மனதோர மழைச்சாரல்... - 13 - வத்ஸலா
'உங்க தங்கச்சி உங்களை வரச்சொல்லி கார் அனுப்பி இருக்கா' மனைவியின் குரல் உறக்கத்திலிருந்து அவனை திடுக்கென விழித்து எழ செய்தது. கடிகார நேரம் காலை ஏழு என்பதை உணர்த்தியது.
'நேற்று மாலை தானே அவளை சந்தித்து விட்டு வந்தேன்?. இப்போது என்ன அவசரம்??? ஏன் மறுபடியும் அழைக்கிறாள் என்னை???' புரியவில்லை. அவனுக்கு.. எப்போதும் அவனது தங்கைதான் அவனுக்கு உயிர்.
அவசரமாக தொலைபேசியை எடுத்து தங்கையின் வீட்டு எண்ணை அழைக்க, அழைப்பை ஏற்றது அவளது உதவியாளர்........
'மேடம்...... உங்க அண்ணன் லைன்லே இருக்காங்க' உதவியாளர் தொலைப்பேசியை கையில் வைத்துக்கொண்டே தங்கையிடம் பேசுவது கேட்கிறது அவனுக்கு
'நான் நேரிலே தானே வரச்சொன்னேன். உடனே கிளம்பி வரச்சொல்லு அதுக்குள்ளே போன் என்ன வேண்டிகிடக்கு?' பதிலும் தெளிவாக கேட்கிறது. அழைப்பை துண்டித்து விட்டு மனைவி கொடுத்த காபியை வாயில் அப்படியே கவிழ்த்துக்கொண்டு அவசரம் அவசரமாக கிளம்பினான் அவன்.
அடுத்த தெருவில் தான் இருந்தது தங்கையின் வீடு. தங்கையின் வீட்டை அடைந்து அவன் உள்ளே நுழைந்த போது அந்த வீட்டு பெரிய கூடத்தின் சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவனுடைய தங்கை. அவள் கையில் அந்த பத்திரிக்கை.
முதலில் எதுவுமே புரியவில்லை அண்ணனுக்கு. ஆனால் அவள் அமர்ந்திருந்த தோரணையும், கண்களில் படர்ந்து கிடந்த கோபமும் ஏதோ ஒன்று சரியில்லை என்று உணர்த்தியது. மெதுவாக நடந்து அவள் எதிரில் சென்று அமர்ந்தான் அண்ணன். பத்திரிக்கையிலேயே புதைந்து கிடந்த விழிகளை சட்டென நிமிர்த்தி அண்ணனை ஒரு கனல் பார்வை பார்த்தாள் தங்கை.
'இதை சொன்னது நீ தானா?'
'எதும்மா'? அண்ணனின் முன்னால் வந்து விழுந்தது அந்த பத்திரிக்கை.
You might also like - Barath and Rathi... A free English romantic series
'இதோ இதுதான். இந்த பேட்டி தான். அவளை பத்தி எத்தனை.... எத்தனை பெரிய பெரிய ஆளுங்க பெருமையா பேசி இருக்காங்க பார். அவங்களை எல்லாம் கூட மன்னிச்சிடலாம் நீ. அவளை பத்தி இவ்வளவு பெருமையா சொல்லி இருக்கியே. அதுவும் உன் சொந்த பத்திரிக்கையிலே அதைத்தான்...
அவள் சொல்லி முடிப்பதற்குள் 'ஓ... இதுவா? இதிலே என்னமா இருக்கு? நான் உண்மையை தானே சொன்னேன்' இடை புகுந்து சொன்னான் அண்ணன்.
'அப்போ இதுதான் உண்மை அப்படின்னு சொல்றே? அவ அவ்வளவு பெரிய நடிகைன்னு சொல்றே அப்படிதானே?'
'நிச்சியமா. அவ ஒரு நல்ல நடிகை. அதிலே எந்த மாற்று கருத்தும் இல்லையேமா.' மனதில் பட்டதை அப்படியே சொன்னான் அவன். தங்கையின் மனதில் ஓடிக்கொண்டிருப்பது தெரியவில்லை அவனுக்கு. இது போன்ற கேள்விகளை அவள் இதுவரை அவனிடம் கேட்டதும் இல்லை.
'அப்படினா நான்? நான் எப்படி பட்ட நடிகைன்னு நினைக்கிறே?'
திடுக்கென்றது அவனுக்கு. தங்கையின் பேச்சு சென்றுக்கொண்டிருக்கும் திசை இப்போதுதான் புரிந்தது. அந்த பேட்டி இன்னொரு நடிகையை பற்றியது. அதில் இவளை பற்றியோ, இவளது நடிப்பை பற்றியோ எந்த விவாதமும், ஏன் இவள் பெயர் கூட எடுக்கபடவில்லைதான். பின்னர் எதற்கு இந்த குறுக்கு விசாரணை. புரியவில்லை அவனுக்கு.
பதில் இன்னமும் வரமால் போக கண்களில் கோப வரிகளுடன் சில நொடிகள் அண்ணனையே பார்த்திருந்தாள் தங்கை. பதில் சொல்லு 'நான் நல்ல நடிகையா? இல்லையா? என்னை பத்தி நீ என்ன நினைக்கறே?
'உனக்கென்ன மா. நீ அருமையா நடிக்கறியே. அதில் என்னமா உனக்கு சந்தேகம்? 'உன்னை பத்தி யார் கேட்டலும் நான் இன்னமும் பெருமையா தான் சொல்வேன்.'
'அப்போ என்னை பத்தின பேட்டியெல்லாம் கூட உன் பத்திரிக்கையிலே போடுவேன் சொல்றே இல்லையா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.'
'என்னடா இப்படி கேட்கிறே. நீ என் தங்கச்சிடா இது உன் பத்திரிக்கை.' என்றான் அவன்.
அதே பத்திரிக்கையில் அவளை பற்றிய செய்திகளும், அவளை, அவள் நடிப்பை உயர்வாக சொல்லும் பேட்டிகளும் நிறையவே, முன்பே இடம் பெற்றிறிருக்கிறது என்பதே உண்மை. அதே போல் வேறு சில நடிகர் நடிகைகள் பற்றியும் இடம் பெற்றிருந்ததும் உண்மை. இத்தனை நாட்கள் இப்படியெல்லாம் ஆனதில்லையே???? சொல்லபோனால் பல நேரங்களில் சக நடிகர் நடிகைகளின் நடிப்பை அவளே பாராட்டி இருக்கிறாளே???
சில நொடிகள் அந்த பத்திரிக்கையையும், அண்ணனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் தங்கை. அவள் மனதிற்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று யூகிக்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அண்ணன். பின்னர் சட்டென எழுந்தவள். உதடுகளில் ஓடிய ஒரு அலட்சிய புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள். விறுவிறுவென மாடிப்படி ஏறி தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
பதறிப்போனான் அண்ணன். பலமுறை கதவை தட்டி, அவள் பெயரை சொல்லி அழைத்து, கதவை திறக்க சொல்லி கெஞ்சிய பிறகு உள்ளிருந்து வந்தது பதில். 'நான் இனிமே உன்னோட பேச விரும்பலை. நீ இங்கிருந்து போயிடு.'
இந்த போராட்டம் கிட்டதட்ட மூன்று மாதங்கள் தொடர்ந்தது. தங்கை அண்ணனுடன் மூன்று மாதங்கள் பேசவில்லை.
இது நடந்தது கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னால்!!!!! அந்த தங்கை நம் இயக்குனர் இந்திரஜித்தின் மனைவி மேகலா!!! இவை எல்லாம் இந்திரஜித் மேகலா திருமணதிற்கு முன்னால் நடந்தவை!!!!! அந்த அண்ணன் 'அரவிந்தாட்சன்'!!!!! நமது அஹல்யாவின் தந்தை 'அரவிந்தாட்சன்'!!!!!
அந்த பத்திரிக்கை அரவிந்தாட்சன் அப்போது நடத்தி வந்த சொந்த பத்திரிக்கை. அந்த பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த பேட்டி நடிகை சந்திரிக்காவை பற்றியது. பல நாட்கள் ஒரு கவர்ச்சி நடிகையாகவே இருந்த சந்திரிக்காவுக்கு வந்தது அந்த வாய்ப்பு. ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு. அது கதாநாயகிக்கும், கதைக்கும் முக்கியத்துவும் தந்த ஒரு திரைப்படம். அந்த வாய்ப்பை அவளுக்கு கொடுத்தவர் இயக்குனர் இந்திரஜித்.!!!!
அந்த திரைப்படம் சந்திரிக்காவுக்கு ஒரு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கி கொடுத்திருந்தது. திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் அந்த திரைப்படத்தில் சந்திரிக்காவின் நடிப்பை பற்றி, நாட்டிய திறமையை பற்றி பாராட்டி பேசிய பேட்டி அரவிந்தாட்சன் நடத்திய அந்த பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தது.
அரவிந்தாட்சனை பொறுத்தவரை அந்த நிமிடம் வரை சந்திரிகாவை மேகலாவின் தோழியாகவே பார்த்திருந்த படியால் அவருமே சந்திரிக்காவின் நடிப்பை பாராட்டி பேசி இருந்தார். தங்கையின் எண்ணங்கள் இப்படி மாறிபோகும் என்று நினைத்திருக்கவில்லை அரவிந்தாட்சன்.
பாராட்டும், கைதட்டல்களும் எல்லா கலைஞர்களுக்கும் மிக பெரிய உற்சாக மருந்து. அந்த உற்சாக மருந்தே நமக்கு ஒரு போதையை கொடுக்க துவங்கினால்??? புகழ் போதை நம் தலைக்கேறி நாம் அதில் மூழ்கிப்போக துவங்கினால்??? அதற்கு நாம் அடிமையாகி அதன் பின்னாலேயே அலைய துவங்கினால்???
இப்படிதான் நிகழ்ந்துக்கொண்டிருந்தது மேகலாவின் வாழ்விலும். எல்லா பாராட்டும் கைதட்டல்களும் தனக்கே, தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற ஒரு பேராசை வளர ஆரம்பித்திருந்தது மேகலாவின் மனதில். மேகலா புகழின் உச்சியில் இருந்த நேரம் அது. தனக்கு எப்போதும் வரும் ரசிகர் கடிதங்களில் ஒன்றிரண்டு குறைந்து போனால் கூட பைத்தியம் பிடித்தது போல் இருக்கும் மேகலாவுக்கு.