"ஒன்னு மாத்திரம் சொல்லறேன்.. எது எப்படியோ, பெற்ற பாசத்தைவிட ,வளர்த்த பாசம் உசத்தி தான்.. நீ எனக்கு பெறாத பிள்ளைன்னாலும், நீதாண்டா இந்த யசோதைக்கு கிருஷ்ணன்.. என்னை நீயும் இதுக்கு மேலே ஒதுக்கிடாதேடா ராஜா.. உங்கப்பா நிச்சயம் என்னை புரிஞ்சிப்பார்.. இல்லாட்டா அதுக்கப்புறம் நான் உசிரோட இருக்கறதுக்கு அவசியமே இல்லை" என கதறி அழ,
"அம்மா.. என்னைக்கும் நீதான் என் அம்மா" வசந்தும் அழ,
முதலில் சுதாரித்தவர் ராமமூர்த்தி தான்.
"சாரதா.. என்ன இது.. பாரு நீ இப்படி அழுதா, பசங்க எல்லாருமே அழறா.. நீ என்னை நம்பலேயேன்னு என் மனசுக்குள்ள சின்ன வருத்தம் தான்.. போனது போகட்டும் விடு.. அன்னிக்கு இருந்த நிலமையில என்னென்னவோ நடந்து போச்சு.. நீ எனக்கு பின்னாடி என்னைக்காவது சொல்லியிருந்தாலும் கூட, நான் தாங்கியிருப்பேனா எனக்கே தெரியலை.. எப்படியோ, நீ எங்க அம்மா ஆசைப்பட்டபடி அவளுக்கு ஒரு பேரனை நெய் பந்தம் பிடிக்க செஞ்சிட்டே.. அதே போதும் எனக்கு.. எப்ப நம்ம வசந்த், எங்க அம்மாவுக்கு பேரனாய், நெய் பந்தம் பிடிச்சானோ, அவன் நம்ம பிள்ளை தான்.. என் பையன் தான்.. அதை இனி யாராலும் மாற்ற முடியாது.. சொல்லிட்டேன்".. என்று வசந்த்தின் தலையை தடவியவர்,
"அம்மாடி பைரவி,... நீயும் என் பொண்ணுதான்.. ஆனாலும் என்ன பண்ணறது, சாரதா சொன்னபடி, இந்த கமலாவின் கண்ணன், இந்த சாரதா வீட்டு நந்த கோபாலனாய் வளரனும்னு விதிச்சிருக்கு.. அதை இனி யாராலும் மாற்ற முடியாது.. நீ என்னோட பொண்ணுதான்.. அதை நான் மறக்கலை.. ஆனா உன்னை பெற்ற அம்மா கமலாவுக்கு மடி பிச்சையா கொடுத்த பின்னாலே மறுபடியும் திரும்பி கேட்டா நன்னா இருக்காது.. எங்களை மாதிரிதானே அவாளும் துடிப்பா"..
"நீயே சொல்லும்மா.. இந்த குடும்பத்துக்கா எவ்வளவோ, நீ இங்கே வந்த நாள்லேயிருந்து செய்திருக்கே.. சின்ன பொண்ணுதான் நீ.. ஆனா ரொம்ப பக்குவபட்ட மனசு உனக்கு.. எப்படிம்மா இத்தனை நாளா, எல்லாம் தெரிஞ்சுண்டும், வாயை திறக்காமலேயே இருந்தே.. முதல்ல ஒரு விஷயத்தை நீ சொல்லனும், உன்னோட அம்மா, அப்பாவிற்கு இதெல்லாம் தெரியுமா?" என ராமூர்த்தி கேட்டார்.
பைரவி பதில் சொல்லுவதற்குள், சாரதா, "கமலாவும், விஸ்வனாதனும் எப்படி இருக்கா பைரவி.. உங்கப்பா உங்கம்மாகிட்ட தன் பையன் உயிரோடு இருக்கறதை சொன்னாரா.. நான் ஏன் இதை கேக்கறேன்னா.. உங்கம்மா உன்னை ஹாஸ்பிடலில் இருந்து எடுத்துண்டு போன பதினைந்து நாள் கழித்து, நான் வசந்துக்கு தடுப்பூசி போட அதே ஹாஸ்பிடலுக்கு மீண்டும் போனேன்.. அங்கே உங்கப்பா ஏதோ உன்னோட பிறப்பு சான்றிதழ் வாங்க வந்திருந்தா.. அந்த சமயத்துலதான் தன் பையன் வசந்த் உயிரோட பிழைச்சதை தெரிஞ்சுண்டார்.. நான் கொஞ்சம் பயந்து தான் போனேன்.. ஏங்கே தன் குழந்தையை கொடுன்னு கேட்பாரோன்னு நினைச்சேன்.. ஆனா அவர், குழந்தை பிழைச்சதுல சந்தோஷம் அடைஞ்சு, கமலாவுக்கு இனி எதுவும் தெரிய வேண்டாம், என்னோட குழந்தையாவே வசந்த் வளரட்டும் என்று சொன்னவர், அடுத்து கொஞ்சம் நாள்ல மாற்றல்ல டில்லிக்கு போறதா சொல்லிவிட்டு போனார்.. அப்புறம் அங்கேயிருந்து அப்படியே அமெரிக்கா போயிருக்கனும்..இதோ, நீ இங்கே இப்போ வரவரைக்கும், எனக்கு உங்களை பற்றி ஒன்னுமே தெரியாது.. எங்கேயோ நீ நன்னாயிருப்பேன்னு நினைச்சுப்பேன்"
"அம்மா.. உங்களை ஒரு வாட்டி அப்படி கூப்பிடறேன்ம்மா.. இனிமேல் நீங்க எனக்கு சாரதாம்மா தான்.. எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை.. அன்னிக்கு உங்களுக்கு சொன்னேனே, திடீரென்று என் கமலாம்மா மயக்கம் போட்டு விழுந்தவுடன், அவாளுக்கு போன் மேரோ டிரான்ஸ்ஃப்ர் செய்யனும் டாக்டர் சொல்லறவரைக்கும் எனக்குமே இந்த விஷயமெல்லாம் ஒண்ணுமே தெரியாது.. அப்பா எங்க இரண்டு பேர் கிட்டேயும் எதுவும் அதுவரை சொன்னதில்லை" என்ற பைரவி,
'என்ன விஷயம், என்னாச்சு' என்று விஜாரித்த மற்றவர்களிடம், தன்னை பற்றியும், தன் பெற்றவர்கள் பற்றியும் முழுமையாக எல்லாவற்றையும் சொன்னாள்.
தன் தாய்க்கு வந்திருக்கும் நோய், அவரை காப்பாற்ற தனது டிஷ்யூ அணுக்களை கொடுப்பதற்கு தன்னை பரிசோதித்து தங்கள் இருவரது மரபணுக்குள் பொருந்தாதது என்று அனைத்தையும் சொன்னவள், தன் தாயுடன் உடன் பிறந்த சகோதரன், தன் மாமாவை ஏன் இதன் சம்மந்தமாக அணுகக் கூடாது என்று யோசித்து, தான் தாயாரின் அறையில் அவர் விலாசத்தை தேடப் போனதாக சொன்னவள், அந்த சமயத்தில் கிடைத்த ஒரு பழைய கால டயரியில் தன் தந்தை எல்லாவற்றையும் எழுதி வைத்திருப்பதை படித்துவிட்டு, தன் தந்தையிடமே நேரடியாக கேட்டு, தன் பிறப்பு, வசந்தின் பிறப்பு, தனது அண்ணன் வசந்த் இன்னும் உயிரோடு இருப்பது எல்லாவற்றையும் தெரிந்து கொண்டதாக சொன்னாள்.
"சாரதாம்மா, ராமுப்பா, .. எங்க அம்மாவை காப்பாற்றுவீங்களா?.. அன்னைக்கு என் கமலா அம்மா உங்க கிட்ட குழந்தை வேண்டும் எனறு மடிப்பிச்சை கேட்டார்.. ஆனா இன்னிக்கு, நான் எங்கம்மாவை காப்பாற்ற, அவங்க வயிற்றிலே பிறந்த வசந்தை, என் அண்ணனை திரும்பி தருவீங்களான்னு கேட்கிறேன்.. நான் எங்கம்மாவை காப்பாற்றத்தான் இந்தியாவுக்கு வசந்தை தேடி வந்தேன்.. எனக்கு கலா உதவினாள்.. அவளுக்கு இதெல்லாம் தெரியாது.. பாட்டு கிளாஸ்ன்னு சொல்லி உங்க குடும்பத்துல நுழைஞ்சேன்.. அஜய்க்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும்.. என்னோடு சேர்ந்து இண்டர் நெட்டில் உங்களை பற்றி விஜாரிக்க அவன் தான் உதவி செஞ்சான்"..
"இப்போ சொல்லுங்கோ... வசந்தை என்னோட அனுப்பிவிங்களா?... எங்க அம்மாவை காப்பாற்றி என் கிட்ட தருவீங்களா?" என அவர்கள் சாரதா-ராமமூர்த்தி கைகளை பற்றிக் கொண்டாள் பைரவி.
{kunena_discuss:909}