"சாரதா காலையிலேயே டிபன் அயிட்டம் ரொம்ப குறைவா இருந்தது.. சாயங்காலம் ஜான்வாச டிபனை நன்னா செய்ய சொல்லு.. அத்தோட ரிசப்ஷன் அயிட்டம் ஒன்னுவொன்னும் தூள் பறக்கனும், சொல்லிட்டேன்.. அதுல குறை இருந்தா நான் பொல்லாதவளா ஆயிடுவேன்.. விஜய்யோட ஹாஸ்பிடலில் இருந்து எல்லா சீஃப் டாக்டர்களும் வருவா.. கௌரவமா இருக்கனும்.. சரி நான் போய் எங்க பக்கத்து மனுஷா யாராவது வந்திருக்காளான்னு பார்க்க போறேன்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் அமிர்தா.
"உ..ப்" என்று ஒரு பெருமூச்சை விட்ட சாரதா, பைரவியை பார்த்து புன்னகைத்து விட்டு, சமையல்காருக்கு வேண்டியதை எடுத்துக் கொடுக்க சென்றாள்.
"ஏய், வசந்த் இப்படித்தான் உங்க ஊர் கல்யாணம் எல்லாம் இருக்குமா?.. மாப்பிள்ளை ஆத்துக்காரா இப்படி பந்தா பண்றா?.. அமெரிக்காவிலேயும் நம்ம டைப் வெட்டிங் நிறைய பாத்துருக்கேன்.. ஆனா இப்படில்லாம் யாரும் ஹார்ஷா பேச மாட்டா?.. இதானா மாப்பிள்ளை முறுக்கு என்பது?" என் பைரவி கேடக,
"முறுக்கா, எங்கே.. எனக்கு கிடையாதா?" என கேட்டபடி அங்கே அஜய் ஆஜரானான்.
வசந்தும், பைரவியும் சத்தமாக சிரிக்க, அதற்குள் மஹதியும் அங்கே வந்து என்ன விஷயம் என கேடக, அஜய்க்கு மாப்பிள்ளை முறுக்கு வேணுமாம் என வசந்த் சொல்ல,
"அஜய் அதுக்கு நீங்க முதல்ல மாப்பிள்ளையாகனும்.. அப்புறம் தான் அந்த முறுக்கெல்லாம் கிடைக்கும்" என மஹதி கலகலக்க,
"நான் ரெடி தான்.. உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா நான் ஏன் வேண்டாங்க போறேன்.. அப்ப எனக்கு முறுக்கு எதுக்கு.. இந்த லட்டு பொண்ணே போதும்னு இருப்பேன்" என வழிய
ஒரு கணம் வெட்கத்தில் முகம் சிவக்க படபடத்த நெஞ்சத்தை சமனப்படுத்திக் கொள்ள மஹதி கலகலவென சிரிக்க,
பைரவியோ, "ஏய் அஜய், முறுக்கும் இல்லை.. லட்டும் இல்லை.. டாக்டர் விஜய் வந்தாருன்னா இப்ப நல்லா பட்டுன்னு உதைதான் உனக்கு கிடைக்கும்" என எச்சரிக்க,
"எனக்கு என்ன பயமாம்.. பொண்ணுன்னு இருந்தால் எல்லாரும் தான் டேட் கேட்பாங்க?" என வார அந்த இடத்தில் அந்த நால்வர் கூட்டணி சிரித்தபடி இருந்தது.
அந்த பக்கமாக வந்த அமிர்தா தன் தோழிகளுடன் வர, மஹதி அஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ, "கல்யாணப் பெண் என்ன இப்படி வெட்கமில்லாமல் யாரோடயோ சிரிச்சிண்டு இருக்கு.. கொஞ்சம் கூட வெட்கமே இல்லை.. இந்த காலத்தில பொண்களை அடக்க ஒடுக்கமா பார்கறதே கஷ்டமாயிருக்கு.. கல்யாணத்துலேயாவது கொஞ்சம் தலையை குனிஞ்சுண்டு வெட்கப்படுமா" என விஷமம் பிடித்த ஒருத்தி சொல்ல, அமிர்தா அவர்களை முறைத்தபடி அவர்களை மதிய சாப்பாட்டுக்கு அழைத்துச் சென்றார்.
மாலை மூன்று மணிக்கு நிச்சயதார்த்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தாள் மஹதி.. கத்திரிப்பூ கலரில் மெஜந்தா பார்டருடன், அழகு நிலய பெண்களின் கை வண்ணத்தில் பட்டு புடவையை நேர்த்தியாக உடுத்தி, மிதமான ஒப்பனையில், பொன் நகைகள் அவளை அலங்கரிக்க, வானத்து தேவதை போல காட்சியளித்தாள்.
பைரவி ஏற்கனவே ரெடியாகி, சாரதா மாமிக்கு உதவியாக அந்த நிகழ்வுக்கு வேண்டியவற்றை மேடையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.. நிச்சயதார்த்த சீர் வரிசை தட்டுக்களை அழகாக, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
மண்டபத்தருகே அந்த சமயத்தில் எதோ ஆரவாரம் கேட்க, சாரதா மாமியிடமும், ராமமூர்த்தி மாமாவுடன் அமிர்தா மாமி சத்தமாக பேசுவதை கேட்டு, சட்டென தன் கை வேலையை விட்டு அங்கே விரைந்தாள் பைரவி.
ஏற்கனவே அங்கே வசந்த், அஜய் மற்றும் மூத்த மாப்பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர்.
டாக்டர் விஜய் என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு தன் தாயையும், தந்தையையும் ஒருவித இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
"உங்க மனசுல என்னதான் நினைச்சிண்டு இருக்கேள்??.. எங்களை பார்த்தால் என்ன இளிச்சவாயா தெரியரதா?.. டாக்டர் மாப்பிளைக்கு வெறுமே ஆசைப்பட்டா போறாது? அதுக்கேற்றா மாதிரி சீரும் செய்யனும்.. இப்படி வெறும் கையை வைச்சுண்டு முழம் போட்டா முடியுமா??" என அமிர்தா சத்தம் போட, ராமமூர்த்தி தலை குனிந்தபடி இருந்தார்.
பைரவி வசந்திடம் என்ன என்று கண்களால் கேட்க, "கார் திருப்தி இல்லையாம்" என அவன் குசுகுசுத்தான்.
அதற்குள் மஹதியும் அங்கே, அவளுடன் இருந்த பெரிய அக்காக்களுடன் மெல்ல மண்டபதுக்கே வந்து பைரவியின் அருகே நின்று என்ன நடக்கிறது என்று பதட்டத்துடன் கேட்க, மெல்ல அவள் காதில் விஷயத்தை ஓதினாள் பைரவி.
மஹதி டாக்டர் விஜய்யை முறைக்க, அவனோ பொறு என அவளை சமாதனப் படுத்த முயன்றான்.
"இங்கே பாருங்கோ, நாங்க கார் கேட்டதுக்கு நீங்க ஒத்துக் கொண்டீங்கோ.. உங்களாலே முடியலேன்னா பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கே சொல்லியிருக்கலாமே.. நாங்க வேறே இடம் பார்த்திருப்போமே.. அவனுக்காக அந்த பிசினஸ்கார வீட்டிலே நடையா நடந்தா என் லேடீஸ் கிளப் மாமி ஒருத்தி.. எதோ பையன் ஆசைப்பட்டான்னு அவாளை நாங்க வேண்டாம்ன்னோம்”..