27. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி
டெல்லி..!
காவியதர்ஷினியின் நினைவு பெட்டகத்தில் பெரும் பகுதியை பெற்றுள்ள களம். எங்கு பார்த்தாலும் , அவளது அன்பு தந்தையுடன் அவள் செலவழித்த தருணங்கள் கண் முன்னே நின்றன. குளிர் காற்று முகத்தில் அறையவும், அதை புன்னகையுடன் வரவேற்று நடந்தாள் அவள்.
எப்போதும் கண்களில் சோகமுடன் அங்கு வருபவள் இந்த முறை நிமிர்வுடன் இருந்தாள்.தன் ப்ரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விட்ட தெளிவா?, மதியழகன்,ஷக்தி போன்று அன்பு உறவுகள் கிடைத்த சந்தோஷமா?, தந்தைக்கு நிகரான அவரது நண்பர் ஜெயராஜை பார்க்க போகிறோம் என்ற உற்சாகமா ? இல்ல இதையெல்லாம் தாண்டி அதிகாலையில் அவளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்த கதிரேசனின் விழிகளில் இருந்த தவிப்பா ? ஏதோ ஒன்று பழைய காவியதர்ஷினியை கொண்டு வந்திருந்தது… தூரத்திலிருந்து கைக்காட்டிய ஜெயராஜ் அவர்களுக்கு பதிலுக்கு கைகாட்டினாள் அவள்..
“ ஜெய் அப்பா”
“வாம்மா காவியா “
“இப்போவாச்சும் என்னை பார்க்கணும்னு தோனிருச்சே உனக்கு..”
“என்னப்பா,இப்படி எல்லாம் கேக்குறிங்க? உங்களை நேரில் பார்க்கலன்னாலும் நாந்தான் டெய்லி ஃபோன்ல பேசுறேன்ல?”
“ ம்ம்ம்ம் என்னைவிட சந்திரா தான் உன்மேல வருத்தமா இருக்கா!”
“என் மேல வருத்தமா இருக்குற சந்திராம்மாவை எப்படி சமாளிக்கிறேன்னு நீங்களே வீட்டுக்கு வந்து பாருங்கப்பா” என்றவள் அவருடன் இணைந்து நடந்தாள்.. ஜெயராஜ், காவியாவின் தந்தையின் நண்பர். பிள்ளை செல்வம் இல்லாத அவருக்கு காவியா தான் அன்பு மகளாகவும் இருந்தாள். நண்பனின் மறைவுக்கு பின்னர் அவரின் தொழில்கள் அனைத்தும் ஜெயராஜின் மேற்பார்வையில் தான் நடக்கிறது…
“ இன்னைகே நீ ஆஃபிஸ் வரனுமா காவியாம்மா ?”
“ அடடே இல்லப்பா… சந்திராம்மா சமையலை ஒரு பிடி பிடிச்சிட்டு, உங்க சோக கதையை எல்லாம் கேட்டு முடிச்சிட்டு, ரெண்டு நாள் நல்லாஷாப்பிங்க் பண்ணிட்டு அதுக்கு அப்பறம் தான் நான் ஆஃபிஸ் வருவேன் ..சரியா ?” என்றாள் சிரித்தபடி .. தனது மனம் அறிந்து பேசும் மகளை பார்க்க சந்தோஷமாய் இருந்தது அவருக்கும்..
“ இந்த விஷயத்தில் எல்லாம் தெளிவாய் இருக்கியேம்மா.,.. அதே மாதிரி நீ வந்த வேலையையும் கொஞ்சம் யோசிக்கலாமே… இதெல்லாம் தேவைதானா ?”
“கண்டிப்பா தேவை அப்பா..ஒன்னை இழந்தா தானே ஒன்னு கிடைக்கும்? என் நிம்மதிக்காக நான் கொடுக்கப்போகிற விலை இது… கண்டிப்பா அப்பாவும் இதை நினைச்சு சந்தோஷப்படுவார்” என்றாள் அவள்…நண்பனைப்போலவே பிடிவாதம் என்று மனதிற்குள் சொன்னவர் அதற்பின் எதுவும் தடை கூறவில்லை !அவளும் அதற்கு வழிவிடவில்லை…!
“அழகான சின்ன தேவதை
அவள் தானே எங்கள் புன்னகை”மதியழகனின் குரலில் இசைத்தது புவனாவின் செல்ஃபோன். எப்போதும் புன்னகையுடன் ஃபோனை எடுப்பவள் இந்தமுறை, கண்ணில் களவரத்துடன் ஃபோனை எடுத்து பூனையைப்போல பதுங்கி பேசினாள்.
“ஹே……லொ”
“ஹேய் தங்கச்சி “
“ அண்ணா, வெல்கம் டூ சிங்கார சிங்கப்பூர்”
“ ஹா ஹா…நன்றி நன்றி ..நீ எங்க இருக்க ?”
“ நீங்க வர்ரிங்களேன்னு ஏர்போர்ட்க்கு வந்தேன்..ஃப்லைட் டிலே..அதான் லைப்ரரில இருக்கேன்..ஒன்னுல இருந்து நூறு வரைக்கும் எண்ணுங்க தங்கச்சி வரேன் “ என்றவள் கூற,
“வேணாம் வேணாம்,ஒன்னுல இருந்து ஐம்பது வரைக்கும் எண்ணிட்டு வாசலுக்கு வா,அண்ணனின் கார் இருக்கும்” என்று சிரித்து ஃபோனை வைத்தான்.. சொன்னதுபோலவே சில நொடிகளில் வந்திருந்தான் மதியழகன்..
“ அண்ணா…ஆ…ஆ..அ..”
“ தங்கச்சி…சி…சி..இ..இ..”இருவரின் கொஞ்சலையும் சுத்தி உள்ளவர்கள் விநோதமாய் பார்க்க அவர்களை சட்டை செய்யாமல் இருவரும் காரில் ஏறினார்கள்.
“அண்ணா, இங்க வந்தாச்சுன்னு ஹனிமூனுக்கு ஃபோன் போட்டு சொல்லிட்டிங்களா ? இல்லன்னா தங்கச்சியை பார்த்ததும் என்னை மறந்துட்டியா மதுன்னு சண்டைக்கு வருவா”
“ ஹா ஹா அதெல்லாம் உஷாராய் எப்பவோ பேசிட்டேனே.. சரி நம்ம FM PROJECT எந்த லெவல்ல இருக்கு ?” என்றான் மதியழகன்.. ஆம், இந்த வேலையில் புவனாவிற்கும் முக்கியமான பொறுப்புகளை வழங்கி இருந்தான் அவன்.. காதலியின் தோழிதானே என்ற எண்ணம் இல்லாமல், சொந்த தங்கையாகவே அவன் அவளை பாவிக்க, புவனாவின் கடமை உணர்ச்சிக்கும் பாசத்திற்கும் பஞ்சம் இருக்குமா ?
தான் திரட்டிய தகவல்களையும், சந்தேகங்களையும் ஒவ்வொன்றாய் அவள் கேட்க அவனும் பொறுமையாய் பதில் அளித்தான் .. சோர்வு பார்க்காமல் பதில் அளித்த அண்ணனையும், திறமையாய் கேள்விகளை அடுக்கும் தங்கையையும் ஒருவரை ஒருவர் மனதிற்குள் பாராட்டி கொண்டனர்.