப்படப் போகுது, டேய் அண்ணா” என்று கத்தினாள்.
இதற்கும் பதிலளிக்காததைக் கண்டு கோபத்தில் அவனை நோக்கி வந்தாள், அஷ்வினின் செல்போன் அலறியது.
“அண்ணா போனையாது எடுங்க”
தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்து கீழே வைத்துவிட்டான்.
தலையில் அடித்தபடியே மீரா அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். பிரகாஷ்.
பிரகாஷ், ஸ்ரீமதியின் பெரியம்மா மகன். அஷ்வினின் உயிர்த்தோழன். மீராவை ஒருதலையாகக் காதலிக்கும் காதலன். மீராவின் வாழ்வில் திருமணம் என்ற சொல்லுக்கு இரண்டாவது முறையாக இடம் உள்ளதா என்பதைப்பற்றி இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக அஷ்வினிடம் கூறியிருந்தாள். அதைப்பற்றிக் கேட்கவே பிரகாஷ் அழைத்தான்.
“ஹலோ”
மீராவின் குரலைச் சற்றும் எதிர்ப்பார்க்காத பிரகாஷ் தடுமாறினான்.
“ஹ.. ஹலோ”
“சொல்லுங்க பிரகாஷ்”
“அ அஷ்வின் இல்ல?”
“அண்ணா கொஞ்சம் பிஸியா இருக்கார்”
“என்ன மீரா வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு. எதாவது பிரச்சனையா?”
“இல்ல பிரகாஷ் அதெல்லம் ஒன்னும் இல்ல”
“உன் வாய்ஸ் எனக்குத் தெரியும் மீரா. அங்க எதோப் பிரச்சனை”
மீரா மறுப்பதற்க்குள் பிரகாஷ் ஆராயலானான்.
“அஷ்வின் போன் எடுக்கல, உன் வாய்ஸ்ல சேஞ். பிரச்சனை உனக்கு இல்ல ஏன்னா அஷ்வினுக்கு வந்த போன நீ எடுக்குற அளவுக்கு ஸ்டெடியா இருக்க. பிரச்சனை அஷ்வினுக்கு. அப்பாட்ட பேசும்போது அவர் எதும் சொல்லல்ல அப்போ பிசினஸ் பிரச்சனையும் இல்ல, உடல் பிரச்சனையும் இல்ல. அப்போ காதல் தான். எல்லாம் ஓகே ஆகிருந்ததுனா நீ சோகமா இருந்துருக்க மாட்ட. ஜாலியா ‘அண்ணி கெடச்சுட்டாங்கன்னு’ கத்திருப்ப போன எடுத்ததும்.”
ஒரு சிறு இடைவெளி எடுத்து மேலும் தொடர்ந்தான், “அந்த பொண்ணுட்ட ப்ரப்போஸ் பண்ணி அவ நோ சொல்லிருக்க மாட்ட, ஏன்னா அஷ்வின் அவ மனசுலயும் லவ் வந்ததுக்கு அப்பறம் தான் ப்ரப்போஸ் பண்ணிருப்பான். அந்த அளவுக்கு அவன் போகவே இல்ல. என் கணிப்பு சரின்னா அஷ்வின் ஒரு பொண்ணப் பார்த்து லவ்ல விழுந்துருப்பான், அடுத்த ஸ்டப் எடுத்து வைக்கிறதுக்குள்ள பொண்ணு மிஸ்ஸிங் கரக்டா?”
மீரா அதிர்ந்தவளாய் பேச்சின்றி நின்றாள்
“மீரா”
“மீரா, கரெக்ட்டா?”
“எப்புடி டா, பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்லுற” அதே அதிர்ச்சியில் மீரா கேட்டாள்.
“அதல்லாம் கேட்காத. இப்போ நீ ரிலாக்ஸ் ஆகிட்டியா?”
“லைட்டா”
சற்று யோசித்தவன், “சரி கண்ண மூடு”
“எதுக்கு?”
“கண்ண மூடு மீரா சொல்றேன்”
“ம்ம் சொல்லுங்க”
“இப்போ என்ன நினச்சுக்கோ”
“என்னது”
“நினச்சுக்கோ மீரா, சொல்லுறதக் கேளு”
“ம்ம்ம் சொல்லுங்க”
மீரா கண்களை மூடினாள். மீராவின் கண்களுக்குள் பிரக்காஷின் முகம் வந்தது. சிறிது தாடியுடனும் அடர்த்தியான மீசையுடனும் எப்பொழுதும் மீராவிடம் வம்பு செய்தும் தனக்காக வெகுளியாக எதையும் செய்யும் பிரகாஷின் குழந்தை முகம் மீராவின் கண்ணுக்குள் வந்தது.
மென்மையாகப் புன்னகைத்தாள்.
மீராவின் செல்போனில் வாட்ஸ்ஆப் மெஸ்ஸேஜ் வந்தது.
“நான் அனுப்பிய மெஸ்ஸேஜ் தான் மீரா, கண்ணத் திறந்ததும் அதப் பாரு”
வாட்ஸ் ஆப் இல் ஒரு போட்டோ அனுப்பியிருந்தான் பிரகாஷ்.