“உங்கள என்ன சொல்றதுன்னு தெரியலைம்மா. பூனை கூட ஒரு தரம் சூடு பட்டா சுதாரிச்சிக்கும். ஆனா நீங்க.....”
“என்ன பண்ணம்மா, அந்த அளவு அவர் திருந்திட்டா மாதிரி நடிச்சார். இன்னும் நான் ஏமாந்த கதையை மேல சொல்றேன் கேளுங்க.... இப்படி குடும்ப செலவுக்கே ததிங்கினத்தோம் போடும்போது எங்க இருந்து சுற்றுலாவுக்கு கொடுக்க, அதெல்லாம் முடியாதுன்னு விமலாக்கிட்ட நான் சொல்ல, விமலா பணம் கிடைக்காததால வந்த கோவத்துல கத்தித் தீர்த்துட்டா. அவங்க அப்பா கடைல இருந்து வந்தவுடனே... தான் போயே ஆகணும், இல்லைன்னா தன் கிளாஸ் பசங்க மத்தியில ரொம்பத் தலைகுனிவா போய்டும்ன்னு ஒரே கத்தல், அழுகை. விமலா குணம் எனக்குத்தான் சரியாத் தெரியலை ஆனா அவருக்கு தெரிஞ்சு இருக்கு. பணத்துக்காக எது வேணா செய்வான்னு. அவர் அவளை வெளில கூட்டிட்டுப் போயிட்டு இப்போ அவர் பண்றதை சொல்லி, அதுல அவர் எதிர்பார்த்த அளவு பணம் வராததையும் சொல்லி, இதையே அவ காலேஜ்ல போதை மருந்து விக்கறதால எத்தனை சீக்கிரம் சம்பாதிக்கலாம் அப்படின்னு உரு ஏத்தி இருக்கார். இவளும் மத்தவங்க மத்தில தானும் பணக்காரியா வலம் வரணும்ன்னு, அவங்க அப்பா சொல்றதுக்கு ஒத்துக்கிட்டு இருக்கா”
“ஓ பெண்ணின் பேராசைய உங்கக் கணவர் கரெக்டா உபயோகப்படுத்தி இருக்கார். ஆனா அவ சுற்றுலா போனபோது பணம் எங்க இருந்து வந்ததுன்னு நீங்க உங்க கணவர் கிட்ட கேக்கலையா”, அது எப்படி வீட்டில் இருக்கும் மனைவிக்கு தன் கணவன் செய்த திருட்டுத்தனம் தெரியாமல் போனது என்று இன்னும் நம்ப முடியாமல் கேட்டாள் தேவி.
“அவதான் போகவே இல்லையே. அவ நல்ல நேரமா, இல்லை என் கணவர் பணத்துக்கு நல்ல நேரமா தெரியலை, மறுநாள் காலேஜ் மாடிப்படில ஸ்லிப் ஆகி அவளுக்கு லேசா கால் எலும்புல ஹேர்லைன் கிராக் ஆகிருச்சு. கிட்டத்தட்ட ரெண்டு வாரம் போல டாக்டர் ரெஸ்ட்ல இருக்க சொல்லிட்டாரு. அதுக்கப்பறமும் ஒரு மாசத்துக்கு, ரொம்ப நடக்காம பார்த்துக்க சொல்லி இருந்தாரு. அந்த நேரம்தான் அவங்க காலேஜ்ல சுற்றுலா போறதா இருந்தது. so இவ போகலை. இவளுக்கு கால் முழுக்க குணமான பிறகுதான், மறுபடி அவங்க அப்பா அவக்கிட்ட பேசி அவ வழியா காலேஜ்ல போதை மருந்து supply பண்ண ஆரம்பிச்சு இருக்கா”
“காலேஜ்க்குள்ள இப்போலாம் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்களேம்மா. எப்படி உங்க பொண்ணால தைரியமா பண்ண முடிஞ்சுது”
“அவ காலேஜ்ல விக்கலைம்மா. தேவைப்படறவங்களை இவரோட கடைக்கு அனுப்பி வைச்சுடுவா. அதுலயும் அவ ரொம்ப கவனமாத்தான் இருந்து இருக்கா. அது எப்படி திருட்டுத்தனம் பன்றவங்களுக்கெல்லாம் சாமர்த்தியம் வருதோ, தெரியல... யார் இந்த மாதிரி போதை மருந்துக்கு அடிமை ஆவாங்கன்னு பார்த்து செலக்ட் பண்ணித்தான் அவ காண்டக்ட் பண்ணி இருக்கா”
“ஹ்ம்ம் இத்தனை ஜாக்கிரதையா இருந்தும் ஏதோ ஒரு விதத்துல ஸ்ரீதர்கிட்ட மாட்டி இருக்காங்க இவங்க ரெண்டு பேரும். ஸ்ரீதர் வீட்டுல இருந்து என்ன எவிடென்ஸ் கொடுத்தாங்க தெரியுமா”
“ஸ்ரீதர் அப்பா ஒரு கவர்ல போட்டு என் கணவர்கிட்ட கொடுத்தார். அவர் அதை வாங்கி உள்ள வச்சுட்டாரு. என்கிட்ட காட்டக்கூட இல்லை. அதைக் கொடுத்துட்டு திருமணத்தை நிறுத்த சொல்லிட்டு போய்ட்டாங்க. அதுக்கப்பறம் நான் அழுது கட்டாயப்படுத்திக் கேட்டப்பறம்தான் என்கிட்டே அவர் இத்தனை கதையும் சொன்னது”
“ஹ்ம்ம் சரி, பொதுவா இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யறவங்க கல்யாணம் அப்படினெல்லாம் மாட்டிக்க மாட்டாங்களே. ஸ்ரீதர் வீட்டு சம்மந்தம் எப்படி வந்தது”
“விமலாக்கு வேலை கிடைச்ச உடனேயே நான் அவளுக்கு கல்யாணம் செய்யலாம்ன்னு அவங்க அப்பாக்கிட்ட ஆரம்பிச்சேன். முதல்ல அதெல்லாம் இப்போ முடியாதுன்னு ரெண்டு பேரும் மறுத்தாங்க. நான் தொடர்ந்து வற்புறுத்திட்டே இருந்தேன். மறுத்துட்டே இருந்தவங்க என்னோட பிடுங்கல் தாங்காம ஒத்துக்கிட்டாங்க. ஆனா அவங்க அப்பா அவளுக்கு நான்தான் மாப்பிள்ளை பார்ப்பேன், அதுக்கு ஒத்துக்கிட்டா மேலப் பேசலாம்ன்னு சொல்லிட்டாரு. நானும் அவ குணத்துக்கு அவங்க அப்பா பார்த்தாதான் சரியா வரும்ன்னு விட்டுட்டேன். அவரும் ரொம்ப ஆர்வமா மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சார். கிட்டத்தட்ட ஒரு வருஷம் சல்லடை போட்டு சலிச்சார். அப்பத்தான் ஒரு நாள் ஸ்ரீதர் ஜாதகம் ஒரு கல்யாண தகவல் நிலையம் வழியா கிடைச்சுதுன்னு கொண்டு வந்தார். அப்பறம் அவங்களைப் பத்தி விசாரிச்சு எல்லாம் ஒத்து வரும்ன்னு தோணின அப்பறம்தான் அவங்களை பொண்ணு பார்க்க வர சொல்லி, நிச்சயம் வரை வந்தது”