"அப்பா.. அவசரத்தை பாரு.. அடுத்தவங்க வீட்டு விஷயம் என்றால் இந்த பெண்களுக்கு உடனே தெரிஞ்சுக்கனுமே?" என அஜய் அவள் தலையில் கொட்ட, இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.
"கோட்டைச்சாமியை தேடி தஞ்சாவூர் அருகே இருந்த கிராமத்தை தேடி போனேன்.. ஆனால் ட்ரிப் வேஸ்ட்"
"ஏன் கோட்டைச்சாமி வேறு யாருக்காவது நிலத்தை விற்று விட்டானாமா?" இப்ப என்ன செய்வது? அந்த ஆள் அட்ரஸ் இருக்கா?.."
"இதோ.. கோட்டைச்சாமியை நெருங்கி விட்டோம்.. அவர் யாருக்கும் நிலத்தை விற்க வில்லை.. நிலம் குத்தகையில் தான் இருக்கு.. ஆனால் அவர்தான் அந்த நிலச் சொந்தக்காரர்களை பார்க்க சென்னைக்கு நேற்று தான் வந்தாராம்.. இப்போ மந்தைவெளியில் அவர் மகள் வீட்டில் தங்கியிருப்பவரை பார்க்கத்தான் நாம் போகிறோம்.. ஆல்மோஸ்ட் அவர் வீடு வந்துவிட்டது.. இங்கேதான்" என்றபடி காரோட்டியிடம் சொல்லியிருந்த அந்த விலாசத்திற்குரிய வீட்டின் முன் கார் சென்று நின்றது.
You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...
கார் டிரைவரிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அந்த சின்ன தனி வீட்டை அடைந்தவர்கள், அழைப்பு மணியை அழுத்த, அங்கே ஒரு நடுத்தர வயது பெண்ணொருத்தி கதவை திறந்தாள்.
கோட்டைச்சாமியை பார்க்க வந்திருப்பதாக சொன்னவுடன், அவர் அவள் தந்தை என்று சொல்லிவிட்டு அவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், எழுபது வயதான ஒரு முதியவருடன் வந்தாள்..
"அப்பா, இவங்க உங்களை தேடி வந்திருப்பவங்க" என சொல்ல, அந்த முதியவரோ, எதுவும் பேசாமல் வைத்த கண் எடுக்காமல் அஜய்யை பார்த்துக் கொண்டிருந்தார்.
"அப்பா" என அவர் மகள் மீண்டும் அழைக்க, சட்டென்று சுதாரித்த அந்த முதியவர், "வாங்க தம்பி.. வா தாயி.. உள்ளே வந்து உட்காருங்க" என்றவர், தன் மகளிடம், "வேணி நீ போய் குடிக்க ஏதாவது எடுத்து வா" என தன் மகளை அனுப்பிவிட்டு,
"சங்கர நாராயணன்.... " என இழுக்க,
அஜய், "கோட்டைச்சாமி அங்கிள்.. நான் அஜய்.. சங்கர நாரயணனின் ஒரே மகன்." என்றான்.
"தம்பி.. நீ சொலவே வேண்டாம்.. நீ சங்கர் சாமியின் பையன் என்று உன்னை பார்த்தாலே தெரிகிறது.. எங்க சின்ன எஜமானை பார்க்கிர மாதிரி இருக்குப்பா.. எவ்வளவு காலம் ஆச்சு.. உங்க அப்பா எங்கப்பா??.. அவரும் வந்திருக்கிராறா".. என கேட்டவர், வீட்டுக்கு வெளியே பார்க்க,
"அங்கிள்.. அப்பா இப்பொழுது உயிரோடு இல்லை.. எனக்கு பதினெட்டு வயதாகும் பொழுதே அவர் கார் விபத்தில் சிக்கி இறந்து போய் விட்டார்.. அம்மாவும் இல்லை"
"ஓ.. அய்யோ.. ஒன்றுமே தெரியாதேப்பா.. பாவம் உன் தாத்தாவும், பாட்டியும் தன் மகனுக்காக ஒரு பத்து வருடங்கள் மாயவரத்திலே காத்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களுமே தள்ளாமையால், தங்கள் வீட்டை விற்று சென்னையில் குடியேறி விட்டார்கள்.. நிலத்தை மட்டும் இன்னும் என்னிடம் தான் குத்தகைக்கு கொடுத்திருக்கிறார்கள்.. ஒரு பத்து வருடம் இருக்கும், அவர்களுமே இறந்து போய் விட்டார்கள்.. கடைசி வரை தன் மகன் வருவான் என்று காத்திருந்த அந்த இரண்டு ஜீவன்களும், கடைசியில் ஒரே நாளில் உயிரை விட்டனர்.. கொடுமைப்பா"..
"ஏன் தம்பி கேட்கிறேன் என்று தப்பாக நினைக்காதே.. அமெரிக்க பொம்பளையை கல்யாணம் கட்டிக்கிட்டது சரி தான்.. ஏன் நீ பிறந்த பிறகாவது வந்து பெத்தவங்களோட சேர்ந்திருக்கலாமே?.. என்ன பாவம் செஞ்சாங்க அவங்க.. என்னத்தான் மவள் கடைசி வரை கூட இருந்தாலும், கொள்ளி வைக்கக்கூட வரவில்லையே.. ஏதோ மருமகன் நல்லவன், கடைசி வரை அவங்களை தாங்கினாரு.. கொள்ளியும் வைச்சாரு.. அப்பக்கூட அந்த பெரியவங்க, பக்கத்துல ஒரு வீட்டிலதான் தனியாவே வாழ்ந்தாங்க.. பொண்ணு கொடுத்தவங்க வீட்டிலே தங்கியிருப்பது கௌரவக் குறைச்சல்ன்னு..
என்னவோ தம்பி.. இத்தனை நாளை ஏன்ப்பா நீங்க இந்த பக்கமே வரலை.. நீ சொல்லறதை பார்த்தால், சங்கர் தம்பி, அவரை பெத்தவங்களுக்கு முன்னாலேயே போய் சேர்ந்திருக்கனும்.. நல்ல காலம் அவங்களுக்கு அது தெரியலை.. ஏங்கேயோ சீமை பட்டணத்துல தன் மகன் நல்லா இருக்கான்னு நினைச்சிக்கிட்டே உசுர விட்டாங்க" என்றவர்,
"அது சரி இத்தனை நாளுக்கு அப்புறம் நீங்க அவங்களை தேடி வந்திருக்கீங்க?.. இந்தம்மா உங்க சம்சாரமா?"
"இல்லை அங்கிள் இவள் பைரவி.. என்னுடன் அமெரிக்காவில் கூட வேலை பார்பவள்.. என் தோழி".. என்றவன், "என் தாத்தா, பாட்டி இறந்தது எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கு.. அந்த உத்தமர்களை சந்திக்க முடியலையேன்னு ஏக்கமா கூட இருக்கு.. ஆனா ஏன்னு தெரியலை, அப்பா தன்னை பெற்றவங்களை பற்றி என்னிடம் சரியா சொன்னதில்லை.. ஒரு வேளை சொல்ல நினைச்சிருந்தாலும், அதற்குள் அம்மாவுக்கும் கான்சர் நோய் வந்தது.. அதோட, கார் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.. இறக்கும் போது அவர்களை பற்றி கொஞ்சம் சொன்னவர், என்னை இந்தியாவுக்கு போய் அவர்களை பார்க்கச் சொன்னார்.. அதன் பிறகு நான் தனியாகவே வளர்ந்தேன்.. போன வருடம் ஏதோ தேடும் பொழுது அப்பாவின், டைரி ஒன்று கிடைத்தது.. அதில் இருந்து தான் நான் என் பாட்டி, தாத்தா, மற்றும் அப்பாவுக்கு கூட பிறந்த ஒரு தங்கை இருப்பதாக தெரிந்தது.. நான் ஒரு டாக்டர் அங்கிள்.. என் வேலை நெருக்கடியில் உடனடியாக தேடி வர முடியவில்லை.. இப்பொழுதான் வர முடிந்தது.. நேற்று உங்க ஊருக்குத்தான் போயிருந்தேன் .. என் அத்தை எங்கே இருக்கிறார்கள் என்றாவது இப்பொழுது சொல்ல முடியுமா?" என கேட்டான் அஜய்.