"மதி... இந்தா சினிமா டிக்கெட்... புதுசா தியேட்டர் கட்டற கான்ட்ராக்ட் கிடைச்சுதே... அந்த தியேட்டர் ஓனரை பார்த்தேன்... அவரோட இன்னொரு தியேட்டர்ல ரிலீஸ் ஆயிருக்க புதுப் படத்துக்கு 3 டிக்கெட் குடுத்தாரு... நீங்க போய் பார்த்துட்டு வந்துடுங்க..."
"என்னங்க... 3 டிக்கெட் தானா...?? நாங்க நாலு பேரு இருக்கோமே... அதில்லாம இன்னிக்கு மதியானம் ஷோக்கு டிக்கெட் இருக்கு... நானும் சுஜாதாவும் நாங்க வளர்ந்த ஆசிரமத்துக்கு போய்ட்டு வரலாம்ன்னு பார்த்தோம்..."
"என்னை என்ன பண்ண சொல்ற..?? எப்பயாவது என்னை அவர் பார்த்தா நாம 3 பேர் போகத்தானே டிக்கெட் குடுப்பாரு... இப்ப போய் நான் சும்மா கொடுக்கற டிக்கெட்டை இத்தனை பேருக்குன்னு கணக்கு போட்டா வாங்க முடியும்..."
"இப்ப என்னங்க பண்றது..."
"மதி... ஒன்னு செய், நீ யுக்தாவையும் பிரணதியையும் கூட்டிகிட்டு சினிமாக்கு போ.. நாம இன்னொரு நாள் போகலாம்.."
"என்ன சுஜா... உன்னை விட்டுட்டு போகறதா... நம்ம இன்னொரு டிக்கெட் எடுத்துகலாம்ன்னா கூட ஒரே இடத்தில் எல்லோரும் உட்கார முடியாதே... என்னங்க பேசாமல் நீங்க பசங்களை கூட்டிக்கிட்டு போய்ட்டு வாங்க..."
"எனக்கு முக்கியமான வேலை இருக்கு மதி... ஒரு புது கான்ட்ராக்ட் விஷயமா ஒருத்தரை பார்க்கனும்... பிருத்வி கிட்ட நானே போய் பாக்கறேன்னு சொல்லிட்டேன்"
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே... பிருத்வி அங்கு வந்தான்..
"அம்மா... உங்கக் கிட்ட பேங்க்ல இருந்து பணம் கொண்டு வந்து கொடுத்தேனே... அதை எடுத்துட்டு வாங்க... செங்கலும் சிமெண்டும் கம்மியா இருக்கு... நேர்ல பார்த்து சொல்லிட்டு அப்படியே கொடுக்க வேண்டிய அமௌண்டும் செட்டில் பண்ணிட்டு வந்துட்றேன்.."
"பிருத்வி... இந்த வேலை முடிஞ்சதும் என்னப் பண்ண போற..."
"வேலை முடிஞ்சதும் ஆபிஸ்க்கு போகனும்ப்பா..."
"பேசாம இந்த வேலை முடிஞ்சதும்... நீ வீட்டுக்கு வா.. யுக்தா, பிரணதி கூட துணையா சினிமாக்கு போய்ட்டு வா.."
"நானா..?? வேலை இருக்க டைம்ல சினிமாக்கா..?? ஏன்ப்பா அம்மா அத்தை இவங்க ரெண்டுபேரும் கூட போகட்டுமே..."
"மூனு டிக்கெட் தான் இருக்கு பிருத்வி... அதில்லாம மதியும் சுஜாவும் ஆசிரமத்துக்கு போக பிளான் வச்சிருக்காங்க... என்ன கூட்டிட்டு போக சொன்னா உங்க அம்மா... எனக்கு எதுக்கு இப்போ சினிமா... எனக்கு பதிலா நீ அவங்களை கூட்டிட்டு போ... நாங்கெல்லாம் சினிமா போனா கூட நீ வேலையிருக்குன்னு வரமாட்டல்ல.. உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்... நான் ஆஃபிஸ்க்கு போறேன்..."
"ம்ம்.. சரிப்பா..."
"என்ன யுக்தா... நீயும் பிரணதியும் பிருத்வி கூட போய்ட்டு வாங்க..."
"........"
"யுக்தா... என்ன அத்தை கேக்கறாங்க... நீ அமைதியா இருக்க..."
"அம்மா... கவி இல்லாம சினிமாக்கா...??"
"என்ன யுக்தா... கவி இப்போ ஆஃபிஸ்ல இருக்கா.. நீ இவங்க கூட போய்ட்டு வா... ஏதாவது ஒரு சண்டேல எல்லாருக்கும் டிக்கெட் ரிசர்வ் பண்ணி ஒன்னா போகலாம்..."
"ம்ம்.. சரிம்மா.."
"யுக்தா நீயும் பிரணதியும் 11 மணிக்கு ரெடியா இருங்க... நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்..." சொல்லிவிட்டு பிருத்வி கிளம்பிவிட்டான்.
அதன்பிறகு யுக்தா ரெடியாக இருந்தாள்... பிரணதி கம்ப்யூட்டர் கிளாஸுல் இருக்க வேண்டி இருந்ததால் அவளை நேராக வந்து அங்கேயே அழைத்து கொண்டு போகுமாறு சொல்லிவிட்டாள்... பிருத்வி வந்ததும் இருவரும் கிளம்பினார்கள்... அங்கே பிரணதிக்கு வேலை முடியாததால் சிறிது நேரம் அங்கு காத்திருக்க வேண்டியதாயிற்று...
"யுக்தா... பிரணதி வர இன்னும் 15 மினிட்ஸ் ஆகுமாம்..."
"என்ன பிருத்வி... அப்புறம் சினிமாக்கு டைம் ஆயிடாதா..."
"இல்லை யுக்தா... இப்போ 11.30 தானே ஆகுது... நாம 12 மணிக்கு கிளம்பினா கூட அங்கப் போயிடலாம்... இந்த டைம் ட்ராஃபிக் அவ்வளவா இருக்காது...
அப்படியே லேட் ஆனாக் கூட எனக்கு ஒன்னும் இல்ல... பிரணாக்கு தான் படத்தை ஃபர்ஸ்ட்லே இருந்து பார்க்கனும்..."
"எனக்கு கூட பிரச்சினையில்லை பிருத்வி.. அதுவரைக்கும் இங்கத் தான் வெய்ட் பண்ணனுமா..."
"இல்லை கார் இங்கேயே இருக்கட்டும்... பக்கத்துல தானே முருகன் கோவில் இருக்கு... நாம அங்கப் போய் வெய்ட் பண்ணலாம்... பிரணதி கிளாஸ் முடிஞ்சதும்... நமக்கு ஃபோன் பண்ணுவா..."
"பிருத்வி வடபழனி முருகன் கோவில் இங்கேயா இருக்கு..."
"நாம இருக்கறது வடபழனி தானே அப்போ முருகன் கோவில் இங்கத் தானே இருக்கும்..." பேசிக் கொண்டே நடந்து சென்றனர்.